Thursday, March 24, 2011

யாருக்கும் வெட்கமில்லை!

சென்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடந்த நிகழ்ச்சி இது. "காலனி ஓட்டு எல்லாம் நமக்குத்தான்" என நைச்சியமாகப் பேசி அ.தி.மு.க வேட்பாளரிடம் ரூபாய் ஐம்பதாயித்தை பெறுகிறார் ஒரு "அல்லக்கை" (கைமேல் பலனை எதிர்பார்த்து களப்பணியாற்றும் 'செயல் வீரர்'). வேட்பாளர் உயர்சாதிக்காரர். காலனியோ சிறுத்தைகளின் முகாம்.

சிறுத்தைகள் தி.மு.க கூட்டணியில் இருப்பது தெரிந்தும் பக்கத்துத் தெரு முகாமிற்குள் அ.தி.மு.க "அல்லக்கை" நுழைகிறார். கண்ணில் தெரிந்த ஒருசில சிறுத்தைகளிடம் தலா 200 ரூபாயைக் கொடுத்துவிட்டு கம்பி நீட்ட முற்படும் போது சிறுத்தைகள் அவரை சிறை வைக்கிறார்கள். "அல்லக்கை" எவ்வளவு வாங்கியிருக்கும் என்பது சிறுத்தைகளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். தெரியாமலா சிறைவைக்கிறார்கள்? உண்மையை ஒப்புக்கொண்டு மொத்தத் தொகையையும் கொடுக்க "அல்லக்கைக்கு" மனமில்லை. அதற்குள் "அல்லக்கையின்" தெருவிற்கு செய்தி பரவுகிறது. அ.தி.மு.க கூட்டணியில் அன்று அங்கம் வகித்த பா.ம.க வைச் சேர்ந்த மற்றொரு "அல்லக்கைக்கு" செய்தி போக, கட்டைப் பஞ்சாயத்து நடக்கிறது. பா.ம.க. "அல்லக்கையும்" தாழ்த்தப்பட்டவர்தான். இறுதியில் ஒரு தொகை முகாமிற்கு கைமாற அ.தி.மு.க "அல்லக்கை" முகாமிலிருந்து விடுதலையாகிறார். 

சிறுத்தைகள் அ.தி.மு.க வுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று தெரிந்தும் ஒரு கணிசமான தொகையை அமுக்க அ.தி.மு.க "அல்லக்கை" கணக்குப் போட்டது. "எதிர்க்கட்சி வேட்பாளராய் இருந்தால் என்ன? வந்த காசை வாங்குவதில் தவறேதுமில்லை" என கணக்கு போட்டார்கள் சிறுத்தைகள்.

இது ஏதோ சிறுத்தைகள் கணக்கு மட்டமல்ல. சாதி, மதங்களைக் கடந்து ஆகப் பெரும்பான்மையான வாக்காளர்களிடம் வளர்ந்துள்ள பிழைப்பு வாதக் கணக்கு. 

கடந்த உள்ளுராட்சித் தேர்தலின் போது நகராட்சிப் பகுதியில் வசிக்கும் உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். வெட்கமில்லாமல் சொன்னார்கள். "இந்தக் குடை ம.தி்.மு.க கொடுத்தது. இட்லி குண்டான் அ.தி.மு.க கொடுத்தது. குடம் காங்கிரஸ் கொடுத்தது". 

இதெல்லாம் 'வார்டு கவுன்சில்'வேட்பாளர்கள் கொடுத்தது.'சேர்மன்' வேட்பாளர்கள் கொடுப்பது தனி. 

வருகின்ற சட்டமன்றத் தேர்தல் பற்றி கருத்துக் கேட்டு தினமணி (20.03.2011) செய்தி வெளியிட்டுள்ளது. 

பெரியண்ணன் (80): சென்ற தேர்தலில் 200 ரூபாய் வாங்கிக் கொண்டு வாக்களித்தாராம். உதவி கேட்டு சென்ற போது "காசு வாங்கிக் கொண்டுதானே வாக்களித்தாய்" என்று வெற்றி பெற்றவர் திருப்பிக் கேட்டாராம். அதனால் இந்த முறை காசு கொடுப்பவனுக்கு வாக்களிக்க மாட்டாராம்.

இவருக்கு உதவி கிடைத்திருந்தால் இந்தத் தேர்தலிலும் காசு வாங்கத் தயங்கி இருக்க மாட்டார். காசு வாங்குவது தவறென்று இவர் நினைக்க வில்லையே. 

தனக்கு உதவி கிடைக்கவில்லை என்கிற சுயநலம்,அதாவது பிழைப்புவாதம்தான் இவரிடம் இருக்கிறது.

கோவிந்தம்மாள் (55): முதியோர் உதவித்தொகை கேட்டுச் சென்றால் 2000 ரூபாய் கேட்கிறார்களாம். அதனால் யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வேன் என்கிறார். ஆனால் நல்ல வேட்பாளர் யார் என்று பார்த்துதான் வாக்களிப்பாராம்.

ஒரு பேச்சுக்கு, போலிக் கம்யூனிஸ்டு வேட்பாளர்கள் நல்லவர்கள் என்று எடுத்துக் கொண்டாலும் தமிழ் நாட்டில் 22பேர்தான் தேருவார்கள். கோவிந்தம்மாள் இருக்கிற தொகுதியில் போலி கம்யூனிஸ்டுகளும் போட்டியிடவில்லை. பிறகு யாருக்கு இவர் வாக்களிப்பார்?

