Tuesday, December 27, 2011

சனிப் பெயர்ச்சி! ஊரானின் கணிப்பு பலித்தது!

21.12.2011 அன்று சனிபகவான் துலா ராசி வீட்டிற்கு குடி போயிருக்கிறார். அவர் பால் காய்ச்சிய சம்பவம் ஜோதிட நம்பிக்கைக்காரர்களுக்கு மிக முக்கியமான நாள். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ராசிக்காரருக்கும் என்னவெல்லாம் நடக்கும் என்பதைப் பற்றியும், பாதகமானவற்றிற்கான பரிகாரங்கள் பற்றியும் பிரபல ஜோதிடர்கள் சொல்லும் சனிப்பெயர்ச்சி பலன்கள் மீது மக்கள் அதீத நம்பிக்கை வைத்துள்ளனர்.

இந்தச் சூழலில், சனி பகவான் பால் காய்ச்சப் போகிறார்!, சனி பகவான் பால் காய்ச்சப் போகிறார்! ........நேற்றைய தொடர்ச்சி! என்ற தலைப்புகளில் ஒரு தொடர் கட்டுரையை இரண்டு நாட்கள் வெளியிட்டிருந்தோம். நமது பார்வையில் சனிப் பெயர்ச்சி பலன்களை கணித்திருந்தோம்.


கட்டுரையின் இறுதியில்


"இறுதியாக, எல்லா ராசிகளிலும் இருக்கும் ஐயப்ப பக்தகோடிகளுக்கு! முல்லைப் பெரியரால் ஐயப்பனுக்கு இனி மாலை போட முடியாதோ எனக் கவலைப்படத் தேவையில்லை. இங்குள்ள முருகனே அங்கு ஐயப்பனாய் எழுந்தருளியிருப்பதால் முருகனுக்கு மாலை போட்டு, அறுபடை வீடுகளில் ஏதாவதொரு வீட்டில் இருமுடியை இறக்கி வைத்தாலே போதும் என புராண சாஸ்திரம் வழிகாட்டுவதால் இனி சொந்த மண்ணிலேயே இருமுடி இறக்கிக் கொள்ளலாம். இருமுடி செலவையும் அரசே ஏற்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதால் ஐயப்ப பக்தகோடிகள் "சாமியேய்! சரணம் முருகப்பா!!" என இனி முழங்கலாம்"

என முடித்திருந்தோம்.

”ஊரான் அவர்கள் கணித்த ராசி பலன்கள் அருமையிலும் அருமை. இந்தக்கணிப்பு படிதான் நடக்கும். நடந்து கொண்டும் இருக்கும். வாழ்த்துக்கள்” என வலிபோக்கன் அவர்களும் வழி மொழிந்திருந்தார்.

ஒரு வாரம் கூட ஆகவில்லை. நமது கணிப்பு பலித்துவிட்டது.

முல்லைப் பெரியாறு விவகாரம் காரணமாக கேரள மாநிலத்தில் பதற்றம் நிலவுவதால் "தமிழக கோயில்களிலேயே ஐயப்ப பக்தர்கள் விரதத்தை முடித்துக் கொள்ளலாம்' (http://www.dinamani.com/edition/Story.aspx?) என அகில உலக ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்ப  மிஷன் நிறுவனர் ராஜமங்கலம் கூறியுள்ளார்


"சபரிமலை செல்ல முடியாத நிலை தமிழக கோயில்களிலேயே பக்தர்கள் வழிபடலாம் திருவாவடுதுறை ஆதீனம் பேட்டி!"  (http://wap.dinakaran.com/District_detail_2011.asp?Nid=25288

"சபரி மலை செல்ல முடியாத நிலை உள்ளதால் தமிழகத்தில் உள்ள கோயில்களிலேயே பக்தர்கள் வழிபடலாம் என்று திருவாவடுதுறை ஆதீனம் 23 வது குருமகா சன்னிதானம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்தார்"

"கேரளாவில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதால் சபரிமலைக்கு செல்ல முடியாத பக்தர்கள் தமிழகத்தில் உள்ள கோயில்களில் வழிபாடு செய்யலாம். அதனை கடவுள் ஐய்யப்பனும் ஏற்றுக்கொள்வார்என மேலும் விளக்கமளித்துள்ளார்.

'மகான்'களும், 'பராமாச்சாரி'யர்களும் சொல்வதற்கு முன்பே நாம்தான் முதன் முதலில் சரியாக கணித்திருக்கிறோம். எனவே எல்லா ராசிக்காரர்களும் எமது கணிப்பை நம்பித்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை! இனி எமது மற்ற கணிப்புகளும் பலிக்கும் என்பதால் அந்ததந்த ராசிக்கார்கள் தங்களுக்குரிய பரிகாரங்களைச் செய்ய தாயாராகுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Wednesday, December 21, 2011

சனி பகவான் பால் காய்ச்சப் போகிறார்! ........நேற்றைய தொடர்ச்சி!

சனிபகவான் இன்று பால் காய்ச்சிவிட்டு புது வீட்டிற்கு குடிபெயர்ந்துவிட்டார்.  மன்னார்குடி சசிப் பெயர்ச்சியும், இன்றைய சனி பெயர்ச்சியும்  அடுத்தடுத்து நடந்தேறியுள்ளதால் தமிழகத்தில் வரும் நாட்களில் ராசிபலன்களில் பெறும் மாற்றங்கள் ஏற்படும் என ஜோதிட வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

மேஷம், ரிஷபம், மிதுனம் மற்றும் கடக ராசிக்காரர்களுக்கான பலன்களை நேற்று பார்த்தோம். மற்ற பிற ராசிக்காரர்களுக்கான பலன்களையும் பரிகாரங்களையும் இன்று பார்ப்போம்.

சிம்மம் 

அரசியல் மேடைகளில் சிங்கமென கர்ஜிக்கும் சீமா ராசிக்காரர்களே! அம்மாவின் அறிவிப்புகளையே ஆணைகளாக பாவித்து இதுவரை கர்ஜித்ததைப் போல இனியும் தொடர்ந்து கர்ஜிக்கலாம். ஆனால் மேஷ ராசிக்காரர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் உங்கள் கர்ஜனையை சற்றே அமுக்கி வாசிக்க வேண்டும். 'ஈழம் - கீழம்' என்று எல்லை மீறினால் கம்பி எண்ண வேண்டி வரும். அப்படி ஒரு நிலை ஏற்படுமேயானால் பரிகாரமாக 'தாயே உன்னடி சரணம்! அம்மா தாயே உன்னடி சரணம்!!' என தினமும் போயஸை நோக்கி உரக்க உச்சாடனம் செய்து வந்தால் சிறைக் கம்பிகள் விலகும்.   

கன்னி

செவ்வாய் தோஷ கன்னிகளும், வரதட்சணைக் கொடுக்க வழியின்றி முப்பதுகளிலும் மூன்று முடிச்சுக்காக ஏங்கும் கன்னிகளும் இனி கவலைப்பட வேண்டியதில்லை.திருமண ஏக்கத்தில் இனியும் கவலைப்படக்கூடாது என்பதால் இனி வரும் காலங்களில் அரசே மாப்பிள்ளைகள் இலவசமாக வழங்கவிருக்கிறது. இதுவரை கன்னிகளாக இருந்த நீங்கள் இனி தம்பதி சமேதராய் உலவலாம்.அப்படியும் ஒருசிலருக்கு மாப்பிள்ளைகள் கிடைக்கவில்லை என்றால் தட்சணையோடு புரோகிதரை நாடினால் பரிகாரம் கிடைக்கும்.

துலாம்

மேலே போவோமா இல்லை கீழு விழுவோமா என குழப்பத்தில் இருக்கும் சில்லரை வணிக துலாம் ராசிக்காரர்களே! சில்லரை வணிகத்தில் லாபமா-நட்டமா என குழம்பிப் போயிருந்த உங்களுக்கு இனி அந்நிய முதலீடு வரவிருப்பதால் 'சேல்ஸ்மேன்' வேலை நிச்சயம். சரக்கு 'குடோனில்' படுத்துறங்கவும் பட்டைச் சோறும் உத்தரவாதம் என்பதால் உங்கள் எதிர்காலம் ஓகோவென்றிருக்கும். பட்டைச் சோறு கிடைக்கவில்லை என்றாலும் இருபது கிலோ அரிசி இலவசமாய் கிடைப்பதால் நீங்கள் வருத்தப்பட வேண்யிருக்காது.

விருச்சிகம்

காவல் பணியாற்றும் விருச்சிக ராசிக்காரர்களே! இனி உங்களுக்கு பொற்காலம்தான். உயர் ரக மதுவிற்பனையும் தொடங்கப்பட்டு வருவதால் குடிகாரர்கள் எண்ணிக்கை அதிகமாகும். குடித்தவன் வீதிக்கு வந்துதானே ஆகவேண்டும். அப்படி வரும்போது அவன் கண்டிப்பாக அவனை அறியாமலேயே 'ஓவர் ஸ்பீடில்' வருவான். இந்த வாய்ப்பு உங்களின் வருவாயை அதிகரிக்க உதவும். பிள்ளையின் படிப்பையும் பெண்ணின் திருமணத்தையும் முடிக்க இது போதுமானதாகவே இருக்கும். அப்படியும் போதவில்லை என்றால் பரிகாரமாக நீங்கள் கலால் பிரிவுக்கு மாற்றல் வேண்டி மனு செய்யலாம். மொத்தத்தில் விருச்சிக ராசிக்காரர்கள் மேலும் விருத்தியடைவார்கள்

தனுசு

ஆலைகளில் உழலும் தனுசு ராசிக்காரர்களே! உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்படுத்தி உள்ள ஆலை மூடல் - ஆட்குறைப்பு - ஊதிய வெட்டு பற்றி இனி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. பிள்ளைகளை படிக்க வைக்கவும் பெண்களை கட்டிக் கொடுக்கவும் காசில்லை என்ற வருத்தம் இனி தேவையில்லை. மிதுன ராசிக்காரர்களான உங்கள் பிள்ளைகள் ஆடு மேய்த்தே முன்னேறுவார்கள் என்பதால் உங்களுக்கு படிப்புச் செலவு மிச்சம். கன்னி ராசிக்காரர்களான உங்கள் பெண்பிள்ளைகளுக்கு அரசே இலவசமாக பாப்பிள்ளைகள் கொடுத்துவிடுவதால் இதுவரை நீங்கள் அனுபவித்துவந்த வரன் தேடும் அவஸ்தை இனி அறவே இருக்காது.

மகரம்

வேளாண்மையில் ஈடுபடும் தனுசு ராசிக்காரர்களே! முல்லைப் பெரியாரை இடித்தாலும், பாலாற்றை முடக்கினாலும், மேட்டுர் வற்றினாலும் நீங்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டியதில்லை. ஆற்று நீரை நம்பி இதுவரை வேதனைகளை அனுபவித்து வந்த நீங்கள் இனி அதிலிருந்து விடுபடுவீர்கள். தமிழகமே மேய்ச்சல் நிலமாக மாறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதால் ஆடு - மாடுகளை வளர்த்து பயன் பெறுவீர்கள். கறிக்காக மாடுகள் கேரளா செல்வதும் தடுக்கப்படும் என்பதால் பசுக்கள் பாதுகாக்கப்பட்டு பால் உற்பத்தி அதிகரிக்கும். மேஷ ராசிக்காரர்கள் கெட்டித் தயிரையும் வெண்ணையையும் எடுத்துக் கொண்டாலும் உங்களுக்கு மோர் நிச்சயம். மோர் அதிகமாக புளித்துப் போனால் பரிகாரமாக தேத்தாங் கொட்டையையை அதில் போட்டுவைத்தால் தெளிந்த மோர் கிடைக்க வழி ஏற்படும்.

கும்பம்

கும்ப ராசி தாய்மார்களே! தமிழகத்தில் தற்போது உயிரோடு இருக்கும் யாரும் மரணத்தைத் தழுவதற்கும், புதிதாக குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கும் அடுத்த நான்கரை ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளதால்  நீங்கள் பத்துமாதம் சுமந்து குழந்தை பெறும் வேதனையிலிருந்து இனி விடுபடுவீர்கள். 

மீனம்

மீன ராசிக்காரர்களே! மீன்களைத் தேடி கடலுக்குச் செல்லும் நீங்கள் இதுவரை சிங்களக் காடைகளின் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி அடிபட்டு துவண்டு போனீர்கள். ஆனால் இனி இத்தகைய தாக்குதல்களுக்கு நீங்கள் ஆட்பட வேண்டி வராது. சிங்கி உள்ளிட்ட உயர்ரக மீன்கள் உட்பட அனைத்து மீன்களும் இனி கரையை நோக்கி வருவதற்கு வழி ஏற்படும். கரையில் அமர்ந்து கொண்டு தூண்டில் போட்டே இனி மீன்பிடித்துக் கொள்ளலாம். 

மீன்களின் துர்நாற்றம் அக்கிரகாரத்தின் மூக்குகளை துளைப்பதால் மீன்களை தமிழகத்தின் உள்பகுதிக்கு எடுத்துச் செல்லக்கூடாது. இதனால் மொத்த மீன்களையும் நீங்களே சாப்பிடுவதற்கான வழி ஏற்பட்டுள்ளதால் உங்கள் தேக பலம் அதிகரிக்கும். கடற்கரைக்கே வந்து சிங்களவன் அடித்தாலும் நீங்கள் அச்சப்படத் தேவையில்லை. உங்கள் தேக பலத்தால் வேகமாக ஓடிவந்து தமிழகத்தின் உள்பகுதிக்குள் தஞ்சம் புகலாம்.

இறுதியாக, எல்லா ராசிகளிலும் இருக்கும் ஐயப்ப பக்தகோடிகளுக்கு! முல்லைப் பெரியரால் ஐயப்பனுக்கு இனி மாலை போட முடியாதோ எனக் கவலைப்படத் தேவையில்லை. இங்குள்ள முருகனே அங்கு ஐயப்பனாய் எழுந்தருளியிருப்பதால் முருகனுக்கு மாலை போட்டு, அறுபடை வீடுகளில் ஏதாவதொரு வீட்டில் இருமுடியை இறக்கி வைத்தாலே போதும் என புராண சாஸ்திரம் வழிகாட்டுவதால் இனி சொந்த மண்ணிலேயே இருமுடி இறக்கிக் கொள்ளலாம். இருமுடி செலவையும் அரசே ஏற்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதால் ஐயப்ப பக்தகோடிகள் "சாமியேய்! சரணம் முருகப்பா!!" என இனி முழங்கலாம்.

Tuesday, December 20, 2011

சனி பகவான் பால் காய்ச்சப் போகிறார்!

தினக்கூலியோ, மாதச்சம்பளமோ நீங்கள் எப்படி சம்பாதிப்பவராக இருந்தாலும் சொந்த வீட்டுக்காரராய் இருந்தால் வீடு மாற்ற வேண்டிய பிரச்சனை இல்லை. பிள்ளைகள் வளர்ந்து பங்கு கேட்கும்வரை ஒரே வீட்டிலேயே - வேலை நிமித்தமாக வேறு ஊருக்கு மாற்றலாகாதவரை - காலத்தை ஓட்டிவிடலாம். ஆனால் நீங்கள் வாடகை வீட்டில் குடியிருப்பவராய் இருந்தால் தற்போது குடியிருக்கும் வாடகை வீடு எத்தனை நாட்களுக்கு என்று தெரியாது.

 வாடகை வீடு

கணவன்-மனைவி, பிள்ளைகள் என்றால் ஒன்று அல்லது அதிகபட்சம் இரண்டு; இதற்குமேல் இருந்தால் வாடகை வீடு கிடைப்பதே அரிது. எப்போதாவது ஊரிலிருந்து உறவினர்கள் வந்துவிட்டால் 'பாத்ரூம் - கக்கூஸ்' பக்கம் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவசரம் என்றாலும் அடக்கித்தான் ஆகவேண்டும். தெரியாத்தனமாக ஒரே ஒரு முறை ஆய் போய்விட்டால் "சொந்தக்காரங்க வந்து செப்டிக் டேங்கே நிறைந்து விட்டதாக" 'ஹவுஸ் ஹோனர்' கூப்பாடு போடுவார். பிறகு 'செப்டிக் டேங்க்கை' சுத்தம் செய்யும் செலவும் உங்கள் தலையில்தான் விழும். அதனால் சொந்தக்காரர்கள் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது. அப்படியே வந்துவிட்டால் 'பஸ் ஸ்டாண்டிலேயே' பார்த்து, கொடுக்க வேண்டியதைக் கொடுத்துவிட்டு - வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு வழி அனுப்பி வைக்க வேண்டும். அங்கே அவசரத்து ஒதுங்க ஒரு இரண்டு ரூபாய் கொடுத்தால் போதும். 

உணர்ச்சி வேகத்தில் மூன்றாவது குழந்தை வயிற்றில் உருவாகி விட்டால் என்னவாகும்? அப்படி ஒரு நிலை வந்தால் வாடகைக்கு வீடு கிடைப்பது அரிது. அப்படியே கிடைத்தாலும் ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் கிடைக்கும். வேறு இடத்திற்குச் சென்றுவிட்டால் முதல் இரண்டு பிள்ளைகளை எப்படி பள்ளிக்கு அனுப்புவது? அதற்காக ஆட்டோ-வேன்களை நம்ப வேண்டும். இதற்கு கூடுதல் செலவு வேறு. வேலைக்குச் செல்பவராக இருந்தால் மேலும் ஒரு பேருந்தை பிடிக்க வேண்டி வரும்- அதற்காகவும் கூடுதல் செலவு. இப்படி ஒவ்வொரு செலவாகக் கூடி உங்களை நடுத்தெருவுக்கு கொண்டுவந்துவிடும். புதிய சுமைகளை சுமப்பதைவிட பழைய சுமையை இறக்கிவிடுவது - கலைத்துவிடுவது - எவ்வளவோ மேலல்லவா!

சனிப் பெயற்சி

இப்படி வீடு மாற்றுவதில்தான் நமக்கு எத்தனை எத்தனை பிரச்சனைகள்? ஆனால் சனி பகவானுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம். நாளை அவர் பால் காய்ச்சப் போகிறாராம். இதுவரை பக்கத்து விட்டில் குடியிருந்த துலா என்பவரை விரட்டிவிட்டு - பலம் இருந்தால் எதையும் செய்யலாமே - அங்கே குடியேறப் போகிறாராம். பக்கத்து வீட்டுக்காரன் காலி செய்வதற்கு முன்பே திடலடியாக உள்ளே நுழைந்து வெள்ளையெல்லாம் அடித்தாகிவிட்டதாம். பால் காய்ச்சுவதற்கான எல்லா ஏற்பாடுகளும் தயாராகிவிட்டன.
தமிழகமே இந்த பால்காய்ச்சும் விழாவில் பங்கேற்கவிருக்கிறது. இதற்காக தமிழக மக்கள் அனைவருக்கும் செய்தித்தாள்கள்-வார-மாத இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாக ஒரு மாதத்திறகு முன்பிருந்து தற்போதைய கடைசி நேரம் வரை தொடர்ந்து அழைப்புகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த கோலாகலமான பால் காய்ச்சும் நிகழ்ச்சிக்கு சனிப் பெயற்சி என ஆன்றோர்கள் பெயரிட்டுள்ளனர்.

நண்பர்களோ அல்லது உறவினர்களோ பால் சாய்ச்ச அழைக்கும் போது - அவர் குடி மாற்றிப் போவதால் உங்களது வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் எதுவும் வராது என்றாலும் - சம்பிரதாயத்துக்காக தலை காட்டுவது போல சனி பகவான் பால் காய்ச்சுவதை எண்ணி விடாதீர்கள்.

உறவும் - நட்பும் நிரந்தரமானதல்ல. எப்பொழுது வேண்டுமாலும் அதை நீங்கள் முறித்துக் கொள்ளலாம் ஆனால் நீங்கள் பிறக்கும் போதே உங்களது ராசி தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது. இந்த ராசிதான் உங்களது வாழ்க்கையின் சகலத்தையும் தீர்மானிக்கிறது. எனவே நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ராசியை விட்டு விலக முடியாது; அதனுடனான உறவை முறித்துக் கொள்ள முடியாது. இப்படி ராசி வலையில் சிக்கிக் கொண்டவர்கள் சனிப் பெயற்சியை அலட்சியப் படுத்திவிட முடியாது.

நாளை நடைபெறும் பால் காய்ச்சும் நிகழ்ச்சிக்குப் பிறகு 12 ராசிக்காரர்களுக்கும் கிடைக்கப் போகும் சில நற்பலன்களும் பரிகாரங்களும்: 

மேஷ ராசிக்கார்களே! அக்கிரகார வீட்டில் இருந்து கொண்டு மற்றவர்களின் ராசியை தீர்மானிக்கும் அதிகாரத்தை வைத்துள்ள உங்களுக்கு இனி அமோகமான எதிர்காலம்தான். இதுவரை உங்களை அண்டவிடாத மன்னார்குடி ஏழரை நாட்டுச் சனி இன்றோடு வீட்டை விட்டு விரட்டப்பட்டதால் உங்களின் அதிகாரம் எட்டுத்திக்கும் இனி கொடி கட்டிப் பறக்கும்.  ஆனால் அதிகாரத்தை சற்றே நிதானத்துடன் கையாள வேண்டும். அதிகாரப் போட்டியில் உங்களுக்குள் சில நேரங்களில் பிணக்குகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதற்கு பரிகாரமாக நீங்கள் துக்ளக்கால் புகுழ் பெற்ற 'சோ' சாமியை பூஜித்து வர உங்கள் பிணக்குகள் நீங்கும். மொத்தத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு அடுத்த நான்கரை ஆண்டுகளுக்கு வாழ்க்கை பேஷாக இருக்கும்.

ரிஷப (வாகன) ராசிக்கார்களே! பேருந்துகளிலேயே நீங்கள் பயனித்து வருவதால் ஒன்றரை மாதத்துக்கு முன்பு உங்களுக்கு பிடித்த கட்டண உயர்வு என்கிற சனி நீங்க வாய்ப்புகள் குறைவு என்றாலும் அதற்காக துவண்டு விடாதீர்கள். மாதம் ஒருமுறை நீங்கள் திருநள்ளாறு சென்று சனிபகவானை வழிபட வேண்டும். பேருந்து கட்டணம் செலுத்த உங்களுக்கு வழி இல்லை என்றாலும் மாட்டு வண்டியிலாவது சென்றுவர வேண்டும். மாட்டு வண்டிக்கு எங்கே செல்வது என்று கவலைப்பட வேண்டாம். அம்மா கொடுக்கிற கரவல் மாடு ஈன்றும் கன்று காளைாய் வளரும்.  காளை மாட்டு வண்டியில் நீங்கள் படு ஜாலியாய் பாட்டுப் பாடி குஷியாய் வாழ்க்கை பயணத்தைத் தொடரலாம்.

மிதுன ராசிக்காரர்களே! சமச்சீர் கல்லி கிடைத்துவிட்டது என மகிழ்ச்சியில் திளைத்த உங்களுக்கு இனி சற்று கஷ்ட காலம்தான். 'தரமான கல்வி' கிடைத்துவிட்டது என ஒரு பக்கம் மகிழ்ச்சியடைந்தாலும் மேல்படிப்பு படிக்க துட்டு இல்லை என்பதால் நீங்கள் பள்ளிப் படிப்பை தாண்டிச் செல்வது கடினம் என்றாலும் ஆட்டுக் குட்டிகள் உங்களுக்கு இலவசமாகவே கிடைக்கவிருப்பதால் அவற்றை மேய்த்து நீங்கள் எதிர்காலத்தில் ஒளிமயமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.

கடக ராசிக்காரர்களே!நீங்கள் வாழும் ஊழல் வலை மிகவும் பாதுகாப்பானதுதான். ஆனாலும் சில மாதங்களாக அன்னா அசாரே போன்ற குள்ள நரிகள் தங்களின் வாலை நுழைத்து உங்களை பிடிக்க முயற்சி செய்வதைக் கண்டு அச்சப்பட வேண்டாம். அது ஒரு சல சலப்பு நாடகம்தான். ஒரு வேளை அதையும் மீறி வாலை நுழைத்தால் வாலை கடித்து துப்பிவிட்டு வேறு ஒரு பாதுகாப்பான வலையை ஏற்படுத்திக் கொள்வதற்கான திறமை உள்ளவர்கள் நீங்கள் என்பதால் உங்களின் எதிர்காலம் எப்போதும் போல வளமாகவே இருக்கும்.

மற்ற ராசிக்கார்கள் அவசரப்பட வேண்டாம். நாளை சந்திப்போம்.

Saturday, December 17, 2011

பால் வார்த்த தாயே போற்றி! போற்றி!

”அனைத்து ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கு மாநில நிதி ஆணைய மானியமாக 3 ஆயிரத்து 53 கோடியே 45 லட்சத்து 56 ஆயிரம் ரூபாயினை விடுவித்து 
அம்மா ஆணை பிறப்பித்துவிட்டார்.

”ரூ.3 ஆயிரத்து 53 கோடியே 45 லட்சத்து 56 ஆயிரத்தில் இருந்து உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகச் செலவுகள், குடிநீர், தெருவிளக்கு, சுகாதாரம், அடிப்படை வசதிகளை பராமரித்தல், வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் தமிழக குக்கிராமங்களின் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் ஆகியவற்றுக்கு செலவிடப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”இந்த நிதியில் இருந்து ஒவ்வொரு ஊராட்சிக்கும் குறைந்தபட்சம் மாதம் ஒன்றுக்கு ரூ.25,000 வீதம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.3 லட்சம் விடுவிக்கப்படும். ஊராட்சி ஒன்றியங்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.2,50,000 வீதம் ஒரு வருடத்திற்கு ரூ.30 லட்சம் நிதி விடுவிக்கப்படும். இது மட்டுமின்றி பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ளும் வகையில் அனைத்து ஊரக அமைப்புகளுக்கான மாநில நிதி ஆணைய மானியம் மக்கள் தொகைக்கு ஏற்ப விடுவிக்கப்படும்.

"புதிதாக தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் (தாய்) உருவாக்கப்பட்டுள்ளதால் ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குக்கிராமங்களை சென்றடைந்துவிடும். கிராமங்களில் இருந்து மக்கள் நகரங்களை நோக்கி செல்வது முழுவதுமாக தடுக்கப்பட்டுவிடும்.


என்ன? காந்தி கண்ட கிராம ராஜ்ஜியம் கண்களில் தெரிகிறதோ! சற்று பொறுங்கள்!


உள்ளாட்சித் தேர்தல் முடிந்து சில மாதங்கள் உருண்டோடி விட்டன. வாக்குகளைப் பெற வேட்பாளர்கள் வாக்குறுதிகளை மட்டுமல்ல தங்கள் வளத்தையும் சேர்த்தே வாரி இரைத்தார்கள். ஆளும் கட்சி-எதிர் கட்சி என்கிற பாகுபாடின்றி அனைத்து வேட்பாளர்களுமே தங்கள் வசதிக்கேற்ப வாக்காளர்களை கவனித்தார்கள். வழக்கம் போலவே "ஆளும் கட்சிக்காரன் வந்தால்தான் நம்ம ஊருக்கு ஏதாவது செய்வான்" என்கிற நம்பிக்கையில் மக்களும் ஆளும் கட்சியினருக்கே வாக்களித்தனர்.

மற்ற பிற இடங்களில் சாதி - மத பலம் மற்றும் ஆளும் கட்சியினரின் உள்குத்து காரணமாக சில உதிரிக் கட்சிகள் உள்ளிட்ட எதிர் கட்சியினரும் சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர். 

வெற்றிக் களிப்பில் திளைக்கவா இவர்கள் முதல் போட்டார்கள்? போட்ட முதலை குறைந்த பட்சம் மும்மடங்காகவாவது எடுத்தால்தான் தங்களின் எதிர்காலத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும். அரசு கஜானா காலி என அம்மா அடிக்கடி சொல்லி வந்ததால் என்ன செய்வதென்று கையைப் பிசைந்து கொண்டிருந்த பிள்ளைகளுக்கு பால் வார்த்திருக்கிறார் அம்மா. பால் மடி வற்றினாலும் பிள்ளைகள் பட்டினியால் வாடுவதை எந்தத் தாயால்தான் பொறுத்துக் கொள்ள முடியும்? 

தன் பிள்ளைகளுக்கு பால் வார்க்க ஊர்ப் பிள்ளைகளுக்கு பால் ஊத்தினார் - பால்விலை உயர்த்தப்பட்டது. பிள்ளைகளுக்கு தண்ணீர் கலந்த பால் கொடுத்தால் சளி பிடித்துக் கொள்ளுமாம். அதனால் சுண்டக் காய்ச்சிய பால்தான் வேண்டும் என பிள்ளைகள் அடம் பிடிப்பதால் அதற்காக ஆகும் கூடுதல் செலவை ஈடு கட்ட பேருந்திலும் கை வைத்ததால்தான் இப்போது கணிசமாக கல்லாக் கட்ட முடிகிறது. 

இப்போது தினம் தினம் கல்லா நிறைகிறது. பிறகென்ன? போட்ட முதலை பிள்ளைகள் எடுக்க வேண்டாமா? தன்னை அரியணையில் ஏற்றிவிட்ட பிள்ளைகள் குறைந்த பட்சம் போட்ட முதலையாவது எடுக்க வேண்டாமா? அதற்கான வழிதான் "தாய்" திட்டம்.

பிள்ளைகள் இனி சாக்கடையிலும் சந்தனம் எடுப்பார்கள். குடி நீரை பன்னீராக்கி கொப்பளிப்பார்கள். சாலை மேம்பாட்டில் தங்களை மேம்படுத்திக் கொள்வார்கள். தெரு விளக்குகளில் குளிர் காய்வார்கள். மொத்தத்தில் அம்மாவின் ஊட்டச் சத்தால் இனி பிள்ளைகள் வேகமாக வளந்துவிடுவார்கள். பிள்ளைகள் வளர்ந்தால் தானே தாயை கவனிக்க முடியும்.
பிள்ளைகள் இப்போது பாடத் தொடங்கிவிட்டார்கள்.
பால் வார்த்த தாயே போற்றி! போற்றி!
*****
தொடர்புடைய பதிவுகள்:
எட்டப்பர்களை வீழ்த்தாமல் எதிரிகளை ஒழிக்க முடியாது!...
மலத்தைக் கவ்வப் பன்றிகள் படையெடுப்பு!
கொள்ளையடிப்பதில் கெட்டிக்காரன் யார்? வடக்கத்தியானா..

Tuesday, December 13, 2011

கொழந்த அழறதா! வீட்டை மாத்தச் சொல்லு!

எமது தெருவில் புதுத் தம்பதியருக்கு சமீபத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. பிறக்கும் போதே ஒன்றே முக்கால் கிலோகிராம் எடைதான் இருந்தது. பிறந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. அவர்கள் குடியிருக்கும் வீடு சற்றே வசதியானதுதான். ஒரு நடுத்தர வர்க்கத்துக்குரிய வசதிகள் அனைத்தும் அவர்கள் வீட்டில் இருக்கின்றன. அனைத்தும் இருந்தும் என்ன செய்ய?

பச்சிளம் குழந்தை அழுத வண்ணம் உள்ளது. தாய்ப்பாலை குடிக்க மறுக்கிறது. ஆங்கில மருத்துவரைப் பார்க்கிறார்கள். குழந்தையைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு "ஒன்றும் பிரச்சனை இல்லை, படிப்படியாக சரியாகிவிடும்" என்று சொல்லி சில மாத்திரைகளை கொடுத்து அனுப்புகிறார் மருத்துவர்.

கொழந்தை அழறதா! வீட்டை மாத்தச் சொல்லு!

ஒரு வாரம் பார்க்கிறார்கள். குழந்தையின் அழுகை நின்றபாடில்லை. இவர்களுக்கும் அழுகை அழுகையாய் வருகிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரவர்களுக்குத் தெரிந்த ஆலோசனைகளைச் சொல்கிறார்கள். கடைசியில் குழந்தையின் பாட்டி சொன்னபடி ஜோசியரை நாடுகிறார்கள்.

”தற்போது தங்கியிருக்கும் வீட்டு அமைப்பு சரியில்லை, அதனால்தான் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருக்கிறது,  குழந்தை அழுகையை நிறுத்த ஒரே வழி குழந்தையும் தாயும் வேறு வீட்டில் தங்க வேண்டும்” என்கிறார் ஜோசியர்.

மருத்துவராவது குழந்தையைப் பார்த்துவிட்டு மருந்து சொன்னார். ஆனால் ஜோசியரோ குழந்தையையும் பார்க்கவில்லை; வீட்டையும் பார்க்கவில்லை. ஜாதகத்தைப் பார்த்தே தீர்வு சொல்லிவிட்டார். அதையும் நம்பினார்கள். தற்போது நான்கு வீடு தள்ளி இருக்கும் தங்களது நெருங்கிய உறவினர் வீட்டில் தாயும் சேயும் தங்கியுள்ளார்கள். ஆனால் குழந்தை அழுவதை மட்டும் நிறுத்தவில்லை. 

இப்போது புது பிரச்சனை ஒன்று கிளம்பியுள்ளது. "ஏற்கனவே மூனு பொண்ணுங்கள வச்சுகிட்டு, ஒவ்வொருத்தரும் படிக்கிறதுக்கு எடம் பத்தாம கஷ்டப்படறோம். இப்ப இவங்கவேற,  இது எத்தினி நாளிக்கோ" என புலம்ப ஆரம்பித்துவிட்டார் வீட்டோட அம்மா.  

இப்போது இந்த அம்மா தங்களது கஷ்டத்துக்கு ஜோசியரைப் போய்ப் பார்த்தா "இந்த வீடு சரியில்ல. வேற வீட்ல தங்கிக்கங்க" என்று சொல்வாரோ!

அழுகைக்கான காரணத்தை குழந்தையால் சொல்ல முடியாது என்றாலும் அது தற்காலிகமானது. ஆனால் மனிதனின் அழுகை?

அழாத மனிதன் ஒருவனை இவ்வுலகில் காண்பதறிது. வாய்விட்டு ஒருவர் பேசினால் அழுகைக்கான காரணங்களைக் கண்டறிந்து ஆறுதல் சொல்லலாம் அல்லது நோயினால் / காயம் பட்டதனால் வந்த அழுகை என்றால் மருத்துவம் பார்க்கலாம். அழுகை நம் அன்றாட வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒன்றாகிவிட்டது.

அழுகையும் ஹோமியோபதியும்

அறிவுரை கூறும் போது,
தனிமையில் இருக்கும் போது,
கோபம் அடையும் போது,
கவலையில் இருக்கும் போது,
அன்பாய் பிறர் தன்னை அரவணைக்கும் போது,
தன்னோடு பிறர் முரண்படும் போது,
இருட்டைக் காணும் போது,
 நம்பிக்கை இழக்கும் போது,
ஏமாற்றம் அடையும் போது,
உணர்ச்சி வசப்படும் போது,
எதிர் காலத்தை நினைக்கும் போது,
பிறர் தொடர்ந்து தன்னைக் கவனிக்கும் போது,
படபடப்பின் போது,
கனவு காணும் போது,
தான் கேட்டது எதுவும் கிடைக்காத போது,
பிறர் மீது கருணை காட்டும் போது,
பிறர் தனக்கு நன்றி கூறும் போது,
விரத்தியடையும் போது,
தனது துன்ப துயரங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளும் போது,
தனக்குள்ள நோய் பற்றி கூறும் போது

என இப்படி பல்வேறு காரணங்களுக்காக நாம் அழத்தான் செய்கிறோம். இவற்றை எல்லாம் துயரருக்கான (நோயாளிக்கான) குறிகளாக கணக்கில் கொண்டு ஹோமியோபதி மருந்து கொடுத்தால் சரியாகி விடும் என்பது ஹோமியோபதி மருத்துவக் கோட்பாடு.

பேசமுடியாத கைக்குழந்தைகள் சதா அழுத வண்ணம் இருப்பதை பார்க்கிறோம்.குழந்தை எதற்காக அழுகிறது? பசிக்காக அழுகிறதா,  பயத்தினால் அழுகிறதா,  வலியால் அழுகிறதா எனக் கண்டறிவது கடினம்.

காரணம் தெரியாததால்தான் குழந்தையின் அழுகையை நிறுத்த வேறு வீட்டிற்கு தற்காலிகமாக மாறுகிறார்கள்.'ஒரம் வுழுந்திடிச்சி' என உலக்கையை வைத்து பாட்டிமார்கள் 'ஒரம்' எடுக்கிறார்கள்.

ஆனால் குழந்தை அழும் தன்மைகளைக் கண்டறிந்து அதற்குரிய ஹோமியோபதி மருந்தைக் கொடுத்தால் குழந்தையின் அழுகையை நிறுத்த முடியும் என்கின்றனர் ஹோமியோபதி மருத்துவர்கள்.

மனிதன் ஏன் அழுகிறான்?

குழந்தை மட்டும் தொடர்ந்து அழவில்லை. மனிதன் இறக்கும் வரையிலும் அழுது கொண்டுதான் இருக்கிறான். இறந்த பிறகும் பிறரை அழ வைக்கிறான். ஒருவர் இறக்கும் போது அவர் மீதான பாசம் மட்டுமே நம் அழுகைக்குக் காரணமா? இறந்து போனவரை நம்பி வாழ்ந்தவர்கள் இனி என்ன செய்வார்கள் என்ற எதிர்கால அச்சம் நம் அழுகையை அதிகரிக்கிறதா? இப்படி ஒவ்வொரு அழுகைக்கும் உள்ளார்ந்த காரணம் இல்லாமலில்லை.

எல்லோர் மீதும் நமக்குப் பாசம் வருவதில்லை. நமக்கு வேண்டியவர், நம்மைப் போன்றவர் என்கிற பொருளியல், கருத்தியல், உறவு ரீதியானதொரு பிணைப்பு பாசத்திற்கு பெரும் பங்காற்றுகிறது. பாசம் கூட ஒருவித தன்நலத்தின் வெளிப்பாடுதான். இன்றைய சமூகம்  தன்நலத்தைப் வலியுத்துகிறது. தன்நலம் பாசத்திற்கு வித்திடுகிறது. தன்நலமும் பாசமும் பிரிக்க முடியாதவை. தன்நலத்தைப் பேணும் வரை பாசமும் தொடரும். பாசம் தொடரும் வரை அழுகையும் நீடிக்கும். அழுகை வெறும் உணர்வு சார்ந்த ஒன்றல்ல. அது சமூகம் சார்ந்த ஒன்று.

மருந்துகள் அப்போதைக்கான அழுகையை வேண்டுமானால் நிறுத்தலாம். ஆனால் அழுகைக்கான காரணங்கள் புற உலகில் நீடிக்கும் வரை அழுகைக்கு முடிவேது?

Saturday, December 10, 2011

வளாக நேர்காணலும் வேலை வாய்ப்பும்!

அள்ளித் தரும் ஐ.ஐ.டி
அமெரிக்கா கடனின் மூழ்கி இருந்தாலும், ஐரோப்பா பொருளாதாரம் மந்தமடைந்திருந்தாலும் பெரும் தொழில் நிறுவனங்கள் சென்னை ஐ.ஐ.டி மாணவர்களை கொத்திச் செல்கின்றன.
இந்த ஆண்டு வளாக நேர்காணல் நடைபெற்ற டிசம்பர் முதல் நாளில் மொபைல் தொழில் தொடர்பான அமெரிக்க நிறுவனம் ஒன்று மூன்று மாணவர்களுக்கு தலா ரூ.71.34 லட்சம் ஆண்டுச் சம்பளம் தருவதற்கு முன்வந்துள்ளது. அதாவது மாத ஊதியம் சுமார் 6 லட்சம். இப்படி பல்வேறு நிறுவனங்கள் ஐ.ஐ.டி மாணவர்களுக்கு லட்சக் கணக்கில் மாத ஊதியம் தர முன்வந்திருக்கின்றன.
அம்மாடியோவ்! தலை சுற்றுகிறதோ! இப்படி லட்சங்களை அள்ளித் தருவதால்தான் நடுத்தர வர்க்கம் ஐ.ஐ.டி கனவில் மிதக்கிறது. யாருக்குத் தேவை குழந்தையின் மழலை? குழந்தை பேச முற்படும் முன்னரே அதன் கழுத்தைப் பிடித்து பிட்ஜியில் (fitge) தள்ளுகிறார்கள்? இறுதியில் ஐ.ஐ.டி யை எட்டமுடியவில்லை என்றாலும் என்.ஐ.டி (NIT) யையாவது கிட்டியதே என திருப்தியடைகிறார்கள்.
இதற்காக பெற்றோர்கள் படும் பாடு இருக்கிறதே! சொல்லிமாளாது. ஐதராபாத்துக்கு அனுப்பி ஹாஸ்டலில் சேர்ப்பவர்கள் ஒருபக்கம். சென்னையில் சேர்த்து தனி வீடு பார்த்து மனைவியை பிள்ளையோடு அனுப்பி விட்டு வாழ்க்கையின் பாதிநாட்களை 'மேரீடு பேச்சுளர்களாக' காலத்தை தள்ளும் தகப்பன்மார்கள் மற்றொரு பக்கம்.
பெற்றோர்கள் சம்பாதித்ததை பிள்ளைகள் விழுங்கிவிட பிள்ளைகளை பன்னாட்டுக் கம்பெனிகள் விழுங்கிவிடுகின்றன.
உச்சிக் குடுமியும் வளாக நேர்காணலும்
ஆனால் இப்படி எந்த பிரச்சனையும் இல்லாமல் வளாக நேர்காணலில் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பை அள்ளித் தருகிறதாம் ஒரு கல்லூரி. அக்கல்லூரியில் சேர 'பிட்ஜிக்குச்' செல்ல வேண்டாம், 'பிலஸ் டூ' வும் படிக்க வேண்டாம். உச்சிக் குடுமி இருந்தால் போதுமாம். நமக்குத்தான் உச்சிக் குடுமி வைக்க உரிமை இல்லையே. கலைஞரும்தான் நமக்கு உச்சிக்குடுமியை ஒட்ட வைத்துப் பார்த்தார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராக ஆசைப்பட்டார். ஆனால் உச்ச நீதி மன்றத்தில் ஒரிஜினல் குடுமிகள் உலுக்கிய உலுக்கலில் நமது ஒட்டுக் குடுமிகள் உதிர்ந்து போயின.
அது என்ன கல்லூரி? எங்கே இருக்கிறது? என்ன படிப்பு என்று கேட்கிறீர்களா? கர்நாடகாவில் பெங்களூர் – மைசூர் சாலையில் இயங்கும் வேதக்கல்லூரி அது. அங்கு படிக்கும் மாணவர்களுக்கு வளாக நேர்காணல் மூலம் கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் வேலை கிடைத்து விடுகிறதாம். மாதச் சம்பளம் லட்சங்களைத் தாண்டுகிறதாம்.

திருமணமே வேண்டாம் என்று தனியாக வாழ நினைத்தால் வேலை செய்யும் நிறுவனத்திலேயே (கோவில்தான் இவர்களது நிறுவனம்) இலவசமாகத் தங்கிக் கொள்ளலாம். உணவும் இலவசம். அறுசுவை உணவு கிடைக்கவில்லை என்றாலும் பட்டச் சோறு நிச்சயம். திருமணம் செய்து கொண்டு குடும்பத்தோடு வாழ நினைத்தால் அதற்கும் வேலை செய்யும் வளாகத்திலேயே ஏற்பாடு செய்து தரப்படும். எண்ணெய், பருப்பு, காய்கறி, உள்ளிட்ட வீட்டிற்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் காணிக்கையாகவே கிடைத்துவிடும். வாங்கும் சம்பளத்தைத் தொட வேண்டிய அவசியமில்லை. அதை அப்படியே தொடர் வைப்பில் (RD) போட்டுவரலாம்.

நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே வெளிப்பணிகள் செய்வதன் மூலம் மேலும் சில லட்சங்களை சம்பாதிக்க முடியும். இத்தகைய வேலைகளைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வேலை கொடுப்பவர்கள் வீடு தேடி  வருவார்கள். இத்தகைய கிராக்கி ஆண்டு முழுக்க உண்டு. இந்தியாவிலும் இத்தகைய வேலைகள் கிடைக்கின்றன. இங்கே ஆயிரங்களைத்தான் பார்க்க முடியும் ஆனால் வெளிநாடுகளில் லட்சங்களை எளிதில் தொட்டு விடலாம்.


அரசு நிறுவனங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் 'ஆன் டூட்டி ' கிடைக்காதா என ஏங்கும் ஊழியர்களின் புலம்பலைக் கேட்டிருக்கிறோம். ஆனால் அயல் நாட்டுக்கே அனாயசமாய் 'ஆன் டூட்டி' சென்று வரும் உச்சிக் குடுமிகளை பார்த்திருக்கிறீர்களா? எமக்குத் தெரிந்த ஒருவர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு ஒரு மாதம் சிங்கப்பூர் 'ஆன் டூட்டி' சென்று ஒரு லட்சத்தோடு திரும்பி வந்தார். உணவு போக்குவரத்து 'ஃப்ரீ'.

மணிஆட்டி மந்திரம் ஓதும் வேலைக்குத்தான் இத்தனை மவுசு. மற்றவர்களுக்குத் தகுதி இல்லை என்றாலும் ஐ.ஐ.டி வாய்ப்பை இழந்த உச்சிக் குடுமிகள் இதற்கு முயற்சி செய்யலாம்.
பொருளாதார நெருக்கடியும் புரோகிதர் தொழிலும்
பொருளாதார நெருக்கடிகள் அதிகரிக்க அதிகரிக்க இந்தத் தொழிலில் வேலை வாய்ப்பும் அதிகரிக்கிறதாம். பொருளாதார நெருக்கடியால் அமெரிக்கா உட்பட உலகம் முழுவதிலும் பல்வேறு தரப்பினர் வேலையிழந்து, வீடிழந்து வீதிக்கு விரட்டப்பட்டுள்ள நிலையில் அவர்கள்  கோவில்களுக்கு படை எடுப்பதாலும், பரிகாரம் தேடி சடங்குகள் சம்பிரதாயங்களை நாடுவதாலும் மந்திரம் ஓதும் தொழில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளதாக உலகப் பொருளாதார ஆய்வு மைய அறிக்கை கூறுகிறது.
உலகப் பொருளாதார நெருக்கடியால் ஒருபுறம் ஆலை மூடல்-ஆட்குறைப்பு நடக்கும் அதே வேலையில் மந்திரம் ஓதும் தொழிலுக்கு எப்போதும் ஆள் பற்றாக்குறைதான். அதனால்தான் பல் போன கிழங்களுக்குக்கூட ஏக கிராக்கி ஏற்பட்டுள்ளது.
மற்ற தொழில்களில் விருப்ப ஓய்வில் வீட்டுக்கு அனுப்பப்படும் போது மந்திரம் ஓதும் தொழிலில் மட்டும் ஓய்வே கிடையாது. சமீபத்தில் நண்பர் ஒருவரின் புதுமனை புகுவிழாவுக்கு நான் திருவண்ணாமலை சென்றிருந்த போது 76 வயது நிறைந்த முதியவர் மந்திரம் ஓதியதை பார்த்தபோது அது உண்மைதான் என்பது நிரூபணமானது. தள்ளாத வயதிலும் மடியில் தாள்கள் விழுகின்றனவே! இத்தொழிலில் எப்போதும் ‘ஆயிரம் பொன்’தான்.
புதிய பொருளாதாரக் கொள்கை, தாராள மயம், தனியார் மயம், உலக மயம் நீடிக்கும் வரை இந்தத் தொழிலும் செழித்தே வளரும்.
என்ன! நமக்குத்தான் கொடுத்து வைக்கவில்லை!
*****
தொடர்புடைய பதிவுகள்:




Friday, December 9, 2011

மகர ஜோதிக்குத் தடையா?


மகர ஜோதிக்குத் தடையா?

நான் குடியிருக்கும் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் சில மாதங்களுக்கு முன்பு அரசுத்துறை நிறுவனம் ஒன்றில் பணியில் சேர்ந்த திருமணமாகா இளைஞர்கள் சிலர் தங்கியுள்ளனர். ஐ.டி.ஐ படிப்பு முடித்துவிட்டு தனியார் நிறுவனங்களில் மாதம் மூன்றாயிரம் பெறுவதற்கே பத்து-பன்னிரண்டு மணி நேரம் உழைக்க வேண்டிய நிலையில் பலர் அல்லல் படும் போது இவர்களுக்கு கிடைத்துள்ள வேலை கிடைத்தற்கரிய ஒன்று.

ஆனால் இந்த வாய்ப்பை இவர்கள் முறைாயாகப் பயன்படுத்துகிறார்களோ இல்லையோ ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் தங்களது நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு பிரியானியும் மதுவுமாக நாளைக் கழிக்கின்றனர். கை நிறைய ஊதியம் பெறும் இளைஞர்கள் பெரும்பாலும் இப்படித்தான் உள்ளனர் என எனது நண்பர் இத்தகைய இளைஞர்கள் மீது கோபக் கனலை கொட்டித் தீர்த்தார்.

வழக்கம் போல இப்பொழுதும் ஞாயிற்றுக் கிழமைகளில் அவர்கள் கூடுகிறார்கள். என்ன ஆச்சரியம்? இப்பொழுதெல்லாம் பிரியானி-மது எதுவுமே கிடையாது. இதுவரை மதுவில் மகிழ்ச்சியைத் தேடியவர்கள் தற்போது கருப்பு வேட்டியும், கழுத்தில் கருப்புத் துண்டும் என கடுங் குளிரையும் பொருட்படுத்தாமல் புது உற்சாகத்தில் திளைக்கிறார்கள். 

ஆம்! ஐயப்பனுக்கு நடை திறந்த பிறகு தமிழகமே தலைகீழாக மாறிவிட்டது. பெரும்பாலானவர்கள் மதுவுக்கு மட்டுமல்ல மாமிசத்துக்கும் டாட்டா காட்டி விட்டார்கள். துடைப்பக்கட்டையால் அடித்தும் கூட திருந்தாதவர்கள் ஒரு கருப்புத் துண்டால் மதுவைக் கைவிட்டது மனைவி மார்களுக்கு மகிழ்ச்சிதானே.

அரசுக்கு இழப்பு ஆயிரம் கோடிகளில்!

ஆனால் இந்த மாற்றம் இங்குள்ள அரசுக்கு மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மாதம் சுமார் ரூ 3000 கோடிக்கு விற்பனையாகும் டாஸ்மாக் மது விற்பனை தற்போது பெரும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இந்த நிலை தை மாதம் வரை அதாவது மகர ஜோதி முடியும் வரை நீடிக்கும். இரண்டு மாத காலம் என்றாலும் மது விற்பனையால் ஏற்படும் இழப்பு அரசால் ஈடு செய்ய முடியாதது என கருதப்படுகிறது. ஓர் ஆண்டுக்கு மட்டும்தான் இந்த நெருக்கடி என்றால் சமாளித்துக் கொள்ளலாம். ஆனால் இந்த நிலை ஒவ்வொரு ஆண்டும் தொடர்கிற ஒன்று என்பதால் இந்த நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்பது குறித்து விவாதிப்பதற்காக அமைச்சரவைக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டவுள்ளது அரசு.

வழக்கமான குடியர்கள் ஐயப்பனுக்கு மாலை போட்டதால்தான் மதுவிற்பனை குறைந்ததற்கான முக்கியக் காரணம் என்பதால் இதைத் தடுப்பதற்கு சோ உள்ளிட்ட அரசியல் இராஜதந்திரிகளிடம் ஆலோசனை கேட்டுள்ளது அரசு. மகர ஜோதியை தடை செய்யக்கோரி அங்குள்ள அரசு மீது வழக்கு தொடரலாமா என யோசித்து வருகிறது இங்குள்ள அரசு. மகர ஜோதியை தடை செய்துவிட்டால் அங்குள்ள அரசு ஆட்டம் கண்டவிடும் என்பதால் நீதிமன்றத்தின் மூலம் மகர ஜோதியை தடை செய்வது அவ்வளவு சுலபமானதல்ல என சட்ட வல்லுனர்கள் கருதுவதால் ஐயப்பனுக்கு மாலை போடுவதை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வரலாமா எனவும் யோசித்து வருகிறது இங்குள்ள அரசு.

பால் விலை, பேருந்துக் கட்டணம்  மற்றும் மின்கட்டண உயர்வால் ஏற்கனவே மக்களின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளது அரசு. ஒரு இரண்டு மாத காலத்திற்காவது குடிகாரக் கணவனின் கொடுமை இருக்காது என நிம்மதிப் பெருமூச்சு விடும் தாய்மார்கள் அரசின் மேற்கண்ட நடவடிக்கையால் மேலும் அதிருப்திக்குள்ளாவார்கள் என கருதப்படுகிறது. இது மக்களின் கவலை. 

ஆனால் மக்கள் பிரதிநிதிகளின் கவலையோ வேறுவிதமாக இருக்கிறது. தேர்தலில் போட்ட முதலை இலாபத்துடன் எடுக்க மக்கள் பிரதிநிதிகளுக்கு திட்டங்கள் வேண்டாமா? அத்திட்டங்களுக்கு நிதி ஆதாரம் வேண்டாமா? டாஸ்மாக்கை விட்டால் இப்போதைக்கு வேறு வழி ஏது? எனவேதான் ஒன்றியம், வட்டம், மாவட்டம், ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மந்திரிகள் என பல்வேறு துதிபாடிகளும் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் ஐயப்பனின் மகர ஜோதியை தடை செய்ய வேண்டும் என்பதில் குறியாய் இருக்கிறார்களாம். 

கறிக்கோழி விலை கடும்வீழ்ச்சி!

ஐயப்ப பக்தர்கள் அனைவரும் சைவத்துக்கு மாறியதால் மேலும் பல சிக்கல்கள் உருவெடுத்துள்ளன.

ஐயப்பனால் கோழிக்கறி விற்பனை கடும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப் பண்ணை உரிமையாளர்கள் அவசரமாகக் கூடி இது குறித்து விவாதித்துள்ளனர். இரண்டு மாத காலத்திற்கு கோழிகள் போடும் முட்டையை ஐயப்பனே நினைத்தாலும் நிறுத்த முடியாது. போட்ட முட்டைகளை விற்பனை செய்யாமல் வைத்திருக்கவும் முடியாது. இதனால் ஏராளமான முட்டைகள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

உரிய பருவத்தில் கறிக் கோழிகளை விற்பனை செய்யவில்ல என்றால் அவை முதுமையடைந்து முற்றிய பிறகு விற்பனைக்கு உகந்ததாக இருக்காது. மேலும் இரண்டு மாத காலத்திற்கு முட்டை மற்றும் கறிக்கோழி சில்லரை விற்பனையாளர்கள் வருவாய் இழந்து வறுமைக்குத் தள்ளப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது தங்களது வாழ்க்கைப் பிரச்சனை என்பதால் மகர ஜோதியைத் தடை செய்வது அல்லது ஐயப்பனுக்கு மாலை போடுவதை நிரந்தரமாகத் தடை செய்வது குறித்து அரசிடம் முறையிடுவது என முடிவு செய்துள்ளனர்.

மீனவர்கள் பாதிப்பு

கடல் சீற்றம் மற்றும் சிங்களக் காடைகளின் காட்டுமிராண்டித் தாக்குதல்களை எதிர் கொண்டு உயிரைப் பணையம் வைத்து பிடித்து வரும் மீன்களின் விற்பனை ஐயப்பன் ‘சீசனை’யொட்டி வெகுவாகக் குறைந்து விட்டதால் மொத்த விற்பனையாளர்கள் மீன்களை வாங்க மறுக்கின்றனர். இது மீனவர்களின் வாழ்க்கைப் பிரச்சனை. எனவே தங்களது வாழ்வு கேள்விக்குள்ளாகியுள்ளதால் மேற்கண்ட கோரிக்கையை முன்னிறுத்தி அரசிடம் முறையிடுவது என மீனவர்களும் முடிவு செய்துள்ளனர்.

பான்பராக் விற்பனைகூட கனிசமாகக் குறைந்துள்ளதால் பான்பராக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கூடி இது குறித்து முடிவெடுக்க உள்ளதாக செய்திகள் வருகின்றன.

முல்லைப் பெரியார் அணை உடைவதைப் போல தயாரிக்கப்பட்டிருந்த “டேம் 999” திரைப்படத்தை தமிழ் நாட்டில் திரையிட அரசு தடை விதித்துள்ளதைப் போல மகர ஜோதியை தடை செய்வது அல்லது ஐயப்பனுக்கு மாலை போடுவதை நிரந்தரமாகத் தடை செய்வது இதில் ஏதாவது ஒன்றை செய்வதற்கு அரசு தயக்கம் காட்டாது என நம்பப்படுகிறது.

அப்படிச் செய்தால் ஏற்கனவே முல்லைப் பெரியார் பிரச்சனையால் இரு மாநிலங்களுக்கிடையில் முற்றியுள்ள பகைமை மேலும் தீவிரம் அடையும் என்பதால் மத்திய அரசும் இது குறித்து என்ன செய்யலாம் என தீவிரமாக யோசித்து வருவதாக டெல்லி வட்டாரத்திலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இங்கே உள்ள அரசின் மேற்கண்ட நடவடிக்கையால் முல்லைப் பெரியாரா? இல்லை ஐயப்பனா?, எதை முன்னிருத்தினால் அரசியல் ஆதாயம் அடையலாம் என அங்குள்ள அரசியல் கட்சிகள் பெரும் குழப்பதில் இருப்பதாகத் தகவல்.

Wednesday, December 7, 2011

மூனாவதா பொறந்து எவ தாலிய அறுக்கப் போறானோ!

தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி என்பதால் பகல் நேரத்தில் சுறுசுறுப்பாக காணப்படும் தேசிய நெடுஞ்சாலை. அதையொட்டிய தொழிலாளர்கள் வாழும் குடியிருப்பு. 

முன்பு கம்பும்-கடலையும் விளைந்த புஞ்சய் பூமியில் இன்று எங்கு நோக்கினும் கட்டடங்கள். அருகில் உள்ள ஊர்களில் தங்கினால் பேருந்து பிடித்து வேலைக்கு வந்து, பிறகு மீண்டும் வீட்டிற்குச் செல்வது இன்னுமொரு 'ஷிப்ட்' வேலை பார்ப்பது போலுள்ளதால் தொழிற்சாலைக்கு அருகில் தங்குவதற்கே தொழிலாளர்களும் ஊழியர்களும் விரும்புவதால் வாடகை வீடுகளுக்கு ஏக கிராக்கி. 

நெடுக்க நீட்டினால் கால் இடிக்கும்; குறுக்க நீட்டினால் கை மடங்கும். இதுதான் 'பேச்சுலர்'களுக்கான அறைகள். இதற்கு வாடகை ஆயிரங்களில் என்பதால் 'கக்கூசில்'கூட மாடி அமைப்பவர்கள் 'ஹவுஸ் ஓனர்கள்'.

நமது பொருளாதாரப் புலிகள் சொல்வதைப் போல 'சப்ளை அண்ட் டிமாண்ட் 'அதிகம் என்பதால் பெட்ரோல் விலையைப் போல எப்போதும் வாடகை ஏறு முகத்தில்தான். 

வாடகை கொடுத்து கட்டுப்படியாகாது என்பதால் சிரமம் இருந்தாலும் சொந்தமாக வீடு வைத்திருப்பவர்கள் தங்கள் ஊர்களிலிருந்து பேருந்தில்தான் வேலைக்கு வருகிறார்கள். 

அப்படி வந்திறங்கும் தொழிலாளர்களை மட்டுமல்ல, சொந்த வீட்டுக் கனவில் மிதக்கும் பலரின் கண்களையும் உறுத்திக் கொண்டிருக்கும் பேருந்து நிறுத்தத்திற்கு எதிரிலேயே காலியாகக் கிடக்கும் விசாலாமான நிலப்பகுதி. 'பிளாட்' போட்டால் பல லட்சங்களைத் தாண்டும். 

நிலம் யாருக்குச் சொந்தம் என சில பத்து ஆண்டுகளாக நடக்கும் வழக்கு- வாய்தா.வாய்தாவுக்கு நடந்தே கால் தேய்ந்து போன பெண்மணி. சாலையையொட்டி அந்நிலத்தின் மேற்கு முனையில் ஒடிசா பழங்குடியினரை நினைவுபடுத்தும் ஓலைக் குடிசை ஒன்றில் தனது கணவனோடும் ஊணமாய் வீழ்ந்த்துவிட்ட தனது மகனோடும் காலத்தைத் தள்ளுபவர்.

முடவன் நடக்கிறான்-குருடன் பார்க்கிறான்-ஊமை பேசுகிறான் என ஊர் ஊராய் அற்புத சுகமளிக்கும் அங்கிக்காரர்கள் இக்குடிசைக்கு பல முறை படை எடுத்தார்கள். 

மரித்துப் போன கர்த்தர்கூட மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததாக கதைகள் சொல்கிறார்கள். ஆனால் முப்பதாண்டு காலம் படுக்கையை விட்டு எழாமலேயே வளர்ந்த வாலிபனை குறைந்த பட்சம் எழுந்து நிற்க வைத்திருந்தால்கூட கர்த்தர் கருணை உள்ளவர் எனக் கருத வாய்ப்புண்டு. சென்ற ஆண்டு அவன் கட்டிலை விட்டு இறந்கினான் கல்லரை நோக்கிச் செல்வதற்காக. 

 தனது கையே உடைந்தது போல நொறுங்கிப் போனாள் அந்தத்தாய். கணவன் என்கிற மற்றொரு கை இருந்தாலும் அது டான் பாஸ்கோவின் வலது கரமா என்ன போற்றி வணங்க. நடக்கும் போதுகூட அசையாத கணவனின் கைகள். இதையும் சேர்த்தல்லவா தன்னோடு சுமந்து வந்தார். 

உயிர் பிழைக்கவும்,அவ்வப் பொழுது ஓட்டையாகிப் போகும் ஓலைக் குடிசையின் ஓட்டையை அடைக்கவும் பேருந்து நிறுத்தத்திற்கு எதிரில் அவர் நடத்தி வந்த சின்னஞ் சிறிய பெட்டிக்கடை. அதில் கிடைத்த சொற்ப வருவாயில் குடிசையின் ஓட்டை அடைந்ததோ இல்லையோ கணவனின் வயிறு மட்டும் 'குவார்ட்டரால்' நிறைந்து விடும். 

'குவார்ட்டரால்' கணவனின் வயிறு முட்டும் போது அந்தப் பெண்ணின் வயிறு ஒட்டிவிடும். என்ன செய்ய? 'என்னைக்குத்தான் தாலி அறுப்பானோ' என அங்கலாய்ப்பதைத் தவிர வேறெதையும் இச்சமூகம் பெண்களுக்கு வழங்கவில்லையே! 

பெட்டிக்கடையை நம்பினால் இனி பட்டினி கிடந்தே சாக வேண்டும் என எண்ணியதாலோ என்னவோ ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் கோழி இறைச்சி விற்பனை செய்வார். அதில் கிடைக்கும் வருவாயில் வயிற்றைக் கழுவி வந்தார். முதுமையில் முடங்கிப் போகும் போது உதவுமே எனக் கருதி ஒரு சிறு தொகையை சேமிக்கவும் செய்தார். 

திடீரென கணவன் சீக்காகிப் போனான். கொண்டவன் கொடியவன் என்றாலும் அவன் சாவதற்கு மனம் இடம் கொடுக்குமா என்ன? மருத்துவ மனைக்கு தன் சேமிப்புடன் கணவனோடு உள்ளே சென்றவர் வெறுங்கையோடு வெளியே வந்தார். இவர் வீடு வந்து சேர்வதற்குள் கணவனும் “வீடு பேறு“ அடைந்து விட்டான்.

எல்லாம் முடிந்தது. இதுவரை எட்டிப் பார்க்காத உறவுகள் இறுதிச் சடங்கிற்கு வந்தார்கள். இதைச் செய்,  அதைச் செய் என சடங்குகளுக்குச் சொந்தம் கொண்டாடினார்கள். அங்கிக்காரர்களும் வந்தார்கள். 'மூன்றாவதாய் இவர் மீண்டும்  உயிர்த்தெழுவார்' என ஜெபித்தார்கள். 

'மூனாவதா பொறந்து இவன் எவ தாலிய அறுக்கப் போறானோ' என தன் மனதில் ஓடிய எண்ணத்தை அடக்கிக் கொண்டே வழிந்த கண்ணீரை முந்தானையால் ஒத்திக்கொண்டாள்.

Monday, December 5, 2011

நம்புங்கள்! முதலாளித்துவம் இன்னமும் வாழும்!

அயர்லாந்து நாட்டின் சின்னஞ் சிறிய நகரம் அது. மழையும் ஈரமும் கலந்த காலைப் பொழுது. தெருக்களில் மழை நீர் வழிந்தோடுவதால் வீதிகள் வெறிச்சோடி கிடக்கின்றன.  மக்கள் வாழ்க்கையும்தான். அனைவரும் கடனில் மூழ்கியுள்ளனர். கடன் வாங்கித்தான் காலத்தை ஓட்டுகிறார்கள்.

அந்த காலைப் பொழுதில் தனது காரில் பயணித்துக் கொண்டிருந்த ஜெர்மானியர் ஒருவர் ஒரு ஓட்டல் முன்பு காரை நிறுத்துகிறார். அயர்லாந்தின் அழகை ரசிக்க வந்த சுற்றுலாப் பயணி அவர். ஓட்டலுக்குள் சென்று 100 ஈரோவை ஓட்டல் முதலாளியின் மேசை மீது வைத்துவிட்டு "இன்று இரவு இங்கு தங்க வேண்டும். மாடியில் ஒரு வசதியான அறை வேண்டும், அதற்கு முன்பு அறையை பார்வையிட வேண்டும்" என்கிறார். ஓட்டல் முதலாளி சில சாவிகளைக் கொடுக்க, அதை பெற்றுக் கொண்ட பயணி மாடிக்குச் செல்கிறார். 100 ஈரோவை லபக்கென்று எடுத்துக் கொண்டு வேகமாக ஓடிய முதலாளி ஓட்டலுக்குப் பக்கத்திலேயே இருந்த இறைச்சிக் கடைக்காரரிடம் சென்று தனது கடனை அடைக்கிறார்.

கைக்கு வந்த 100 ஈரோவை எடுத்துக் கொண்டு தெரு முனைக்கு ஓடுகிறார் இறைச்சிக் கடைக்கார்.  பன்றி வளர்க்கும் விவசாயியிடம் 100 ஈரோவைக் கொடுத்து தனது கடனை அடைக்கிறார்.

100 ஈரோவை பெற்றுக் கொண்ட விவசாயி பன்றிக்கு வாங்கிய தீவனக் கடனை அடைக்க விரைகிறார். 100 ஈரோவை தீவனக் கடைக்காரரிடம் கொடுத்து கடனை முடிக்கிறார்.

அத்தொகையைப் பெற்றுக் கொண்ட தீவன கடைக்காரர் கேளிக்கையும் விருந்தும் ஒருங்கே கிடைக்கும் பப்புக்கு விரைகிறார். ஏற்கனவே குடித்துத் தீர்த்த மதுக்கடனுக்காக 100 ஈரோவை பப் உரிமையாளரிடம் சேர்க்கிறார்.

தனது பப் சென்ட்டரில் வழக்கமாக மது அருந்தும் விலை மாதுவின் கைகளில் அந்த 100 ஈரோவும் நழுவுகிறது. விலை மாதுவின் தொழிலிலும் நெருக்கடி என்பதால் இப்பொழுதெல்லாம் அவர் தாராள மனதுடன் தனது சேவையை கடனாளிகளுக்கும் விரிவு படுத்தி வருபவர்.

தனது கைகளில் நழுவிய 100 ஈரோவை எடுத்துக் கொண்ட விலை மாது ஓட்டலுக்கு விரைகிறார். ஓட்டல் முதலாளியிடம் அதைக் கொடுத்து தனது அறை வாடகை பாக்கியை அடைக்கிறார்.

வசதி படைத்த ஜெர்மன் பயணி சந்தேகப்படக்கூடாது என்பதற்காக அவசர அவசரமாக அந்த 100 ஈரோவை பழையபடி மேசை மீது வைத்துவிடுகிறார் ஓட்டல் முதலாளி. அந்த நேரத்தில் படிகளில் இறங்கி கீழே வந்த ஜெர்மன் பயணி அந்த 100 ஈரோவை எடுத்துக் கொண்டு "ஓட்டல் அறைகள் திருப்திப் படும்படியாக இல்லை" என்று கூறிவிட்டு நகரை விட்டு வெளியேறுகிறார்.

இங்கே யாரும் எதையும் உற்பத்தி செய்யவும் இல்லை. யாரும் எதையும் சம்பாதிக்கவும் இல்லை.

எனினும் ஒட்டு மொத்த நகரமே இப்போது கடனிலிருந்து விடுபட்டு விட்டதால் இனிமையான எதிர்காலத்தை நோக்கிச் செல்ல விழைகிறது அந்நகரம்.

எனவே, சீமான்களே! சீமாட்டிகளே!

ஆம்.நம்புங்கள்!குப்புற வீழ்ந்தாலும் ஐரோப்பிய மீசையில் மண் ஒட்டவில்லை. இப்படி முதலாளித்துவம் இன்னமும் வாழும்!

Sunday, December 4, 2011

மீண்டும் உச்சத்தில் மல்லிகைப் பூ!

"மதுரை மல்லி கிலோ ஆயிரம் ரூபாய்!" என்ற தலைப்பில் சென்ற ஆண்டு ஒரு இடுகையை வெளியிட்டேன். முதலில் வினவு தளத்தில் வெளியானது. அதன் பிறகு எட்ட முடியாத உச்சத்தில் மல்லிகைப்பூ! என்ற தலைப்பில் ஊரான் வலைப் பூவில் மீள் பதிவு செய்யப்பட்டது.

 ஒரு கிலோ மல்லைகைப் பூவின் நேற்றைய விலை ரூபாய் 1500, இன்றைய விலை ரூ 2000. அப்படியானால் ஒரு முழம் என்ன விலை இருக்கும்? எப்படி கணக்குப் போடுவது? ஒன்றும் விளங்கவில்லை. சரி, இந்த விலை விற்கிறதே அவ்வளவு சாசு கொடுத்து வாங்குவார்களா என ஒரு கணம் யோசித்தேன். பலரின் கூந்தலைப் பார்த்து திகைத்துப் போனேன். இன்று திருமண நாள் என்பதால் திருமணங்களும் புது மனை புகு விழாக்களும் அதிகமாக நடைபெற்றன. மல்லிகைப் பூ இந்த விலை விற்கிறதே என்பதற்காக யாரும் கூந்தலை காயப் போடவில்லை. கொண்டையில் கொத்துக் கொத்தாக பூத்துக் குலுங்கத்தான் செய்தன. 

தலையில் சூடிய ஆறு மணி நேரத்திற்குள் வாடி வதங்கி குப்பைக்குச் செல்லும் மல்லிகைப் பூ இந்த விலை விற்கிறது. என்னக் கொடுமை சார் இது? 

ஒரு பொருளின் பயன்பாடு பற்றியோ அதன் அத்தியாவசியம் பற்றியோ யாரும் கவலைப்படுவதில்லை. உற்பத்தியாளனுக்கும் விற்பனையாளனுக்கும் கை நிறை காசு சேர்ந்தால் சரி. அவன் ஜோலி முடிந்தது.

ஒன்றை நாம் செய்யும் போது அதுவே நம் வழக்கத்திற்கொன்றானதாக மாறிவிட்டால் அதை யாரும் சொல்லாமலேயே செய்வோம். அப்படித்தான் பூச் சூடிக் கொள்வதும். அழகுக்கும் பெண்மைத்தன்மைக்கும் பூ அவசியமானது என பெண்கள் மீது அவர்கள் அறியாமலேயே ஒரு கருத்தியல் திணிக்கப்பட்டுள்ளதால் பெண்ணானவள் பூ அவசியமாதா இல்லையா என்பதைப் பற்றி அறியாமலேயே ஒரு வக்கமான செயலாக பூச்சூடிக் கொள்வதை செய்து வருகிறாள். வழக்கமாகிவிட்ட ஒரு செயலை அதற்கான செலவு அதிகம் என்பதால் அவ்வளவு இலகுவில் அதை விட்டுவிடுவதில்லை. வேண்டுமானால் குறைத்துக் கொள்வார்களே ஒழிய வழக்கத்தைக் கைவிட மாட்டார்கள். 

குடிப்பழக்கம் ஒருவனின் வழக்கமான செயலாக மாறிவிட்டபிறகு ஒரு குவார்ட்டர் ஆயிரம் ரூபாய் என்பதற்காக குடிப்பதை விட்டுவிடுவானா என்ன? குவார்ட்டரை வேண்டுமானால் கட்டிங்காக குறைத்துக் கொள்வானே ஒழிய குடியை விட்டுவிட மாட்டான்.

Friday, December 2, 2011

மழை: அரேபியக் காரனின் கனவும் ஆர்க்காட்டுக்காரனின் கனவும்!


இரண்டாவது முறையாக தமிழகத்தில் வெளுத்து வாங்கிய மழை தற்போது ஓய்ந்துள்ளது. வெளுத்துக் கட்டும் மழையால் தமிழகத்தில் உள்ள அணைகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் நிரம்பினவோ இல்லையோ தொலைக்காட்சிக்காரர்களின் கல்லாப் பெட்டிகள் நிரம்பி வழிகின்றன. எழவு வீட்டிலும் காசு பார்ப்பவர்கள் இந்த மழையை மட்டும் விட்டுவிடுவார்களா என்ன? 

முன்பு நொய்யலாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டவர்களை பேட்டி கண்ட போதும் சரி; தற்போது சென்னை போன்ற பெரு நகரங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் தங்கள் உடமைகளை இழந்த மக்களை பேட்டி காணும் போதும் சரி இத்தகைய இழப்பிற்கு யார் பொறுப்பு என்பதை மிகக் கவனமாகத் தவிர்த்துவிட்டு மக்களின் அவலங்களைக் காசாக்கிக் கொள்கிறார்கள்.

இயற்கையின் சீற்றமா இல்லை அரசின் குற்றமா?

போதிய நீராதாரம் இல்லாத காரணத்தாலும், விவசாய விலை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காமையாலும்  இனி கிராமங்களில் வாழ்க்கையை ஓட்ட முடியாது என்பதனால் கிராம மக்கள் அணி அணியாக நகரங்களுக்குப் படை எடுக்கிறார்கள். கட்டின துணியோடு நகரங்களைச் சென்றடையும் இம்மக்கள் எங்கே தங்குவார்கள்? இவர்களுக்கு முன்பே நகரங்களுக்கு வந்து கிடைக்கின்ற வேலைகளைச் செய்து அவற்றில் கிடைத்த கொஞ்சம் காசில் வயிற்றிற்குப் போக மீதியை மிச்சப்படுத்தி ஏரி ஓரங்களிலும் ஆற்றுப் படுகைகளிலும் குடிசைகளை அமைத்துக் கொண்டு வசிக்கும் தங்கள் தூரத்து உறவினர்கள் அல்லது நண்பர்களின் வசிப்பிடங்களில் புதிதாய் வந்தவர்கள் சில நாட்கள் தங்குகிறார்கள். நான்கு பேர் உட்காரவே முடியாத இத்தகைய ‘வசிப்பிடங்களில்’ எத்தனை நாட்களுக்குத்தான் தங்க முடியும்? பிறகு இவர்களும் அதே பாணியில் ‘வசிப்பிடங்களை’ அமைத்துக் கொள்கின்றனர்.

இப்படிக் குடிசைகளை அமைத்துக் கொள்வதும் அவ்வளவு சுலபமானதல்ல. அரசியல் வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால்தான் இதுவும் சாத்தியம். அதன் பிறகு மின் இணைப்பும், குடும்ப அட்டைகளும், வாக்காளர் அட்டைகளும் கிடைக்க வேண்டுமா? அதற்காகத்தானே அரிப்பெடுத்த கைகளோடு அதிகாரிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ரூபாய்த் தாள்கள் அவர்களின் கைகளை உரசினால் போதும் அவர்களின் அரிப்பும் நின்று போகும். மக்களுக்கு கிடைக்க வேண்டியதும் கிடைத்துவிடும். வாழ்வதற்குத் தேவையான சட்டப்படியான ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாகக் கருதிதான் குடிசைவாசிகள் அவ்விடத்தில் காலத்தைத் தள்ளுகிறார்கள்.

அரசியல்வாதிகள் அதிகாரிகள் ஆசியோடு ஆறுகளிலும் ஏரிகளிலும் வீடுகள் புகுந்து விடுகின்றன. பிறகு மழைக் காலங்களில் இத்தகைய வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து விடுகிறது. இது மழையைப் பொய்வித்த ‘வருண பகவானின்’ குற்றமா? இல்லை ஆறுகளையும் ஏரிகளையும் ஆக்கிரமித்து ‘வீடுகுள்’ கட்டிக்கொண்டது ஏழைகளின் குற்றமா? அல்லது பிழைப்பு தேடி நகரங்களில் குடியேறுபவர்களுக்கு முறையான வசிப்பிடங்களை ஏற்பாடு செய்யாமல் ஆறுகளிலும் ஏரிகளிலும் குடிசைகள் அமைத்துக் கொள்வதற்கு தங்கள் பைகளை நிரப்பிக் கொண்டு அவற்றிற்கு துணைபோகும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் குற்றமா?

ஒரு நாள் பிழைப்பா இல்லை ஓர் ஆண்டு வாழ்வா?

“வேலைக்குச் செல்ல முடியவில்லை,  பால்காரன், பேப்பர்காரன் வரவில்லை,  போக்குவரத்து நெரிசல், ரொம்ப கஷ்டமா இருக்கு”  என மண்ணையே மிதிக்காத மகிழுந்துக்காரர்களின் (car) பேட்டியும், நடுத்தர மற்றும் மேட்டுக்குடி மக்களின் அங்கலாய்ப்பும்-சலிப்பும் நிறைந்த பேட்டிகள் மற்றொரு பக்கம். ஒரு நாள் செய்தித்தாள் படிக்கவில்லை என்றாலோ அல்லது டீ, காபி குடிக்கவில்லை என்றாலோ குடியா முழுகிப் போய்விடும்?

இவை எல்லாம் தொலைக் காட்சிக்காரனுக்கு முக்கியச் செயத்திகளாகி விடுகின்றன. “சைதாப்பேட்டையிலிருந்து எமது செய்தியாளர் என்ன கூறுகிறார் பார்ப்போம்” என இதில் ‘லைவ்’ வேற!

ஒரு நாள் மழைக்கு இன்றைய பொழப்பு போச்சே என்பது இவர்களின் கவலை. ஆனால் இந்த ஒரு நாள் மழை இல்லை என்றால் எம் உழவனுக்கு ஓர் ஆண்டல்லாவா பொழப்பு போகிறது!

“ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் தொடரும் கன மழையால் சுற்றுலாப் பயணிகள் பெரும் அவதி; குற்றாலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக குளிக்கத் தடை,  பயணிகள் ஏமாற்றம்” என செய்தி ஒருபக்கம். “ரொம்ப ஏமாற்றமாயிடுச்சு. மழை விடாம பெய்யுது. அதனால “டூர் வந்தும் எதையும் எஞ்சாய் பண்ண முடியாமப் போச்சு” என நடுத்தர மக்களின் பேட்டி மற்றொரு பக்கம்.

மழை என்னமோ ஒன்றுதான். நகர்ப்புறங்களில் வீடுகளை இழந்து பேட்டியளிக்கும் மக்களின் அவலம் ஒருபக்கம் ‘எஞ்சாய் பண்ண முடியாமப் போச்சு’ என்கிற நடுத்தர வர்க்கத்தின் ‘கவலை’ மறுபக்கம் என இரு வேறு விளைவுகள்.

தமிழகத்தில் மழை அதிகமா?

”தமிழகத்தில் அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய இரு மாதங்களில் மட்டும் இதுவரை பெய்துள்ள மழையின் அளவு 450 மில்லிமீட்டர். அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரையிலான 3 மாத காலத்தில் சராசரி மழை அளவு 430 மில்லிமீட்டர். மேலும் டிசம்பர் முழுக்க மழை பெய்ய வாய்ப்புகளுண்டு. இனி பெய்கின்ற மழை உபரிதான்” இப்படி பேட்டியளிக்கிறார் வானிலை ஆய்வு மைய அதிகாரி இரமணன்.

வாலாஜா, ஆர்க்காடு, இராணிப்பேட்டை, வேலூர், குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், அரூர், செங்கம், திருவண்ணாமலை, போளூர், ஆரணி, வந்தவாசி, செய்யாறு, பகுதிகளை உள்ளடக்கிய வேலூர்-கிருஷ்ணகிரி-தருமபுரி-சேலம்-திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் தமிழகத்தில்தான் உள்ளனவா என இரமணனின் பேட்டியை கேட்ட பிறகு எனக்குள் ஒரு ஐயம் ஏற்பட்டுவிட்டது. 27.11.2011 அன்று பருகூரில் ஒரு திருமணத்திற்குச் சென்றுவிட்டு வரும் வழியில் மழையின் ‘பாதிப்பை’ பார்த்த பிறகுதான் இந்த இடுகையை எழுதுகிறேன்.

கடந்த இரண்டு மாதங்களில் மேற் கூறிய பெரும்பாலான ஊர்களுக்குச் சென்று வந்துள்ளேன்; சென்று வந்தவர்களைக் கேட்டுள்ளேன்; தொலைபேசி மூலம் விசாரித்து அறிந்துள்ளேன். இப்பகுதிகளில் உள்ள ஏரிகள் கால் பங்குகூட நிறையவில்லை; சில ஏரிகளில் சொட்டுத் தண்ணீர் கூட இல்லை; சாலையோரக் குழிகளில் ‘குண்டி கழுவக்’ கூட தண்ணீரைக் காணோம். விதிவிலக்காக இப்பகுதிகளில் ஒரு சில ஏரிகள் நிரம்பிருக்கலாம்;  ஒரு சில சிற்றோடைகளில் சிறிதளவு வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் ஒட்டு மொத்தத்தில் இப்பகுதிகளில் இனியும் வலுவான மழை வரவில்லை என்றால் இந்த ஆண்டு குடி நீருக்கே பஞ்சம் வரும் என்பதே நிதர்சனம்.

“தமிழகம் முழுவதும் மழை கொட்டித் தீர்த்தும் வேலூர் மாவட்டத்தில் வறண்டு கிடக்கும் ஏரிகள்”  என்று 28.11.2011  தேதியில் தினமணி நாளேடும் இதை உறுதிப்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலும் இதுதான் நிலைமை என்பதை மறுநாள் அதே தினமணியில் செய்தி வெளியாகி உள்ளது.

ஆர்க்காட்டுக்காரனின் கனவு நனவாகுமா?

பாலாற்றிலும், பொன்னையாற்றிலும் தண்ணீரைப் பார்ப்பது அரிது.-ஆந்திராவிலிருந்து பொன்னை-திருவலம் வழியாக ஆர்க்காடு அருகே பாலாற்றில் இணையும் ஓர் ஆறுதான் பொன்னை ஆறு. தண்ணீர் ஓடினால்தானே ‘கலக்கும்’ ஆறு என சொல்ல முடியும். பாலாற்றிலும், பொன்னையாற்றிலும் வெள்ளப் பெருக்கை கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் இரு முறைதான் இப்பகுதி மக்கள் பார்த்திருக்கிறார்கள். கடைசியாகப் பார்த்து பத்து ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன. கல்லூரிச் சாலையில் குளு குளு அறைக்குள் அமர்ந்து கொண்டு ‘இந்த ஆண்டு தமிழகத்தில் சராசரியை விட மழை அதிகம்,  இனி பெய்வதெல்லாம் உபரிதான்’ என பேட்டியளிக்கும் இரமணனுக்கு, அரேபியக் காரனின் கனவும் ஆர்க்காட்டுக்காரனின் கனவும் ஒன்றுதான் என்பது எப்படித் தெரியும்?

Monday, November 21, 2011

கூடங்குளம்: 'மம்மி' நாயகன் வருவானா?

பொதுவாக வெளியூர் பயணம் சென்றால் அவ்வூர் எதற்குப் பெயர் பெற்றது என்பதை அறிந்து அதை வாங்கி வந்து உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பது இன்றும் நம் வழக்கத்தில் உள்ள ஒன்று. திருநெல்வேலி அல்வா என்றாலே 'பாவ்லோ' கூற்றுப்படி நாவில் ஊறும் எச்சிலை யாரால்தான் நிறுத்தமுடியும்? 

திருவில்லிபுத்தூர் பால்கோவா, நாக்பூர் சோன்பப்டி, லோனேவாலா கடலை மிட்டாய், கிருஷ்ணன் கோவில் கொய்யா, ஆக்ரா பூசனிக்காய் அல்வா, நாக்பூர் ஆரஞ்சு, திண்டுக்கல் பன்னீர் திராட்சை, சந்தவாசல் வாழைப்பழம், திருப்பதி லட்டு, சேலம் மாம்பழம், பன்ருட்டி பலா, மணப்பாறை முருக்கு, ஊட்டி வறிக்கி, அய்தராபாத் பேப்பர் ஸ்வீட், சிம்லா ஆப்பிள், கொல்லிமலை அண்ணாசி, கொடைக்கானல் பேரிக்காய் என இவற்றிற்கு இவ்வூர்கள் புகழ் பெற்றுள்ளதால் அவ்வூர்களுக்குச் சென்று வெறுங்கையோடு திரும்ப முடியுமா? என்னப்பா திருநெல்வேலிக்குப் போயிட்டு அல்வா வாங்காம சும்மா வந்திட்டியே என உறவினர்களும் நண்பர்களும் கேட்காமல் விட மாட்டார்கள். 

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் முதன் முறையாக இராசபாளையம் சென்றிருந்தேன். இராசபாளையம் நாய் புகழ் பெற்றது என்பதால் அதையா வாங்கி வரமுடியும்? பேருந்து நிலையத்துக்கு எதிரில் ஒரு இனிப்புக் கடையைப் பார்த்தேன். விறகு மிலார்களைப் போல குவிக்கப்படிருந்த காராசேவும், ஆள் உயரத்துக்கு சுருட்டி அடுக்கப்பட்டிருந்த வெள்ளை நிற தேன்மிட்டாயும் என்னை மிகவும் கவர்ந்தன. இந்த ஊரின் சிறப்பு என்னவென்று வினவினேன். தேன்மிட்டாய் என்றார்கள்.  விலையோ மிகக் குறைவு. ஒரு கிலோ முப்பது ரூபாய்க்கும் குறைவுதான். ஒரு கிலோ வேண்டும் என்றேன். உடனே பெரிய பனை ஓலைக் கூடை ஒன்றை எடுத்தார்கள். எடை போட்டபிறகு தேன்மிட்டாயை பக்குவமாய் கூடைக்குள் அடைத்தார்கள். என் கையிலோ கூடுதலாக இன்னுமொரு சுமை என்றாலும் புதிதாய் ஒரு தின்பண்டத்தை வாங்கிச் செல்கிற மகிழ்ச்சியில் அது சுமையாகத் தெரியவில்லை. கூடவே சொஞ்சம் மிலார்களையும், தேன் குழலும் வாங்கிக் கொண்டேன். திருச்சிக்குத் திரும்பி வரும் போது, வரும் வழியில் திருவில்லிபுத்தூர் பால்கோவாவையும், கிருஷ்ணன் கோவில் கொய்யாவையும் வாங்கிக் கொண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி. இருக்காதா பின்ன! ஒரே நேரத்தில் மூன்று சிறப்புகளையும் வாங்கிவிட்டேனே!

'பாலிதின் கேரி பேக்'

அப்படி வாங்கிய பொருள் எதற்கும் அன்று 'கேரிபேக்' இல்லை என்பது மற்றுமொரு சிறப்பு. ஆனால் இன்று ஐந்து ரூபாய்க்கு 'ஐஸ்கிரீம்' வாங்கினாலும் அதற்கும் ஒரு பாலிதின் கேரி பேக். இப்படி எதற்கெடுத்தாலும் கேரிபேக் என எங்கும் குவிந்துவிட்டதால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் கேட்டை விளக்க வேண்டிய அவசியமில்லை. அன்று தேன்மிட்டாய் ஒழுகி துணியெல்லாம் பாழாகிவிடுமோ என அச்சப்பட்டேன். அது உடனடி பாதிப்பு என்றாலும் துணியை துவைத்த பிறகு பாதிப்புக்கு முடிவு ஏற்பட்டு விட்டது. ஆனால் இன்று பாலிதின் கேரிபேக்குகளில் அடைத்துக் கொடுப்பதால் உடனடி பாதிப்பு ஏதும் இல்லை. பாதுகாப்பாக பொருளை எடுத்து வருகிறோம். ஆனால் பாலிதின் கேரிபேக்குகளால் ஏற்படும் எதிர்கால பாதிப்பு மனித குலத்திற்கே சவாலாய் உருவெடுத்து வருகிறது. அதனால்தான் கேரிபேக்குகளை தடை செய்ய வேண்டும் எனக் குரல் கொடுக்கிறோம்.

பல்வேறு நச்சு ஆலைகளால் பலருக்கு உடனடி வேலை வாய்ப்புகள் கிடைத்தன-கிடைக்கின்றன. ஆனால் அவற்றால் ஏற்படும் எதிர்கால பாதிப்பு சுற்று வட்டாரத்தையே வாழ இலாயக்கற்றதாக மாற்றிவருகிறது. பிரிட்ஜ் உள்ளிட்ட சில சொகுசுப் பொருட்கள் இன்று நமக்கு உடனடி சுகத்தை அளிக்கின்ற அதேவேளையில் ஓசோன் மண்டலத்தை ஓட்டையாக்கும் மீத்தேன் வாயுவை வெளியேற்றுவதால் அவற்றைத் தடுக்கவோ அல்லது குறைக்கவோ வேண்டும் என்கிறோம். ஏன்? ஓசோன் ஓட்டையாகிவிட்டால் எதிர்காலத்தில் மனித இனம் வாழ இலாயக்கற்றதாக இப்புவி மாறி விடும் என்பதால் புவி வெப்பமயமாவதிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்கிறோம்.

'மம்மி' நாயகன் வருவானா?

உடனடித் தேவையா அல்லது எதிர்காலப் பாதுகாப்பா? எது முதன்மையானது என்று பரிசீலித்தால் மனித குலத்தைக் காக்க வேண்டும் எனில் மேற்கண்ட கோரிக்கைகள் நியாயமானதே. இப்படித்தானே கூடங்குளத்தையும் பார்க்க வேண்டும்.

மின்சாரம் நமக்குத் தேவைதான்.மறுப்பதற்கில்லை.அதற்கு மாற்று வழிகளைத்தான் தேட வேண்டும். ஒரு முப்பது ஆண்டு காலத்திற்கோ அல்லது நாற்பதாண்டு காலத்திற்கோ கூடங்குளம் அணு உலை மின்சாரத்தைக் கொடுக்கும். அதுவரை பூகம்பமோ அல்லது சுனாமியோ வராது என்றே நம்புவோம். ஆனால் நாற்பதாண்டுகள் கழித்து ஆலையில் வேலைசெய்த ஊழியர்களும் அதிகாரிகளும் இலட்சங்களைச் சம்பாதித்துக் கொண்டு வேறு ஊர்களுக்குச் சென்று 'செட்டில்' ஆகிவிடுவார்கள்.  ஆனால் கூடங்குளம் மக்கள் எங்கே செல்வார்கள்?

புதைக்கப்பட்ட மனிதன் ஒருமுறையோ அல்லது அதிகப்படியாக மூன்று முறையோதான் 'உயிர்த்தெழுவான்'. இது சமய நம்பிக்கை. கூடங்குளத்தில் நியூட்ரான் என்கிற எமனை இன்று வேண்டுமானால் நான்கு சுவற்றுக்குள் அடைத்து வைக்கலாம் அல்லது எமனை அடக்க மாடரேட்டர்களை ஏவலாம். ஆனால் புதைக்கப்ட்ட பிறகு ஒரு முறையல்ல, ஓராயிரம் முறையல்ல, ஒன்று-இரண்டாய்,இரண்டு-நான்காய்,நான்கு-பதினாறாய், பதினாறு-இருநூற்று ஐம்பத்தாறாய்,இருநூற்று ஐம்பத்தாறு-அறுபத்தைந்தாயிரத்து ஐநூற்று முப்பத்தாறாய்.... எனப் பல்கிப் பெருகி கோடி கோடியாய் உயிர்த்தெழப் போகும் நியூட்ரான் எமன்களை விழுங்க அன்று மாடரேட்டர்கள் இருக்கமாட்டார்கள். இத்துக் கொண்டு வரும் சுவற்றின் ஓட்டைகளைக் கிழித்துக் கொண்டு வெளியேறப் போகும் நியூட்ரான் எமன்களை வெட்டி வீச 'மம்மி' நாயகன் வரப்போவதில்லை?

கோடிக்கணக்கில் உயிர்த்தெழப் போகும் நியூட்ரான் எமன்களை எதிர்கொள்வதா அல்லது அவற்றைக் கருவிலேயே அழிப்பதா என்பதே கூடங்குளம் மக்களின் இன்றைய போராட்டம்.