Wednesday, June 22, 2011

கொடுமைக்கு ஆளாவது மருமகள்களா அல்லது முதியோர்களா? ........தொடர்ச்சி

முதியோர்கள் மீது....

வரன் பார்க்கும் போதே மாமியார் இல்லாத வீடு அல்லது பையனை நம்பி அவனது அப்பா அம்மா வாழ்தாலும் அவர்கள் தனியாக இருந்தால் நல்லது என கணக்குப் போடும் பெண்வீட்டாரும் இருக்கத்தானே செய்கிறார்கள். முன்கூட்டியே தீர்மானிக்க முடியவில்லை என்றாலும் பிறகு என்ன செய்கிறார்கள்? மாமனாரையும் மாமியாரையும் வீட்டை விட்டு துரத்துவது அல்லது தனிக்குடித்தனம் செல்வது இதில் எது சாத்தியமோ அதற்காக மருமகள்கள் புகுந்த வீட்டில் தொடுக்கும் முதல் யுத்தம் இதுதான். இந்த யுத்தத்திற்கு இடைவிடாது தூபம் போடுவது மருமகளின் தாய்தான். இதில் வெற்றி பெறுவது என்னவோ மருமகள்தான். இந்த வெற்றியை தீர்மானிப்பதில் பெரும் பங்காற்றுவது மருமகள் கொண்டு வந்த நகை, பணம், சொத்து, சீர்-செனத்தைதான்.

மாமனாரும் மாமியாரும் கைநிறைய சம்பாதிக்கிறார்கள், கனிசமாக 'பென்சன்' வாங்குகிறார்கள் என்றால் வீட்டின் ஒரு ஓரத்தில் இருப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள். அவர்களின் சம்பாத்தியம் கணவனின் கைக்கு வந்தால் மட்டுமே இந்தச் சலுகை. அதே நேரத்தில் மாமனாருக்கு புதிய வேலைகளும் தீர்மானிக்கப்படும். மளிகைக் கடை, ரேஷன் கடை, காய்கறி மார்க்கெட், கரண்ட் பில், போன் பில் என வெளிப் பணிகள் அனைத்தும் பி.பி.ஓ ( BPO) செய்யப்படும். மாமனாரும் மாமியாரும் தண்டச் சோறு என்றால் வெளிப்பணிகளும் இல்லை, வீட்டில் தங்க இடமும் இல்லை.

மருமகள் கர்ப்பமாகி வளைகாப்பு முடிந்து அம்மா வீட்டிற்குச் சென்று விடுவார். அம்மா வீட்டில்தான் குழந்தை பிறக்கும். மகப்பேறு செலவுகள் அனைத்தையும் இப்போது பெண்வீட்டார்தான் சுமக்க வேண்டும். புதிதாய் குழந்தை பெற்ற தாய்க்கு குழந்தையை பராமரிக்கத் தெரியாதாம். அதனால் அம்மா வீட்டிற்குச் சென்றால் நன்றாக கவனித்துக் கொள்வார்களாம். தனது தாயைப்போல மாமியாரும் குழந்தை பெற்று வளர்த்த அனுபவசாலிதானே. ஏன் மாமியார் பார்த்துக் கொள்ளக்கூடாது? இதற்கு மாமியாரும் தயாரில்லை,  மருமகளும் தயாரில்லை.

குழந்தை பிறந்து ஒன்றிரண்டு மாதங்கள் கழித்து மருமகள் புகுந்த வீடு திரும்புவார். குழந்தையை பார்த்துக் கொள்ள தனது தாயை உடன் அழைத்து வரலாம். ஆனால எத்தனை நாளுக்குத்தான் மகள் வீட்டில் தாயால் இருக்க முடியும்? அவருக்கும் கணவனும் குடும்பமும் உண்டே! மாமியாரும் மாமனாரும் குறிப்பாக மாமியார் இருந்தால் ஒத்தாசையாக இருக்கும். என்ன செய்ய? அவர்களைத்தான் ஏற்கனவே விரட்டியாச்சே!

இப்பொழுது மருமகளின் பாடு திண்டாட்டம்தான். "ஏங்க மாமாவும் அத்தையும் தனியா எதுக்காக கஷ்டப்படனும். அவங்களும் நம்ம கூடவே இருந்துட்டுப் போவட்டுமே"என கணவனிடம் நைச்சியம் பேசி மாமனாரையும் மாமியாரையும் வரவழைப்பதில் மருமகள் வெண்புறாவாக மாறிவிடுவார். குழந்தை ஆய் போனால் கழுவுவது, பத்து பாத்திரம் தேய்ப்பது என வீட்டு வேலைக்கார ஆயாவுக்கு உரிய உட்பணிகள் அனைத்தும் மாமியாரிடம் ஒப்படைக்கப்படும். மாமனாருக்கு ஏற்கனவே சொல்லப்பட்ட வெளிப் பணிகளோடு குழந்தைகளை காலையில் பள்ளிக்கு அழைத்துச் சென்று மீண்டும் மாலையில் அழைத்து வருவது என கூடுதலான வெளிப்பணி சேர்க்கப்படும்.

காலம் வெகுவேகமாக உருண்டோடிவிடும். பிள்ளைகள் வளர்ந்து தனியாக பள்ளிக்குச் செல்லத் தொடங்கி விடுவார்கள். மாமனார் மாமியார் இருவருக்கும் வயதாகிவிட்டது.ஒதுக்கப்பட்ட உள்பணி மற்றும் வெளிப் பணிகளை அவர்களால் சரிவரச் செய்ய முடிவதில்லை. குறிப்பாக மாமனார் அடிக்கடி நோய்வாய்படுவது அதிகரித்து விட்டது. எப்பொழுதும் இருமலும் காருவதுமாக இருப்பது தொல்லையாக மாறிவிட்டது. குறிப்பாக பிள்ளைகளுககு நோய் தொற்றிவிடும்.