இது பிழைப்புவாதத்தின் மற்றொரு வகை.

சாந்தி (32): "யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வேன். ஊரெல்லாம் பணம் கொடுக்கும் போது நான் மட்டும் எதற்கு பணம் வேண்டாம் என்று கூற வேண்டும்.மூக்குத்தி,'மிக்சி','கிரைண்டர்' எல்லாம் கொடுப்பதாகக் கூறுகிறார்கள் எது கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு நல்ல வேட்பாளர்களுக்கே வாக்களிப்பேன்".

இவர் தமிழக வாக்காளர்களின் பிழைப்பு வாத மன நிலையை ஒட்டு மொத்தமாகப் பிரதிபலித்துவிட்டார்.

பட்டிக்காட்டு ஜனங்கள், படிக்காதவர்கள், வசதியற்றவர்கள்தான் இப்படி "நாங்களெல்லாம் யோசித்து நல்லவனுக்குத்தான் வாக்களிப்போம்" என மெத்தப் படித்த மேதாவிகள் சொல்லலாம்.படிக்காதவர்கள் யாரை ஆதரிக்கிறார்கள் என்பது வெள்ளந்திரியாய் தெரிந்துவிடும். வாங்குவதையும் வெளிப்படையாக ஒப்புக் கொள்வார்கள். படித்த மேட்டுக் குடியினர், இலட்சக் கணக்கில் சம்பாதித்தாலும் பத்து ரூபாய் தட்டு என்றாலும் விட்டு விடுவதில்லை. விதிவிலக்காக இருப்பவர்கள் வம்புக்கு வரவேண்டாம்.

நல்ல வேட்பாளர்களுக்கு வாக்களிப்பேன் என்று இவர்கள் சொல்வது கேட்பவனை கேனயனாக்குவதே தவிர வேறொன்றுமில்லை.

இந்த லட்சணத்தில் வாக்கு என்பது நமக்கு இந்த ஜனநாயகம் கொடுத்துள்ள மிகப் பெரிய ஆயுதமாம். ஒவ்வொரும் வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டுமாம். அதனால்தான் என்னவோ பல்லுப்போன கிழவிகள் கட்டிலேறி வருகிறார்கள்; செத்தவர்கள் உயிர் பெற்றுவிடுகிறார்கள். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்தது நமது பணநாயகம். சி... ஜனநாயகம்.

அரசியல்வாதிகளும், "அல்லக்கைகளும்" மக்களை பிழைப்புவாத்திற்கு அழைத்துச் சென்று ஆண்டுகள் பல ஆகிவிட்டன. 'வார்டு' தேர்தல் முதல் 'எம்.பி' தேர்தல் வரை எந்த வேட்பாளர் எவ்வளவு கொடுப்பான் என்று எதிர்பார்க்கும் நிலைக்கு மக்களை மாற்றியிருக்கிறார்கள் அரசியல்வாதிகள். இதுதான் வேட்பாளர்களின் மிகப் பெரிய பலம்.

ஏற்கனவே பதவியில் இருந்தவன் என்றால் "கொள்ளையடித்த பணத்தில்தானே கொடுக்கிறான்" எனவும் புதிய வேட்பாளர் எனில் "சும்மாவா முதல் போடுகிறான்" எனவும் மக்களை கணக்குப் போட வைத்துவிட்டார்கள். யார் யார் எவ்வளவு கொடுப்பார்கள் என எதிர்பார்த்துதான் பலரும் காத்திருக்கிறார்கள். இதுவே இன்றைய மக்களின் மனநிலை. சுருக்கமாகச் சொன்னால் இத்தகைய தேர்தல்கள் மக்களை ஊழல்படுத்தியதுதான் மிச்சம். இது மக்களின் குறையல்ல. நமது ஜனநாயகத்தின் பலவீனம்.

காசு கொடுத்தால் வாங்கமாட்டேன் என்று சொல்வதற்கு இன்று ஒருவரும் இல்லை என்ற நிலைதான் நிலவுகிறது. நடு நிலையாளர்களாக நடந்து கொள்ளவே பலரும் விரும்புகின்றனர். ஒரு குறிப்பிட்ட கட்சிக்காரன் என்ற முத்திரை விழுந்துவிட்டால் மற்ற கட்சிக்காரனிடமிருந்து வரும் தொகையை இழக்க வேண்டி வருமே. "பிழைப்புவாதியே சாமார்த்தியசாலி" என்பதே இன்றைய புதுமொழி.இதை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல. காசு கொடுப்பதை தடுக்க முற்பட்டால் 'வரவேண்டிய காசை தடுத்திட்டானே' பாவி என எதிராகத்தான திரும்புவார்கள். 

மாற்று அரசியலுக்கான போராட்டத்தில் ஈடுபடுத்துவதன் மூலம் மட்டுமே இத்தகைய பிழைப்புவாதத்திலிருந்து மக்களை மீட்க முடியும். பிழைப்புவாத சிந்தனையிலிருந்து மக்களை மீட்டெடுக்காமால் அரசியல் பிழைப்புவாதிகளை ஒழிக்க முடியாது.

No comments:

Post a Comment