Sunday, February 27, 2011

சாமியார்கள் அத்துப் போனால் இந்து மதம் இத்துப் போகுமா?

ஆதிசங்கரன் முதல் நித்யானந்தா வரை இந்து மதத்தை தாங்கி நிற்க இம் மண்ணில் தோன்றிய அவதாரப் புருஷர்கள் ஏராளம். அத்வைதம் முதல் ஆத்ம ஞானம் வரை இவர்கள் போதிக்காத தத்துவங்களே கிடையாது. சிலர் தத்துவங்களை உபதேசிக்க மட்டுமே செய்தார்கள். ஆனால் இறந்து போன பிரேமானந்தா முதல் காஞ்சி சங்கரன், நித்தியானந்தா வரை பலர் நடைமுறையில் பல தத்துவங்களை சோதித்தறிந்தவர்கள். அதிலும் குறிப்பாக காமத்துப் பாலை முந்திரி, பாதாம் பருப்புகளை அரைத்துச் சேர்த்து சுண்டக் காய்ச்சி கரைத்துக் குடித்து கரை கண்டவர்கள்.

முற்றும் துரந்த இந்த முனிவர்களுக்கு உல்லாசமாய் உலவ ஆசிரமங்களும், உலவிய பின் ஓய்வெடுக்க ஏ.சி. அறைகளும், ஏ.சி.அறையின் குளிரை சமாளிக்க காமக் களியாட்டங்களும் கட்டாயம். இவற்றில் எது வேண்டுமானாலும் குறையலாம். ஆனால் இரவு நேர லீலைகள் மட்டும் கண்டிப்பாய் நடக்க வேண்டும்.

இந்திய ஜனாதிபதியைக்கூட தீவிரவாதிகள் எளிதில் நெருங்கிவிடுவார்கள். ஆனால் ஒசாமா பின்லேடனே நினைத்தாலும் இந்தச் சாமியார்களை நெருங்க முடியாது. பாதுகாப்பு வளையங்களைத் தாண்டுவது அவ்வளவு எளிதானதல்ல. அதையும் தாண்டி ஒருவன் நித்யானந்தா-இரஞ்சிதாவின் காமக் களியாட்டத்தைச் சுட்டிருக்கிறான் என்றால் அவன் பின் லேடனுக்கேத் தலைவனாகும் தகுதி படைத்தவன்.

போலிச் சாமியார்கள்தான் கேடானவர்கள். நல்ல சாமியார்களும் இருக்கத்தானே செய்கிறார்கள் என நீங்கள் முனுமுனுப்பது எனது காதுகளில் விழுகிறது. நேற்று வரை 'ஒரிஜினல்' என்று நம்பியவன்தானே மறுநாள் காலையிலேயே போலி என்று நாறுகிறான். 'ஒரிஜினல்' என்று நம்புவதற்கான உத்தரவாதத்தை யாராவது 'பாண்டு பேப்பரில்' எழுதிக் கொடுக்கத் தயாரா?

எப்வளவுதான் நாறினாலும் சாமியார்கள் செல்வாக்கோடு உலாவுவதற்கான பலம் எங்கிருந்து கிடைக்கிறது? நீண்ட நாட்களாக இந்தக் கேள்விக்கு விடை கிடைக்காமல் நான் திணறிய போது நித்தியானந்தா சிக்கியதும் எனக்கு விடை கிடைத்து விட்டது. தமிழகத்தின் திருவண்ணாமலை,  வேலூர் மாவட்டங்களிலும், கர்நாடகாவின் மைசூரிலும் இவருக்கு செல்வாக்கு அதிகமாக இருப்பதற்குக் காரணம் இவர் அகமுடைய முதலியார் சாதியைச் சேர்ந்தவர் என்பதுதான். இப்பகுதிகளில் அகமுடைய முதலியார்கள் அதிகமாக வசிப்பது நித்தியானந்தாவின் பலம்.

1980 களில் மேல் மருவத்தூர் 'அம்மா' பிரபலமானபோது இவரை தூக்கி நிறுத்தியவர்கள் வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் அவரது சாதியைச் சேர்ந்த வன்னிய சமூகத்தினர்.

சைவ வேளாள முதலியார்கள் வேதாத்திரி மகரிஷியை தூக்கி நிறுத்தினார்கள். அவர் இறந்த பிறகு இவர்களது சாதிப் படிநிலையில் ஒரே 'குரூப்பில்' இருக்கும் நித்தியானந்தாவை ஆதரிக்கத் தொடங்கினார்கள். நித்தியானந்தாவும் அம்பலப்பட்டுப் போன பிறகு வேலூர் ஸ்ரீபுரம் சக்தி 'அம்மாவை' இப்போதைக்குப் பிடித்துக் கொண்டார்கள். எக்காரணத்தைக் கொண்டும் ஒரு முதலியார் பக்தனின் காணிக்கை தங்களது பரம எதிரிகளான வன்னியர்களின் மருவத்தூர் அம்மாவிடம் சென்று விடக்கூடாது.

கோவை, ஈரோடு, கரூர் மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் வெள்ளாளக் கவுண்டர்களின் ஆதர்ஷ சாமியாராக அச்சாதியைச் சேர்ந்த ஜக்கி வாசுதேவ் (கவுண்டர்) திகழ்கிறார்.

திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் பெரும்பான்மையாக வசிக்கும் கள்ளர் சாதி மக்களின் ஏகோபித்த சாமியாராக விளங்கிய அச்சாதியைச் சேர்ந்த பிரேமானந்தா மண்டையைப் போட்டுவிட்டார். இப்பொழுது அங்கே ஒரு 'வேக்கன்சி' ஏற்பட்டுள்ளது. வாய்ப்புள்ளவர்கள் முயற்சிக்கலாம்.

தென் மாவட்ட நாடார்களுக்கும், தேவர்களுக்கும் என அந்தந்த சாதிகளைச் சேர்ந்த சாமியார்கள் இருக்கக்கூடும். எனக்குத் தெரியவில்லை. ஆனால் பெரிய அளவில் பிரபலமாகவில்லை என்றே கருதுகிறேன். 

பார்ப்பனர்களுக்கு?... சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை. நாறிப்போன சங்கராச்சாரி முதல் வாழும் கலை ஸ்ரீ.ஸ்ரீ. இரவிசங்கர் வரை பிரபலங்கள் ஏராளம் உண்டு. மற்ற சாதிக்காரர்களாவது பக்தி பெருக்கெடுக்கும் போது பிற சாதி சாமியாரர்களைக்கூட ஒருசிலர் ஏற்றிப் போற்றுவதுண்டு;  வணங்குவதுண்டு. ஆனால் பார்ப்பனர்கள் பிற சாதி சாமியார்கள் ஒருவரைக்கூட அங்கீகரித்ததில்லை. அங்கீகரிக்கவும் மாட்டார்கள்.

பாவம் தாழ்த்தப்பட்டவர்கள். பக்தியிருந்தும் தங்களுக்கென இதுவரை ஒரு சாமியைரைக்கூட உருவாக்க முடியவில்லை. கோயிலுக்கு நுழையவோ சாமியை வழிபடவோ உரிமை இல்லாத போது சாமியார்களை எங்கே உருவாக்கவது? இதுதான் சாதி இழிநிலைக்கு எடுப்பான ஆதாரம்.

சாமியார்களின் உயிரும் பலமும் சாதியில் ஒளிந்திருக்கிறதேயொழிய பக்தியில் அல்ல. தங்களது சாதிக்காரனின் பணம் பக்தியின் பேரால் மற்றொரு சாதி சாமியாரிடம் சென்றுவிடக்கூடாது என்பதில் ஒவ்வொரு சாதியினரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். அதுவே சாமியார்களின் பலமாகவும் இருக்கிறது.

சாதி எங்கும் வியாபித்திருக்கிறது. இதுவே இந்து மதத்தின் வேராகவும் இருக்கிறது. வேருக்கு நீர் பாய்ச்சும் சாமியார்கள் இத்துப் போனால் இந்து மதம் அத்துப் போகுமே என்ற கவலை இந்து மதவாதிகளுக்கு. அதனால்தான் சாமியார்களுக்கு பாதிப்புகள் வரும் போதெல்லாம் அர்ஜீன் சம்பத்துக்கள் குரல் கொடுக்கிறார்கள்.

Monday, February 21, 2011

கோயில் மாடும் பிரேமானந்தாவின் மரணமும்.

1990 களில் கொலை மற்றும் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட மக்கள் விரோ நடவடிக்கைகளால் பொது மக்களின் செருப்படிக்கு ஆளானவன் பிரேமானந்தா சாமியார். ஆண்டுகள் பல ஆனாலும் திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள் இவனது பித்தலாட்டங்களை இன்னும் மறந்திருக்க மாட்டார்கள்.

இவனது குற்றச் செயலுக்கு நீதி மன்றம் இரட்டை ஆயுள் தண்டை வழங்கிய போது மகிழ்ச்சியடையாதவர்களே கிடையாது. காவல் துறை பாதுகாப்பு அளித்திராவிட்டால் பொதுமக்களாலேயே அவன் அடித்துக் கொல்லப்பட்டிருப்பான். அன்றே செத்துத் தொலைய வேண்டியவன் அரசுக்கு ஏராளானமாக பொருட் செலவை ஏற்படுத்திவிட்டு இப்பொழுது நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பலனின்றி செத்துப் போயுள்ளான். இவனுக்காக யாராவது கண்ணீா் வடிப்பார்களா?

ஆனாலும் ஒருவர் கண்ணீர் வடித்துள்ளார். பிரேமானந்தா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டுமாம். கோவையில் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்குக்கூட தமிழக அரசு பொது மன்னிப்பு வழங்கியதாம். ஆனால் பிரேமானந்தா சாமியாருக்கு மருத்துவச் சிகிச்சைக்குக்கூட விடுதலை செய்யவில்லையாம். அதாவது நோய்வாய்ப்பட்டுவிட்டால் விடுதலை செய்ய வேண்டுமாம்.

இது இந்து மக்கள் கட்சி (தமிழகம்) மாநிலத் தலைவர் அர்ஜீன் சம்பத்தின் கவலை. இது இன்றைய தினமணிச் செய்தி.

இவரது கூற்றுப்படி அரசு நடந்து கொண்டால் பித்தலாட்டக்காரன் ஒருவன்கூட சிறையில் இருக்க மாட்டான். கைது என்றவுடனே நெஞ்சுவலி வருவதுதானே பித்தலாட்டக்காரர்களுக்குக் கைவந்த கலை.

பிரேமானந்தா சாமியாருக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படவில்லை என சந்தேகம் எழுந்துள்ளதாம். எனவே பிரேமானந்தாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டுமாம். அவன் அடிக்கடி மருத்துவ மனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான் என்கிற செய்திகள் அவ்வப்பொழுது ஊடகங்களில் வரத்தானே செய்தன. பிறகு எப்படி அர்ஜீன் சம்பத்துக்கு மட்டும் சந்தேகம் வருகிறது. மருத்துவ வசதியே செய்திருக்கவில்லை என்றால் அவன் பத்து ஆண்டுகளுக்கு முன்பே செத்துப் போயிருப்பான். தமிழக அரசின் தயவால் அவன் பத்து ஆண்டுகள் அரசுக்கு செலவு வைத்துவிட்டுத்தான் செத்திருக்கிறான்.

பிரேமானந்தாவின் மரணம் குறித்து நீதி விசாரணை கேட்பது மட்டுமல்ல பிரேமானந்தாவோடு சிறையில் அடைக்கப்பட்ட சுவாமி கமலானந்தா உள்பட அனைவருக்கும் பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய வேண்டுமாம். 

ஏனய்யா கோயில் மாடுகளை சிறையில் அடைக்கிறீர்கள் என்று கேட்கிறார். கோயில் மாடுகள் என்ன செய்தாலும் அது குற்றமாகாது என்பதுதானே இந்து மதம் மக்களுக்கு போதித்துள்ள நீதி். கோயில் மாடுகள் வயலை மேய்ந்தாலோ, தோட்டங்களை சேதப்படுத்தினாலோ அதை யாரும் அடிக்கக்கூடாது. அப்படிச் செய்தால் அது தெவ்வக் குற்றம். இப்படித்தானே கிராமப் புறங்களில் இன்றும் கோயில் மாடுகள் நடத்தப்படுகின்றன.

ஊர்ப் பயிரை மேய்ந்து தின்று கொழுத்து தன் விருப்பம் போல பசுக்களையும், கெடேரிகளையும் வன்புணர்ச்சி கொள்வதே கோயில் மாடுகளின் ஒரே தலையாயப் பணி. இதே நீதிதான் சாமியார்களுக்கும் வழங்கப்பட வேண்டுமாம். இந்த நீதியைத்தான் அர்ஜீன் சம்பத் நிலைநாட்ட விரும்புகிறார். கோயில் மாடுகளுக்கு இருக்கும் சுதந்திரம் சாமியார்களுக்கு இல்லையே என ரொம்பவும்தான் வருத்தப் படுகிறார் அர்ஜீன் சம்பத்.

Monday, February 14, 2011

பம்புசெட்டுகளுக்கு இலவச மின் இணைப்பு: ரூ.200 கோடி இலஞ்சம்!

எங்கு பார்த்தாலும் தோண்டத் தோண்ட ஊழல். ஊடகங்களில் ஊழல் பற்றிய செய்தி இல்லாத நாளே கிடையாது. ஆளும் கட்சியின் ஊழலைப் பற்றி பேசாத எதிர்கட்சிகளே கிடையாது. 

பெரும்பாலும் பிரபல ஊடகங்கள் அனைத்தும் அரசியல் சார்புடையதாகவே இருக்கின்றன. இதனால் ஊழலின் முழு பரிமாணத்தையும் மக்கள் அறிந்து கொள்ள முடிவதில்லை."கல்லக் காதலனோடு சேர்ந்து கணவனைக் கொன்ற பெண் கைது, கல்லக்காதலனுக்கு வலைவீச்சு" இப்படி தினத்தந்தி பாணியில் ஊழலையும் பரபரப்பு செய்தியாக்கி முடித்துக் கொண்டு அடுத்த பரபரப்பு செய்திக்குத் தாவி விடுகின்றன ஊடகங்கள். 

அடுத்த தேர்தலில் ஆளும்கட்சியை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்கும் ஒரே நோக்கத்ற்காக மட்டுமே ஆளும் கட்சியின் ஊழலை தொண்டை கிழிய கத்துகின்றன எதிர்கட்சிகள். ஆட்சியைப் பிடித்தவுடன் இவர்களின் காட்டுக்கத்தலும் முடிவுக்கு வந்தவிடுகின்றன.

இப்பொழுது இந்தியாவில் அலசப்படும் ஊழல்கள் எல்லாம் கார்பரேட் ஊழல்கள். அதாவது மிகப்பெரும் நிறுவனங்கள் தொடர்புடைய ஊழல்கள். இத்தகைய ஊழல்கள் மிகவும் அபாயகரமானவை. நாட்டையே திவாலாக்கும் வகையிலான ஊழல்கள். நாட்டையே மொட்டையடிக்கும் இவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு மட்டுமல்ல தேசத் துரோக குற்றச்காட்டின் கீழும் வழக்குத் தொடரவேண்டும். வழக்குத் தொடர்ந்தாலும் இவர்களை தண்டித்துவிடமுடியாது என்பது தனிக்கதை.

துனிசியாவிலும், எகிப்திலும் ஊழல் அதிபர்களுக்கெதிராக மக்கள் எழுச்சி அதிபர்கள் தப்பி ஓட்டம். அடுத்து ஏமனும், அல்ஜீரியாவும் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளன. சின்னஞ்சிறு நாடுகளிலெல்லாம் எழுச்சிகள் நடக்கும் போது இந்தியா மட்டும் மௌனமாய் பயனிக்கிறது. ஊழல் செய்தவன் உல்லாசமாய் பவனி வருகிறான். இங்கே தேர்தலுக்குத் தேர்தல் ஆளை மாற்றுகிறோம். ஊழலைப் பரவலாக்க அனைவருக்கும் வாய்ப்பளிக்கிறோம். இது இந்திய ஜனநாயகம் நமக்கு வழங்கியிருக்கம் மிகப்பெரிய ஜனநாயக உரிமை. இது உரிமை மட்டுமல்ல நமது கடமையும்கூட.  இதைத்தானே அப்துல் கலாம்களும், ஷேசன்களும் நமக்கு போதித்துள்ளார்கள். நாம் சான்றோர்களுக்கு கட்டுப்பட்டவர்களாயிற்றே.

நாம் உழைத்துச் சேர்த்த சொந்தப் பணத்தை ஒரு அதிகாரி இலஞ்சமாக நம்மிடமிருந்து பிடுங்கும் போது உள்ளம் குமுறுகிறது. கோபம் வருகிறது. கையூட்டு கேட்பவனை கையும் களவுமாக பிடித்துக் கொடுக்க வேண்டும் என மனம் கணக்குப் போடுகிறது. ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்கும் போது ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு எச்சிலை விழுங்கிக் கொள்கிறோம். நாம் எல்லாவற்றையும் சரியாகச் செய்தால்கூட இலஞ்சம் கொடுக்கவில்லை என்றால் காரியம் கைக்கூடாமல் நமக்கு மிகப்பெரிய பாதிப்புகள் வருகிறது. இது ஒரு கையறு நிலை. ஊழலுக்கெதிராக போராட மறுக்கும் கையாளாகாத்தனம் என்று சொன்னாலும் இதுதானே எதார்த்தம்.

இந்த ஆண்டு 2 00 000 பம்பு செட்டுகளுக்கு இலவச மின் இணைப்பு தருவதாக அரசு அறிவித்து அதற்கான முதற்கட்ட வேலைகளெல்லாம் ஒருமாத காலக்கெடுவிற்குள் முடிந்து விட்டன. இதற்காக விவசாயிகளின் கோவணத்திலிருந்து உருவப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா? கிராம நிர்வாக அதிகாரிக்கு ரூ 2000, இள நிலைப் பொறியாளருக்கு (J.E) ரூ 5000,  முதுநிலை உதவியாளருக்கு (Senior Assistant-SA) ரூ 2000, போர்மேனுக்கு (Foreman) ரூ 1000 என இது வரை ஒரு இணைப்புக்கு ஒரு விவசாயியிடமிருந்து ரூ 10000 உருவப்பட்டுள்ளது. ஆக ஒரே மாத்தில், இந்த திட்டத்தில் இதுவரை உருவப்பட்ட இலஞ்சம் மட்டும் ரூ 200 கோடி. மின் கம்பம் நடும் பொதும், மின் இணைப்பு கொடுக்கும் போதும் கொட்டியழ வேண்டியது தனி.

ஒரு சர்வே எண்ணில் எத்தனை ஏக்கர் நிலம் இருந்தாலும் 2 வது கிணற்றுக்கு மின் இணைப்பு வழங்க முடியாது என்றும், ஒரு சர்வே எண்ணில் கிணறுகளுக்கு மின் இணைப்பு வேண்டுமானால், கிணறுகளுக்கான இடைவெளி 150 மீட்டராக இருக்க வேண்டும் என்றும், மின் இணைப்புக்கு மின்துறை குறிப்பிட்டுள்ள மின்மோட்டார்கள் தான் வாங்க வேண்டும் என்று பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளனர்.”


இலஞ்சத்தின் அளவை நிபந்தனைகளே தீர்மானிக்கின்றன.

இது ஏதோ தோராய மதிப்பீடு அல்ல. இது ஒரு நேரடி அனுபவம். ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் நிலத்திற்கு கடந்த முப்பது ஆண்டுகளாக மின் இணைப்பு ஏக்கத்தோடு காத்திருந்த சிறு விவசாயிகளின் கோவணத்திலிருந்து சமீபத்தில் உருவப்பட்ட தொகை இது. மற்ற இடங்களில் அதிகமாகத்தான் இருக்குமேயொழிய குறைவாக இருக்க முடியாது.


ஒரு சில இடங்களில் இலஞ்சம் கேட்ட அதிகாரிகளை கையும் களவுமாகப் பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள். அனால் அதன் பின் விளைவு என்ன தெரியுமா? இனி ஜென்மத்திற்கும் அந்த விவசாயிக்கு மின் இணைப்பு கிடைக்காது. அதற்குரிய குறிப்புகளை அடுத்து வரும் அதிகாரி ஆவணங்களில் எழுதி விடுகிறார்.

200கோடி ரூபாய் இலஞ்சமாக விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்துள்ளார்கள் அரசு அதிகாரிகள். ஒரு சிறு திட்டத்தின் மூலமே 200 கோடி என்றால் ஓர் ஆண்டில் நிறைவேற்றப்படும் பல்வேறு திட்டங்களில் புரலும் கோடிகள் எவ்வளவு? இந்த 200 கோடியைப்பற்றி யாருக்காவது தெரியுமா? கொடுத்தவனுக்கும் வாங்கியவனுக்கும் மட்டுமே தெரியும். அலுவலகத்தில் வைத்து வாங்கினால் மாட்டிக் கொள்ள வாய்ப்புகள் இருப்பதால் நிலத்தையும், கிணற்றையும் பார்த்து உறுதிப்படுத்த வேண்டும் என்று சொல்லி நிலத்திற்கே சென்று இலஞ்சப் பணத்தை வாங்கிக் கொள்கிறார்கள். 

அரசு பதவியில் உள்ளவர்கள் கையூட்டில் திளைக்கும் போது பாவம் கைநாட்டு விவசாயி என்ன செய்வான். அவனால் விவசாயிகளைத் திரட்டிப் போராட முடியுமா? முடியாது என்பதே இலஞ்சம் வாங்குவோரின் பலம்.

அரசியல் ஆதாயம் இல்லை என்பதால் தேர்தல் அரசியல் கட்சிகள் இதில் நாட்டம் செலுத்துவதில்லை. நாட்டம் செலுத்தினால் பிறகு அதுவே இவர்களுக்கு ஆப்பாய் அமையும் என்பதையும் அறிந்தே இருக்கிறார்கள்.

எதிரிகளின் பலம் நாம் தனி மரமாய் இருப்பதால். தோப்பாய் மாற உரமிடுவோம். நிச்சயம் ஒரு நாள் உள்ளூர் ஊழலோடு சேர்ந்து கார்பரேட் ஊழலும் காற்றாய் பறக்கும். 

Tuesday, February 8, 2011

எகிப்தாய் மாறுமா இந்தியா?

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஊழல் 2ஜி அலைக்கற்றை முறைகேடு. இந்த முறைகேட்டில் ரூ 1.75 இலட்சம் கோடிகள் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முறைகேட்டின் மூலம் ஆதாயம் அடைந்தவர்கள் யார்? சுருட்டிய தொகை எவ்வளவு? இங்கே லஞ்சமாக சுருட்டப்பட்ட தொகை எவ்வளவு,  சுருட்டியவர்கள் யார்? இதுவும் உறுதி செய்யப்படவில்லை. இன்னும் விசாரணை முடியவில்லையே. இப்போது மாட்டிக் கொண்டவர்கள் குற்றம் சாட்டப் பட்டவர்கள்தானேயொழிய குற்றவாளிகள் அல்லவே. சங்கரராமன் கொலை வழக்கைப் போல சாட்சிகள் பல்டியடித்துவிட்டால் சங்கராச்சாரியாரைப் போல ராஜாக்கள் உத்தமர்கள்தானே.

இந்த இடுகையை எழுதி முடிப்பதற்கு ஒரு வாரம் காலம் ஆகிவிட்டது. அதற்குள் மற்றோரு அலைக்கற்றை முறைகேடு அரசுத் துறை நிறுவனமான இஸ்ரோ மூலம் நடந்துள்ளதாம். இதில் ரூ 2 .லட்சம் கோடி இந்தியாவுக்கு வருவாய் இழப்பாம். அப்படியானால் இதுதான் இந்திய வரலாற்றின் மிகப்பெரிய ஊழலா? இப்போதைக்குச் சொல்ல முடியாது? இனி தொடரும்தானே.

ஊழலில் இரண்டு வகை. அலைக்கற்றை முறைகேடு போல விதிமுறைகளை மீறி சிலருக்கு சாதகமாக நடந்து கொள்வதில் கமிசனாகப் பெறும் கையூட்டு ஒரு வகை. இதை "ஊழல்" என்கிறோம். விதி முறைகள் கடைபிடிக்கப் பட்டாலும் வெட்ட வேண்டியதை வெட்டினால்தான் காரியம் நடக்கும். அவ்வாறு வெட்டப்படும் தொகை ஊழலில் மற்றொரு வகை.

இந்தியா 'விடுதலையடைந்த' பிறகு நடந்ததாக சொல்லப்படும் பெரும் ஊழல்களெல்லாம் முதல் வகையைச் சேர்ந்ததே. பெரும்பாலும் அரசாங்கத்தில் வேலை செய்யும் மிகப் பெரிய அதிகாரிகளும், மிகப் பெரிய முதலாளிகளும், அரசியல் கட்சிகளின் மிகப் பெரிய தலைவர்களும் இத்தகைய ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். கடந்த அறுபது ஆண்டு கால 'சுதந்திர' இந்தியாவில் இத்தகைய ஊழலில் சம்பந்தப்படாத அதிகாரிகளோ, முதலாளிகளோ, அரசியல் வாதிகளோ இருக்க முடியாது.

இத்தகைய ஊழல்கள் நடக்கும் போது எதிர்கட்சிகளால் மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய போராட்டங்களால் எதிர்கட்சிகள் ஆட்சியைப் பிடித்தனவே ஒழிய ஊழல்கள் ஒழிந்த பாடில்லை. ஊழல் செய்தவர்களும் தண்டிக்கப்படவும் இல்லை.

ஆக ஊழல்கள் தொடர்ந்து நடக்கும். எதிர்கட்சிகளின் போராட்டங்களும் தொடர்ந்து நடக்கும். ஆட்சிகள் மாறும். ஆனால் ஊழல் மட்டும் ஒழியாது. இதுதான் ஊழலுக்கெதிரான் எதிர்கட்சிகளின் போராட்டங்கள் நமக்கு உணர்த்தும் பாடம்.

இத்தகைய மேல்மட்ட ஊழல்களால் உணர்ச்சி வசப்படுவது போல நடிப்பவர்கள் அரசியலில் ஆதாயம் அடையும் ஓட்டுச்சீட்டு அரசியல்வாதிகள் மட்டுமே. மற்றபடி பொதுமக்களைப் பொருத்தவரை இவையெல்லாம் அரசியல் கொரிப்புக்கான ஒரு நொருக்குத் தீனி. அவ்வளவே!.

இந்த முதல் வகை ஊழலில் கீழ்மட்ட அதிகாரிகள், ஊழியர்கள் கூட சில இடங்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் இவையெல்லாம் அந்த அலுவலகத்தோடும், கழிஷன் கொடுத்தவரோடும் முடிந்துவிடுகிறது.

இரண்டாவது வகை ஊழல் நமது பாக்கெட்டிலிருந்து நேரடியாக பணத்தை உருவும் ஊழல். இதைத்தான் நாம் லஞ்சம் என்கிறோம்.

பிறப்புச் சான்றிதழ் பெற,  இறப்புச் சான்றிதழ் பெற, சாதிச் சான்றிதழ் பெற, வசிப்பிடச் சான்றிதழ் பெற, வருமானச் சான்றிதழ் பெற,  குடும்ப அட்டை பெற, பத்திரப் பதிவு செய்ய, வீடு கட்ட அனுமதி பெற, மின் இணைப்பு பெற, ஓட்டுநர் உரிமம் பெற,  வாகனத்திற்கு R.C பெற,   தொலைபேசி இணைப்பு பெற,  இணைய இணைப்பு பெற,  பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்க, பாஸ்போர்ட் பெற, அரசு வேலை கிடைக்க, வங்கிக்கடன் பெற, சிறு தொழில் தொடங்க, வழக்கறிஞராக பதிவு செய்ய, வாய்த் தகராறு-வரப்புத் தகராறுகளில் காவல் துறையிடம் சிக்கி்கொண்டு அவர்களிடமிருந்து மீள, நீதி மன்ற படிக்கட்டுகளில் ஏறி இறந்க என இந்த நாட்டின் குடிமக்களின் பாக்கெட்டுகளிலிருந்து அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் பறித்தெடுக்கும் ஊழல் பணம் எவ்வளவு? கணக்குப் போட்டுப பாருங்கள்! சைபர்களைப் போட இந்த சைபர் பக்கங்கள் போதாது. பில்கேட்ஸ் வந்து உதவினால்தான் உண்டு.

இலஞ்சமாக பணத்தைப் பறிகொடுக்காத குடிமகனே இந்தியாவில் இருக்க முடியாது. இப்படி பணத்தை பறி கொடுக்கவில்லையெனில் அவன் இந்தியாவில் வாழ்வதற்கு அர்த்தமே இல்லை. பணமா? இந்தியாவா? பணம் போனால் போகட்டும். இந்தியனாய் இருப்பதில்தான் எத்தனை பெருமை!

முதல் வகை ஊழல் குறித்து கொரிக்கவாவது செய்கிறோம். ஆனால் இரண்டாவது வகை ஊழலில் நமது பணத்தை பறி கொடுத்த பிறகும் புலம்பலைத் தவிர வேறெவையும் நாம் செய்வதில்லையே ஏன்?

தங்களின் பிழைப்புவாத்திற்காக மட்டுமே சங்கமாகத் சேர்ந்துள்ள அரசு ஊழியர் சங்கங்களோ, வங்கி ஊழியர் சங்கங்களோ, தொழிற்கங்கங்களோ, அரசியல் கட்சிகளோ, வாலிபர் சங்கங்களோ, மாதர் சம்மேளனங்களோ, மகளிர் சுய உதவிக் குழுக்களோ, சமூகத் தொண்டு நிறுவனங்களோ, மக்களுக்கு ஆதரவாகவும், மேற்கண்ட இரண்டு வகை ஊழல்களுக்கெதிராகவும் போராட மாட்டார்கள். காரணம் ஒரு வகையில் அவர்களே ஊழல் செய்பவர்களாகவும், அதற்குத் துணை போகிறவர்களாகவும் இருப்பதுதான். இலஞ்ச ஊழலுக்கு எதிராக கோபப்படுவதற்குப் பதிலாக அரசு உத்யோகம் என்றால் மேற்படி வருமானம் இல்லாமலா என்று கேட்கும் அளவுக்கு சாமான்யர்களும் இதை சகஜமாகத்தான் பார்க்கிறார்கள்

இலஞ்சம் பெருவது கூடுதல் வருமானத்துக்கான ஒரு வழி என்கிற அளவுக்குத்தான் மக்கள் அதை பார்க்கிறார்கள். அது ஒரு சமூக விரோதச் செயல், ஒரு வழிப்பறிக் கொள்ளை என்று பார்ப்பதில்லை. அதனாலேயே இத்தகைய வழிப்பறிக் கொள்ளைக்கெதிராகப் போராடுவதில்லை. ஒரு சில இடங்களில் ஒரு சிலர் துணிந்து கையும் களவுமாகப் பிடித்துக் கொடுத்தாலும் இலஞ்சம் பெற்றவரை பாதுகாக்க ஊழியர் சங்கங்கள் களத்தில் குதித்துவிடுகின்றன. மொத்தத்தில் இலஞ்சம் என்பது சமூக அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டது என்றே சொல்லலாம்.

சுருங்கச் சொன்னால் வாய்ப்பில்லாதவன் யோக்கியவான், வாய்ப்பிருந்தும் வாங்காதாவன் பிழைக்கத் தெரியாதவன். இதுவே இன்றைய சமூக ஒழுக்கம்! பிழைக்கத் தெரியாதவர்களின் எண்ணிக்கை அதிகமாகாமல் இங்கே எகிப்துக்களைக் காண முடியாது.

ஊழல் செய்யும் மனப்பாங்கு என்பது தனி நபரோடு நின்று விடுவதல்ல. தனி நபர்கள் திருந்தி விட்டால் அல்லது ஊழல் செய்பவர்களை கடுமையாகத் தண்டித்து விட்டால் ஊழலை முற்றிலுமாக ஒழித்து விடலாம் என்பது திரைக் கதைக்கு வேண்டுமானால் பயன் படலாமேயொழிய நடைமுறைக்கு உதவாது. தனி நபர் சொத்து சேர்த்துக் கொள்ளலாம் என்கிற சமூகம் எப்போது தோன்றியதோ அப்போதே ஊழலும் தோன்றியிருக்க வேண்டும். சொத்துடமைச் சமுதாயம் தொடரும் வரை ஊழலும் சேர்ந்தே தொடரும்.

Sunday, February 6, 2011

ஆடைகளில் மின்னுவது வண்ணங்களா - இரத்தச் சுவடுகளா?


வண்ணங்களை விரும்பாதவர்களோ, இரசிக்காதவர்களோ இவ்வுலகில் இருக்கவே முடியாது. அனைத்தையும் துறந்த விட்டதாகக் கூறும் சாமியார்கள்கூட காவிக்கு அடிமைகள். சாமிகளே வண்ணத்தை விரும்பும் போது மற்றவர்களைச் சொல்ல வேண்டுமா?

எல்லா அரசியல்வாதிகளும் பொதுவில் விரும்புவது வெள்ளை நிறம். ரொம்ப வெள்ள மனசு இவர்களுக்கு! மனம் அழுக்காய் உள்ளவர்கள் தங்களை வெளுப்பாய் காட்டிக் கொள்வார்கள் என்பது ஒரு உளவியல். எப்பொழுதும் எதிர் நிலை எடுப்பதே மனதின் இயல்பு. அப்பொழுதுதான் தனது பலவீனத்தை மறைத்துத் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடியும். 

கட்சியின் கொள்கைக்கேற்ப ஒவ்வொரு கட்சியும் ஒரு நிறத்தை பட்டா போட்டுக்கொண்டு விட்டன. பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டனுக்கு மஞ்சளும், தலித் இயக்கத் தொண்டனுக்கு நீலமும், பாரதிய ஜனதா கட்சித் தொண்டனுக்கு காவியும் பிடிக்கும். கம்யூனிஸ்டுகளின் விருப்பமாய் இருந்த சிவப்பை இன்று மேல்மருவத்தூர் அம்மாக்கள் அதிகம் நேசிக்கின்றனர். பகுத்தறிவாளர்களின் பாசத்திற்குரிய கருப்பு இன்று அய்யப்ப பக்தர்களின் அன்பிற்குரிய நிறமாய் மாறிவிட்டது.  

தனக்குப் பிடித்த நிறத்தை விரும்புகிற அதே நேரத்தில் பிறருக்கு பிடித்த நிறத்தை வெறுக்கவும் செய்கிறார்கள். சங்கப் பரிவாரங்களுக்கு சிவப்பின் மீது வெறுப்பு. மேல் மருவத்தூரின் சிவப்பும் இவர்களுக்குப் பிடிக்காதுதான். காரணம் சாமானிய சாதிக்காரன் தனி ஆவர்த்தனம் பாடுவதால். நேற்றுவரை கருப்பை வெறுத்த இந்து முன்னணிக்காரனுக்கு இன்று கருப்பும் பிடிக்கும். காரணம் அது அய்யப்பனின் விருப்பமாயிற்றே.

இந்த விருப்பு-வெறுப்பு எல்லாம் தனி நபர் சார்ந்ததல்ல. தாங்கள் கொண்டிருக்கும் கொள்கை கோட்பாடு சார்ந்தது. கொள்கையை மாற்றிக் கொள்ளும் போது இவர்கள் தங்களது நிற விருப்பத்தையும் சேர்த்தே மாற்றிக் கொள்கிறார்கள். கொள்கைளை நேசிப்பவர்களுக்கு இந்த நிறங்கள் தனிப்பட்ட முறையில் பிடிக்கவில்லை என்றாலும் கூட்டமாகச் சேரும் போது அதற்குரிய நிறத்தில்தான் உடையனிய வேண்டும். அதுவே அவர்களின் ஒழுங்கு.

கன்னி மேரிகளுக்கும், அங்கிப் பாதிரிகளுக்கும் வெள்ளை என்றால் ரொம்பப் பிடிக்கும்.விரும்புகிறார்களோ இல்லையோ  இஸ்லாமியப் பெண்களுக்கு கருப்பு (பர்தா) கட்டாயம். இந்த நிறங்கள் மதக் கோட்பாட்டாளர்களுக்கு கட்டாயம் பிடிக்கும். இங்கே நிற விருப்பம் மதத்தால் தீர்மானிக்கப்படுகிறது.

காவலருக்கும், காவலாளிக்கும்,ஓட்டுநர்கள்-நடத்துனர்களுக்கும் காவி கட்டாயம். பள்ளிச் சீருடை, கல்லூரிச் சீருடை, தொழிலாளர் சீருடை, அலுவலக சீருடை என அந்ததந்த நிறுவனங்கள் தீர்மானித்துள்ள நிறங்கள் இவர்களுக்கு கட்டாயம். விருப்பம் இருக்கிறதோ இல்லையோ இவர்களுக்கு இந்நிறுவனத்தின் நிறம் கௌரவம்.

வழக்கறிஞர்கள் உள்ளிட்ட நீதிமான்களுக்கு வெள்ளை உடையும்-கருப்பு கோட்டும், மருத்துவர்களுக்கு வெள்ளை உடையும் அதே நிறத்தில் கோட்டும், செவிலியர்களுக்கு வெள்ளை உடையும் அவசியம். இது இவர்களின் தொழில் சார்ந்த நிறம்.

விதவைகளுக்கு வெள்ளைதான் என நாட்டாமைகள் தீர்ப்பளிக்கின்றன.

இப்படி சாதி, மத, அரசியல், தொழில் அடிப்படையில் ஒரு சில வண்ணத்தில்தான் ஆடைகள் என தீர்மானிக்கப்பட்டுவிட்டன. 

ஆனால் தனிநபர்களின் விருப்பம்! இதற்கு எல்லை ஏது? கருப்பு, வெள்ளை, சிவப்பு, மஞ்கள், நீலம், பச்சை அல்லது இவைகளின் எண்ணற்ற கலவைகளில் பல்வேறு வண்ணங்களை மக்கள் விரும்புகிறார்கள்.

கருப்பாய் உள்ளவர்களுக்கு மெல்லிய வண்ணங்களும், சிவப்பாய் உள்ளவர்களுக்கு அடர்த்தியான வண்ணங்களும் எடுப்பாய் இருக்கும் என்கிற கருத்தியலுக்கு ஆட்படாதவர்களே கிடையாது. அதற்காகவே கடை கடையாய் ஏறி இறங்குவதும், மணிக்கணக்கில்-ஏன் நாட்கணக்கில்கூட வண்ண வண்ண ஆடைகளைத் தேடி அலைவதும் இன்று வாடிக்கையாகிவிட்டது. 

தனக்குப் பிடிக்கவில்லை என்றாலும் கணவனுக்குப் பிடித்த நிறம், மனைவிக்குப் பிடித்த நிறம், காதலிக்குப் பிடித்த நிறம், காதலனுக்குப் பிடித்த நிறம் என பிறரின் அன்புக்காக அணியும் வண்ண வண்ண ஆடைகள். ரூம் போட்டு துணி எடுக்கிற நகைச்சுவை கதைகளெல்லாம் நிஜக்கதைகள்தான். துணி எடுக்க கடைக்குப் போனால்... சும்மா சொல்லக்கூடாது... ஒரு சேலை எடுக்க ஓராயிரம் சேலைகளை உருவிப்போடவேண்டுமே. துர்ச்சாதனர்களைவிட பலசாலிகள் நம் விற்பனையாளர்கள். ஒரு சேலை எடுக்க ஓராயிரம் சேலைகளைப் புரட்டினால் அதற்குரிய மேட்சிங் பால்சுக்கும் பிளவ்சுக்கும் ஓராயிரம் கடைகளில் ஏறி இறங்க வேண்டும். உள்ளாடைகளில்கூட நாம் வண்ணங்களை விடுவதில்லையே.

ஆடைகளில் மட்டுமா வண்ணத்தைத் தேடுகிறோம். வாகனங்களில் தொடங்கி வீட்டில் உபயோகிக்கின்ற ஜாமான்கள் வரை அனைத்திலுமே நாம் நிறங்களைத் தேடுகிறோம். 

”வண்ணங்கள் இல்லாத வாழ்க்கையை நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாது. உணவுக்கு எவ்வாறு உப்பு அவசியமோ, அதுபோல வாழ்க்கைக்கு வண்ணங்கள் அவசியம். வண்ணங்கள் நமக்கு சந்தோஷத்தையும், ஆனந்தத்தைம் தருகின்றன. அதனால் அனைவரும் வண்ணங்களை விரும்புகின்றனர்.
ஆடை மட்டுமின்றி உணவு, செல்போன்கள், காலணிகள், பைகள், கண்ணாடிகள், தலைமுடி என எல்லாவற்றிலும் வித்தியாசமான வண்ணங்களை எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர் இன்றைய இளையதலைமுறையினர். கருப்பு-வெள்ளையில் பாரப்பதற்கு போரடித்த புத்தகங்கள் கூட இன்றைக்கு பலவிதமான வண்ணங்களில் வெளிவந்து படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன.
வண்ணங்களைச் சாதாரணமாக நினைத்து விடக் கூடாது. நாம் தேர்ந்தெடுக்கும் வண்ணங்களை பொறுத்து நம்முடைய மனநிலை அமைவதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்..... "

இப்படி வலைப்பூ ஒன்றில் சொல்லப்பட்டுள்ளது. புற உலகிலிருந்து நாம் பெற்றுள்ள கருத்துக்கள் ஏற்படுத்திய மன நியைிலிருந்தே நாம் வண்ணங்களைத் தேர்வு செய்கிறோம்.  ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட மனநிலை இது. இந்த மனநிலை ஒரு உளவியலாக உருப்பெற்றுள்ளது. இந்த உளவியலே வண்ணங்களைத் தேடி விரட்டுகிறது. பலப்பல வண்ணங்களை விரும்பவது ஒரு உளவியல் தேவையேயொழிய அவசியத் தேவையல்ல. ((it is only a psychological need but not a physiological need)
அவசியமா இல்லையா என்பதிலிருந்து நிறங்களை மக்கள் தீர்மானிப்பதில்லை. தனிப்பட்ட மன விருப்பங்களிலிருந்தே தீர்மானிக்கிறார்கள். தான் எடுப்பாய், அழகாய்த் தோன்ற வேண்டும் என்ற கருத்திலிருந்தே மன விருப்பமும்   அமைகிறது. சுருங்கச் சொன்னால் எதிர் பாலினத்தைக் கவரவே பெரும்பாலானவர்கள் வண்ண வண்ண ஆடைகளை நேசிக்கிறார்கள். இதுவே எதார்த்தம். மற்றபடி எடுப்பான நிறத்தில் ஆடை அணிந்தால் தன்னம்பிக்கை வரும் என்பதெல்லாம் வெற்று நம்பிக்கை. ஆழமான அறிவே தன்னம்பிக்கைக்கு வழி வகுக்கும். இதை நாம் தனிப் பதிவில் பார்ப்போம்.

வெயிலுக்கும், அதிக வெளிச்சத்திற்கும் பொருந்தாத வண்ண உடைகளை அணிந்தால் அவை உடல் நலத்திற்குக் கேடு என்றால் அதில் பொருள் உண்டு. மற்றபடி மஞ்சள் மங்களகரமானது, கருப்பு அபசகுணமானது என வண்ணங்களுக்குத் தரும் தத்தவ விளக்கங்களில் ஒரு வெங்காயமும் கிடையாது. 

இவ்வுலகில் உள்ள எல்லா பொருட்களும் தனிமங்களின் சேர்க்கையிலான மூலக்கூறுகளின் தொகுப்பே. இந்தப் பொருட்களின் மீது ஒளி பட்டு பிரதிபலிக்கும் போது ஏற்படும் ஒரு இயற்பியல் நிகழ்வே நம் கண்களுக்கு வண்ணமாகத் தெரிகிறது. தனிமங்கள் மற்றும் மூலக்கூறுகளின் சேர்க்கைக்கேற்ப வண்ணங்கள் மாறுபடும். இதங்கும் அப்பால் வண்ணங்களுக்கும் வாழ்க்கைக்கும் முடிச்சுப் போடுவது முட்டாள்தனமே.

பச்சைப் பசேலென்ற மலைகளையும், காடுகளையும், பள்ளத்தாக்குகளையும் பார்த்து மயங்குகிறோம். இங்கே பச்சை இரசனைக்குரியது. அதே பச்சையில் ஆடை அணிந்தால் "அய்ய இது என்ன பாய் கலர்ல" என முகம் சுளிக்கிறோம். கண்ணைப் பறிக்கும் ஃபுளோரசன்ட் வண்ணங்கள் பபூன்களுக்கு வேண்டுமானால் பொருந்தும் என்று இருந்தவர்கள் இன்று சீன வாஸ்து வந்தவுடன் இவை தங்கள் வீடுகளை கொழிக்கச் செய்யும் ராசியான வண்ணங்கள் என தங்கள் எண்ணங்களை மாற்றிக் கொண்டார்கள். 

இப்படி வண்ணங்களின் மாய்மாளங்களில் மயங்கிக் கிடக்கிறார்கள் மக்கள். இந்த மயக்கம் திடீர் எனத் தோன்றுவதில்லை. குழந்தையாய் இருக்கும் போது வண்ணங்களில் வேறுபாடு மட்டும்தான் தெரியுமே தவிர அதில் விருப்பு வெறுப்புக்கு இடமில்லை. குழந்தைகளைக் கேட்டுப்பாருங்கள். வண்ணங்களைப் பற்றிய கறபிதம் ஏற்படுத்தப்படாதவரை எல்லா வண்ணங்களுமே அவர்களுக்கு ஒன்றுதான். குழந்தைகள் வளர வளர, வண்ணங்களைப் பற்றிய கருத்து திணிக்கப்பட்டு அதற்கேற்ற மனநிலை வளர்க்கப்படுகிறது. இந்த மனநிலையே நாம் வளர்ந்த பிறகு வண்ணங்களைப் பார்க்கும் போது வெளிப்படுகிறது.

குழந்தையாய் இருக்கம் போது இல்லாத விருப்பு வெறுப்பு வளர்ந்த பிறகு வருகிறது என்றால் அது மாறுபட்ட மனநிலைதானே. ஒருசில வண்ணங்களை வெறுப்பதும் (aversion) ஒருசில வண்ணங்களை விரும்புவதும் (desire) மாறுபட்ட மனக்குறிகளே என ஹோமியோபதி மருத்துவம் நிரூபித்துள்ளது.

மக்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி தங்களின் ஆடைகளை சந்தைப்படுத்தவும் அதிக இலாபமீட்டவுமே முதலாளிள் முயலுவார்கள். அதற்காக புதிய புதிய யுக்திகளைக் கையாளவும் தயங்குவதில்லை. சகோதரர்கள் தங்களின் சகோதரிகளுக்கு "பச்சை நிறச் சேலை எடுத்துத் தரவேண்டும், இல்லை என்றால் ஏதாவது கேடு நேரும்" என்பன போன்ற பீதிகளை அவ்வப்போது பரப்பி தங்களின் விலை போகாத சரக்கை சந்தைப்படுத்தவதை நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். 

வண்ண வண்ண ஆடைகளை அணிந்தால் நீங்கள் "ஆஹா ஓஹோ' என்றிருப்பீர்கள் என பீலாவிட்டு மக்களைக் கவருவார்கள். சில வண்ணங்கள் பிரபலமாகிவிட்டால் அதைவிட மேம்பட்ட ஒன்றை மற்றொரு முதலாளி வெளிக்கொணர்வான். இப்படி போட்டி போட்டுக் கொண்டு வண்ண வண்ண ஆடைகளை உற்பத்தி செய்வார்கள் முதலாளிகள். வண்ணங்கள் அதிகரிக்க அதிகரிக்க சாயப்பட்டறைகளின் மாசும் அதிகரிக்கும் வெகு வேகமாக சுற்றுச் சூழலும் கெடும். உடை அடிப்படைத் தேவைக்கானவை என்பதையும் தாண்டி அவை நுகர்வுக்கானவை, அணிந்து மகிழ் என்கிற வளர்ந்து வரும் நுகர்வுப் பண்பாடே வண்ண வண்ண ஆடைகளை நோக்கி மக்களை விரட்டுகிறது. 

ஆக, பல வண்ண ஆடைகளுக்கான கிராக்கி அதிகமாவதற்கு மக்களிடையே பரப்பப்படும் தவறான கருத்துக்களும், முதலாளிகளின் லாப வெறியுமே முக்கியக் காரணங்களாகும். ஆடைகளில் அதிகப்படியான வண்ணங்களைக் குறைத்தாலே சாயப்பட்டறைகளினால் ஏற்படும் மாசு பெருமளவில் குறையும். அவசியத் தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் வண்ணங்களால் ஏற்படும் சாயக்கழிவு நீரை உண்மையான  ”ஜீரோ டிஸ்சார்ஜ்” மூலம் சுற்றுச் சூழல் கேட்டைக் குறைக்கலாமே.

நமது ஆடைகளில் மின்னுவது வெறும் வண்ணங்கள் அல்ல. அவை சாயக் கழிவு நீரால் பாதிக்கப்பட்ட மக்களின் இரத்தச் சுவடுகள்.

தொடர்புடைய பதிவுகள்: 

Thursday, February 3, 2011

திருப்பூர்: சாயப்பட்டறைகளின் இரட்டைப் படுகொலை!


திருப்பூர் சாயப்பட்டறைக் கழிவுகளின் சுற்றுச்சூழல் கேட்டால் மெல்ல மெல்லக் கொலையாகும் மக்கள் ஒரு பக்கம் . அதே சாயப்பட்டறைகளை நம்பி இதுவரை வாழக்கையை ஓட்டி வந்த மக்கள் இனி உயிர் வாழ்வதற்கான உரிமையை இழக்கும் அபாயம் மற்றொரு பக்கம்.  ஒரு வகையில் திருப்பூர் சாயப்பட்டறைகளால் நிகழ்ந்திருக்கும் இரட்டைப் படுகொலை இது.

739 சாயப்பட்டறைகளை இழுத்து மூடவேண்டும் என உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதி மன்றம். நேரடி வேலைவாய்ப்பில் உள்ள 35 000 பேரும் மறைமுக வேலைவாய்ப்பில் உள்ள இரண்டரை இலட்சம் பேரும் இந்தத் தீர்ப்பால்  வேலையிழப்பார்கள். மிகை நேரப்பணியுடன் சேர்த்து ஒரு நாளைக்கு ரூ.500 வரை சம்பாதித்து 'காஸ்ட்லியான' நகரத்தில் 'சுமாரான' வாழ்க்கையை நடத்தியவர்களின் கதி இனி கேள்விக்குறிதான். பனியன் தொழிலாளர்கள் சங்கத்தின் (AITUC) பொதுச் செயலாளர் தோழர்.கே.பாலாமணி அவர்கள் தனது கவலையை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.

739 சாயப்பட்டறைகளை மூடினால் ரூ.1500 முதல் ரூ.2000 கோடி வரை இனி வருவாய் இழப்பு ஏற்படும். ஆண்டுக்கு ரூ. 11 000 கோடிக்கு வணிகம் நடக்கும் திருப்பூர் பின்னலாடைத் தொழிலே நிலைகுலைந்து போகும். இது முதலாளிகளின் கவலை. 

தீர்ப்பு தாமதமாக வந்தாலும், நொய்யல் ஆற்றில் கழிவுகளைக் கலக்கும் சாயப்பட்டறைகளை மூடுவதற்கு தமிழ் நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் விரைந்து செயல்படும் என விவசாயிகள் எதிர்பார்ப்பதாகவும், வாழ்க்கையை இழந்தாலும் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதால் திருப்பூர், கருர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் நொய்யல் ஆற்றுப் பாசன விவசாயிகள் பாதுகாப்பு சபையின் தலைவர் ஏ.பி.கந்தசாமி கருத்துக் கூறியுள்ளார்.

மாசடைந்த கழிவு நீரால் 70 000 ஏக்கர் விவசாய நிலம் பாழடைந்ததோடு 1.75 இலட்சம் தென்னை மரங்களும் அழிந்துவிட்டன. மாசடைந்த ஆற்று நீரைக் குடித்ததால் புற்று நோயால் 600 பெண்கள் மாண்டு போயுள்ளனர். ஏராளமான கால் நடைகளும் இறந்துள்ளன. திருமணமான பல தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியமே இல்லாமல் போய்விட்டது. குழந்தை பாக்கியம் இருக்காது என அஞ்சுவதால் நொய்யல் ஆற்றங்கரையின் 83 பகுதிகளில் வாழும் இளைஞர்களுக்கு பெண் கொடுக்க அஞ்சுகிறார்கள் பெண்ணைப் பெற்ற பெற்றோர்கள். 


உயர்நீதி மன்ற உத்தரவையடுத்து இன்று மாலை நிலவரப்படி ஐநூறுக்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதைக்கண்டித்து நாளை முழு அடைப்பு நடத்தப்போவதாக இந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளாக விவசாயிகள் விழி பிதுங்கி நின்ற போது வேடிக்கை பார்த்தவர்கள் இன்று முதலாளிகளுக்காக களத்தில் இறங்கியிருப்பதால் இந்து முன்னணியின் புரவலர்கள் யார் என்பதும் சேர்த்தே அம்பலமாகியுள்ளது. 


கழிவு நீரை குழாய்கள் மூலம் நேரடியாக கடலில் கலப்பதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாளை அனைத்து சங்க கூட்டுக் குழு முதல்வரை சந்திக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இப்போதே அணிசேர்க்கை தொடங்கிவிட்டது. இனி திருப்பூரின் நிலை.....? 

இனி வாழ்வை இழக்கப் போகும் தொழிலாளர்களின் பக்கம் நிற்பதா? அல்லது ஏற்கனவே வாழ்க்கையை இழந்த விவசாயிகளின் பக்கம் நிற்பதா? அல்லது இந்து முன்னணியோடு சேர்ந்து முதலாளிகளின் பக்கம் நிற்பதா? தன்னலப் பார்வை மட்டுமே சமூகத்தில் புரையோடியிருப்தால் அவரவர் பக்கமே நியாம் இருப்பதாகத்தான் பாதிக்கப்பட்டவர்கள் கூறுவார்கள். இது ஒரு சிக்கலான பிரச்சனை என்பதால் சற்று விரிவாகப் பரிசீலிப்பதே தொலை நோக்கில் நல்ல தீர்வை வந்தடைய உதவும்.

---------------- 

சில ஆண்டுகளுக்கு முன்பு புதியகலாச்சாரம் இதழின் அட்டையில் ஒரு சிறுமியின் படம் வெளியாகியிருந்தது. திருப்பூர் சாயப்பட்டறைகளால் ஏற்படும் பாதிப்புகளை உணர்த்த அந்த ஒரு படம் போதுமானது. சில செய்திகள் மூளையில் பதிவாகிவிட்டால் மூளை சிதைந்தாலும் பதிவு சிதையாது என்பது போல அந்தப்படம் இன்றும் என் கண் முன்னால் நிழலாடுகிறது. அந்தப்படம் அருவெறுப்பையும், அனுதாபத்ததையும், சீற்றத்தையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்தியது.

"திருப்பூர் சாயப்பட்டறைகள்:வண்ணமா-அவலமா?" http://www.vinavu.com/2010/08/30/tiruppur-coloring-industries  என்ற தலைப்பில் ஜோதிஜி அவர்கள் வினவு தளத்தில் எழுதிய கட்டுரை திருப்பூர் சாயப்பட்டறைகளினால் உருவாக்கப்படும் அபாயத்தை ஆதாரங்களோ அலசியது.

சாயக் கழிவு நீர் இல்லாமல் ஆடைகளை தயாரிப்புது ஒன்றுதான் இதற்கு சிறந்த வழி என்பதை தனது நண்பர் நடத்தும் தொழிலை ஆதாரமாக சுட்டிக்காட்டியுள்ளார் ஜோதிஜி. 
"என்னுடைய நண்பர் மற்றவர்களைப் போல  பெரிய முதலீடுகளை முடக்காமல் வௌ்ளையை மட்டும் விருப்பமான தொழிலாக தொடக்கம் முதல் செய்து கொண்டிருக்கிறார். எது நம்மால் முடியாது என்று தெரிகின்றதோ? அதில் நுழையாமல் இருந்தாலே நம்முடைய தொழில் வெற்றி உறுதி என்று என்னை உணர வைத்தவர். சாயக்கழிவு நீரை ஒப்பிடும் போது சலவைப்பட்டறையில் இருந்து வெளிவரும் நீரின் நச்சுத்தன்மை குறைவானதே.  ஊரில் துவைத்துக் கொடுப்பவர்கள் வெள்ளாவி என்று கேள்விப்பட்டு இருப்பீங்களே?  அதைப் போல சற்று கொஞ்சம் நவீனம்".
ஆனால் நடைமுறையில் வண்ண ஆடைகளுக்கே அதிக கிராக்கி என்பதையும் அதே கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
"திருப்பூர் ஆடை உற்பத்தியில் வௌ்ளை ஆடைகளை விட வண்ண ஆடைகளுக்குத் தான் அதிக கிராக்கி...” 

அதிக நிறங்களைப் பயன்படுத்தவதால்தான் கழிவு நீர் அதிக நச்சுத் தன்மையடைவதையும் கூறுகிறார்.

"நிறங்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக இங்குள்ளவர்களின் வாழ்வாதாரம் வகை தொகையில்லாமல் அழிந்து கொண்டிருக்கிறது. காரணம் விரும்பும் ஒவ்வொரு நிறத்திற்கும் பயன்படுத்தும் சாயத்தின் அடர்த்தி பொறுத்து வெளியாகும் கழிவு நீரில் நச்சுத்தன்மை அதிகரித்துக் கொண்டேயிருக்கும்".

கிராக்கி (demand) எதற்கு அதிகமோ அதை உற்பத்தி செய்வதுதானே புத்திசாலித்தனம். அதனால் ”ஜீரோ டிஸ்சார்ஜ்” முறையில் தொழில் செய்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். இதற்கு அதிக செலவாகும். 

இதையும் ஜோதிஜி அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்.
"இதிலும் சிறப்பான பல நிறுவனங்களும் உண்டு. பிரச்சனை வராத காலத்திற்கு முன்பே இதை சமூகப் பிரச்சனையாக பார்த்து ஜீரோ டிஸ்சார்ஜ் என்று சாயத் தண்ணீரை சுத்திகரித்து வெளியே அனுப்பத் தொடங்க இன்று அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. சுத்திகரிக்கப்பட்ட அந்த சாய நீரை இன்று தென்னைகளுக்கு பாய்ச்சும் அளவுக்கு கொண்டு வந்து உள்ளனர்".

ஜோதிஜி அவர்களின் கட்டுரைக்கு பின்னனூட்டமிட்ட பல நண்பர்கள் பல்வேறு ஆலோசனைகளை முன் வைத்துள்ளனர். நவீன முறையில் "ஜீரோ டிஸ்சார்ஜ்" மூலம் இதற்குத் தீர்வு காணலாம் என பலரும், வெள்ளை ஆடைகளை உடுத்தலாம் என ஒரு சிலரும் கூறியுள்ளனர். "ஜீரோ டிஸ்சார்ஜ்" என்றாலும் அதற்கான கூடுதல் செலவை சுமக்கப் போவது யார்? நிலம் பாழானது போதாது என இப்போது கடலையும் பாழாக்க புறப்பட்டுள்ளனர் சிலர். ஆனால் வண்ண ஆடைகளுக்கு மட்டும் அதிக கிராக்கி ஏன் என்பது குறித்து யாரும் பரிசீலிக்கவில்லை.

வண்ண ஆடைகளுக்கு மட்டும் அதிக கிராக்கி ஏன்? இந்த கிராக்கி யாரால் ஏற்படுத்தப்பட்டது? இக் கேள்விகளுக்கு விடை தேடாமல் சாயப்பட்டறைகளை ஒழிக்கவும் முடியாது. சாயக் கழிவுகளின் பாதிப்பிலிருந்து மக்களை காக்கவும் முடியாது. இதை ஒரு தனி தலைப்பில் பிறகு பார்க்கலாம்.