நடுத்தர வர்க்கம் என்றால் முதியோர் இல்லத்தில் தள்ளி விடுவதும் ஏழைகளாயிருந்தால் மாட்டுக் கொட்டகையோ அல்லது வீட்டுத் தாழ்வாரமோ ஒதுக்கப்படும். உயிர் மட்டும் ஒட்டியிருப்பதற்குத் தேவையான கூழோ கஞ்சியோ ஊத்தப்படும். அவைகூட அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட டொக்கு விழுந்த ஒரு பாத்திரத்தில் கொட்டப் படும். 'கஞ்சி ஊத்திட்டாங்க போல' என அவர்களே தெரிந்து கொண்டு குடித்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் படுபாவி பட்டினி போட்டே கொன்று விட்டாளே என்ற பழி வந்து விடுமே! காலையிலும் மாலையிலும் கமழும் தேனீர் மற்றும் காஃபியின் மணம் நாசித்துவாரங்களைத் துளைக்கும் போது நாவில் எச்சில் ஊறும். சிறிது நேரத்தில் காற்றில் மிதந்து வந்த மணமும் மறையும்.  நாவில் ஊறிய எச்சிலும் வறண்டு போகும்.வாசத்திலேயே தொண்டையை நனைக்கும் முதியோர்கள்தான் எத்தனை பேர்!   

முதியோர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை பட்டியலிட்டால் வலைப்பூக்கள்கூட கருகிவிடும். இத்தகைய கொடுமைகளுக்கு மருமகள்களே முக்கியப் பங்காற்றுகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

இப்படி மாமியார் மாமனார்கள் ஒருபுறமும், மருமகள்கள் மற்றொரு புறமும் என மாறி மாறி ஒருவரை ஒருவர் துன்புறுத்துகிறார்கள். சொந்த உறவுகளையே துன்புறுத்தும் இவர்களுக்கு சமூகத்தில் நிலவும் பிறரின் துன்ப துயரங்கள் மட்டும் எப்படிப் புரியும்? அதனால்தான் சமூக உணர்வு என்பது இத்தகையோருக்கு சுட்டுப் போட்டாலும் வருவதில்லை.  

மருமகள்களும் முதியோர்களும் துன்புறுத்தப்பட்டு இந்தியாவெங்கும் பிண வாடைதான் வீசுகிறது. இதுதான் இன்றைய இந்தியா.  ஏதோ ஒரு சிலர் மட்டும் இப்படி நடந்து கொண்டால் உபதேசம் செய்து திருத்திவிடலாம். ஆனால் விதிவிலக்காக ஒருசிலரைத் தவிர ஒட்டு மொத்த சமூகமும் இப்படி இருந்தால் எப்படித் திருத்த முடியும்?

இந்து, முஸ்லீம், கிருத்துவ மதத்தினரும், பார்ப்பனர், ரெட்டியார், பிள்ளைமார், கள்ளர், தேவர், மறவர், நாடார், முத்தரையர், செட்டியார், வன்னிய-வெள்ளாள-வேட்டுவ-ஊராளி-குரும்ப கவுண்டர்கள், நாயுடு, பள்ளர், பறையர், சக்கிலியர், வண்ணார், வாணியர், நாவிதர், செங்குந்த-துளுவ வேளாள-அகமுடைய முதலியார் என சகல சாதி மக்களும் இதில் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். தேசம் நெடுக இழையோடும் நமது பண்பாடு இதுதான்.

பணமும் பொருளுமே வாழ்க்கை என முன்னிறுத்தப்பட்டு இவற்றை அடைவதே வாழ்க்கையில் வெற்றியாக கருதப்படுகிறது. அதற்காக எத்தகைய பஞ்சமா பாதகங்களையும் செய்வது தவறில்லை என்கிற போக்கு நிலவுகிறது. குறிப்பாக இன்றைய உலக மயம் ஏற்படுத்தியுள்ள நிச்சயமற்ற எதிர்காலம் இவற்றை மேலும் தீவிரப்படுத்திவருகிறது. அதனால்தான் சமீப காலங்களில் வரதட்சணைக் கொடுமைகள் அதிகரித்துள்ளன. முதியோர் இல்லங்கள் பெருகி வருகின்றன.

மருமகள்களும், மாமனார்-மாமியார்களும் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? இன்று நேற்றல்ல, காலம் காலமாக இத்தகையக் கொடுமைகள் தொடர்ந்து அரங்கேறுவது எதனால்?  இது தனிநபர் சார்ந்த விவகாரமா அல்லது சமூகம் சார்ந்த பிரச்சனையா? கொடுமை செய்யும் தனி நபர்களுக்கு எதிராக போராடுகிற அதே வேளையில் இவற்றிற்கு அடிப்படையாக இருக்கும் இச்சமூகக் கட்டமைப்பை என்ன செய்யப் போகிறோம?

பணம் எனும் பிணத்தின் மீது கட்டப்பட்டுள்ள இச்சமூகக் கோட்டையிலிருந்து பிணவாடைதான் வரும். இத்துப்போன பழங்கோட்டையை தகர்க்காமல் பிண வாடை ஒரு போதும் அகலாது.
..................முற்றும்

1 comment: