Friday, March 4, 2011

ஊர்ப் பயணம்! கலைஞருக்கு 'ஓட்டு' விழுமா?

நிலையத்திலிருந்து புறப்பட்ட பேருந்து, தனியார்ப் பேருந்தைப் போலல்லாமல் விரைவிலேயே நகரைக் கடந்து மாநில நெடுஞ்சாலையில் விரைந்து சென்றது. காலை நேரம் என்பதால் அதிகாலையிலேயே எழுந்து பயணத்திற்காகத் தூக்கத்தைக் தொலைத்தவர்கள் சிலர் தூங்கிக் கொண்டும், சிலர் பேசிக் கொண்டும், ஒரு சிலர் கண்களை மூடியவாறு காதுகளில் 'ஹியர் ஃபோனை' மாட்டிக் கொண்டு தாங்கள் விரும்பிய பாடல்களைக் கேட்டுக் கொண்டும் வந்தனர். தூக்கம் கெட்டிருந்தாலும் நான் பேருந்துப் பயணத்தின் போது தூங்குவதில்லை.  பயணங்கள் தரும் பாடங்கள் நிறைய இருக்கே.

கண்ணுக்கெட்டிய தூரம் எங்கு பார்த்தாலும் பசுமை நிறைந்த நெல் வயல்களும், கரும்புத் தோட்டங்களும், வாழை மரங்களும் கண்களைக் குளிர வைக்கும் போது தூக்கம் எப்படி வரும்?

அடுத்து வட்டத் தலைநகர் வந்தது. இறங்கி அடுத்தப் பேருந்தில் ஏறி பயணமானேன். முப்பது கி.மீ. தூரப் பயணம். விரைவுப் பேருந்து என்பதால் உரிய நேரத்தில் சென்று விடும். எனது கிராமத்துக்குச் செல்லும் நகரப் பேருந்தை பிடித்து விடலாம் என்ற மகிழ்ச்சியோடு இருந்தேன். இன்னும் பத்து நிமிடம் பயணித்தால் நான் செல்லவேண்டிய இடத்தை அடைந்துவிடலாம் என எண்ணிய போது ஓட்டுநர் பேருந்தை ஓரம் கட்டினார். 

எனக்கு சற்றே கலக்கம். அது ஒரு சிறிய கிராமம். எதற்கு இங்கே ஓரம் கட்டுகிறார் என எண்ணிக் கொண்டிருந்த போது ஓட்டுநரும் நடத்துநரும் அருகில் இருந்த சிறிய சிற்றுண்டியகத்திற்குச் சென்றார்கள். அவர்களோடு 'பேண்ட்' சட்டை போட்டவர்களும் செல்லவே நானும் சென்றேன். நான்கு இட்லி, இரண்டு வடை. மொத்தமே பத்து ரூபாய்தான். போதுமானதாக இருந்தது. காரச் சட்னி, தேங்காய்ச் சட்னி, சாம்பார் என தூக்கலாய்தான் இருந்தது. ஓட்டுநர்களும் நடத்துநர்களும் சாப்பிடுகிறார்கள் என்றால் சும்மாவா?

தேசிய நெடுஞ் சாலைகளில் உள்ள ஒரு சில 'மோட்டல்களை' நினைத்துப் பார்த்தேன். அவைகள் பசியாற்றும் 'ஓட்டல்கள்' அல்ல. தொலைதூரப் பயணிகளை மறித்து காசு பறிக்கும் வழிப் பறி கொல்லையர்களின் கூடாரங்கள்.

இரண்டு மொடக்குக்குக்கூட ஆகாத டீ, பாதி சோடா மாவு மற்றும் ஆமணுக்குக் கொட்டையால் குஷ்பு இட்லியாக மாறிய ரேசன் அரிசி. இட்லி ஆறிப் போனால் நாறிவிடும் என்பதால் சூடாகத்தான் கொடுப்பார்கள். ஆவி பறக்கும் இட்லியைப் பார்த்த உடனே நம்மாளு மயங்காமலா இருப்பான். அதுவும் நல்லிரவு லேசான குளிரும் சேரும் போது விடவா முடியும். இட்லி சூடாக இருக்கும் போது பூப் போலத்தான் இருக்கும். குடலின் ஈரம் பட்டு 'கொன்ச்சிங்' ஆன இட்லி கடினமாகி குடலை கெட்டியாய் பிடித்துக் கொள்ளும். அதன் விளைவை பிறகு தவிர்க்கவா முடியும்?

இங்கு விலையோ மூன்று மடங்கு. 'லீ மெரிடியனில்'கூட உணவருந்திவிட்டு பத்து ரூபாயை மிச்சப் படுத்தி வெளியே வந்து நகரப் பேருந்தில் வீடு போய்ச் சேரலாம். ஆனால் 'மோட்டல்களுக்குச்' சென்றால் 'பர்சு' காலி. 'ஏ.டி.எம் கார்டு' இருந்தால் ஊர்ப் பயணம் தொடரலாம். இல்லை என்றால் ஊராவது பயணமாவது வேலை கிடைத்து விட்டது எனக் கருதி அங்கேயே 'செட்டிலாகலாம்'.

உள்ளே சென்றால்தானே காசைப் பறிக்கிறார்கள். வெளியிலேயே 'பிஸ்கட் பாக்கெட்' ஒன்றை வாங்கித் தின்று தண்ணீர் குடித்தால் போதும் எனக் கருதி வாங்கச் சென்றால் விலையோ எகிறிக் கிடக்கும். ஐந்து ரூபாய் 'பிஸ்கட்' ஏழு ரூபாயாம். எங்கே சென்று முறையிடுவது? காய்ந்த தொண்டையை இரண்டு ரூபாய் 'பாக்கெட்' தண்ணீரால் ஈரப்படுத்தி பயணத்தைத் தொடர வேண்டியதுதான், ஊர்ப் போய்ச் சேர்ந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று. 

காலை சிற்றுண்டி முடித்து பேருந்து புறப்பட்டது. நடத்துநரிடம் பேச்சுக் கொடுத்தேன். "முன்ன மாதிரி கஷ்டமில்ல சார்", "ரோடு நல்லாயிருக்கு" என்றார். ஓராண்டுக்கு முன்பே மாநில நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு புதுப்பிக்கப்பட்ட சாலை. பல தேசிய நெடுஞ்சாலைகளைவிட மேம்பட்ட தரத்தோடு போடப்பட்டிருந்தது. இப்பொழுது அதில் பயணிப்பது அலாதி சுகம்தான்.

இதே சாலையில் கடந்த நாற்பது ஆண்டுகளாக அவ்வப் பொழுது பயணித்துள்ளேன். முப்பது கிலோ மீட்டருக்கு மூன்று மணி நேரம் ஆகும். 'கார்ப்' பந்தயங்களை நடத்த காடு மேடுகளுக்குச் செல்ல வேண்டியதில்லை. குறை மாத கர்ப்பிணிகள் முப்பது கிலோ மீட்டரிலேயே நிறைமாதமாகி குழந்தைகளைப் பெற்றெடுப்பதும் உண்டு. கூடுதலாக ஒரு இட்லியை வயிற்றில் திணித்து அவசரமாய்ப் பேருந்தில் பயணிக்கும் வயதுப் பெண்கள் பேருந்து குலுக்கும் குலுக்கலில் வாந்தி எடுத்து பிறரின் சந்தேகத்திற்கு ஆளாவதும் உண்டு. இன்று நெடுஞ்சாலைகள்தான் மேம்பட்டுள்ளன. கிராமச் சாலைகளில் பயணித்தால் மூன்று கிலோமீட்டர் பயணத்திலேயே மேற்கண்ட அதிசயங்கள் நிகழும். 

எனது ஊருக்குச் செல்லும் கூட்டுச் சாலை வந்தது. காலை மணி ஒண்பதைத் தாண்டிவிட்டது. நகரப் பேருந்து சென்று விட்டது. ஏழு கி.மீ தூரம் எப்படிச் செல்வது? படிக்கும் காலத்தில் பெரும்பாலும் நடந்தே செல்வேன், இள வயசு.

அப்பொழுதெல்லாம் வாடகை சைக்கிள் கடை ஒன்று இருக்கும். உடனே திரும்புவதாக இருந்தால் சில நேரங்களில் சைக்கிள் எடுத்துச் செல்வேன். திரும்புவதற்கு ஒன்றிரண்டு நாட்கள் ஆகும் என்றால் சைக்கிளை யார் திரும்ப ஒப்படைப்பது? இரண்டு நாள் வைத்திருந்து எடுத்து வரலாம் என்றால் நாள்வாடகை கொடுத்து கட்டுப்படியாகுமா? அதனாலேயே பெரும்பாலும் நடந்தே சென்றுவிடுவேன்.

வாடகை சைக்கிள் கடைகளைல்லாம் இன்று பழங்கதைகளாகி வருகின்றன. கிராமமோ, நகரமோ 'ஸ்பிலண்டர்களும்' 'பல்ஸ்சர்களும்' சீறிப் பாயும் காலம் இது. ஊர்ப்பக்கம் செல்லும் ஒரு வாகனத்தில் ஒட்டிக் கொண்டேன். ஊரைச் சென்றடைந்தேன். ஏரி நிறைந்திருந்தது. நெல் வயல்களும், கரும்புத் தோட்டங்களும் கண்களைக் குளிர வைத்தன. எல்லாம் இந்த ஆண்டு பெய்த நல்ல மழையால் ஏற்ப்பட்டதன் விளைவு.

தேர்தல் வருகிறது. கருணாநிதி ஆட்சி என்றால் மழைகூட பெய்யாது என்பது காலங்காலமாய் இருக்கும் கிராமத்து நம்பிக்கை. இந்த அறியாமைதானே சில தேர்தல்களில் எம்ஜியாருக்கும் ஜெயலலிதாவுக்கும் கோட்டைக் கதவுகளை திறக்க உதவின.

மேம்பட்ட நெடுஞ்சாலைகளால் ஊர்ந்து சென்ற வாகனங்கள் இன்று சீறிப்பாய்கின்றன. சாதாரண மக்களையும் விழி பிதுங்க வைத்த தக்காளி, பூண்டு, வெங்காயம், உள்ளிட்ட காய்கறிகளின் விலை வெகுவாய்க் குறைந்துவிட்டன. கருணாநிதியின் தயவால் குறையவில்லைதான். இது விளைச்சல் காலம். இருந்தாலும் ஜெயலலிதாவுக்கு இது சாதகம் இல்லையே.

எதைச் சொல்லி எதிர்க்கட்சிகள் ஓட்டுக் கேட்பார்கள்?. கருணாநிதிக்கு 'ஓட்டு' விழுமா? கூட்டணி பலமாய்ப் போட்டாலும் ராஜா-கனிமொழியின் கூட்டு கலைஞரின் கோட்டைக் கனவுக்கு வேட்டாய் மாறுமா? ஐயம் தொடர்கிறது.

ஊர்ப் பயணமும் தொடரும். மீண்டும் சந்திப்போம்!

No comments:

Post a Comment