Tuesday, July 5, 2011

வாழ்க்கை என்பது போராட்டமா? பூந்தோட்டமா?

நம்மை சுருக்கெனக் கடிக்கும் எறும்பை நசுக்கிக் கொல்கிறோம்; மிதிக்க வரும் யானையை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுகிறோம். நமது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அனைத்து விலங்குகளையும் நமது பலத்தால் கொன்றுவிடுகிறோம். இல்லை என்றால் விலங்குகளால் நாம் கொல்லப் படுவோம்.பலமானவைகள் மட்டுமே உயிர் வாழ முடியும். பலவீனமானவைகள் அனைத்தும் அழிந்து போகும். இது இயற்கை விதி.

விலங்குகளைப் பொருத்தவரை உயிர் வாழ்வதற்காகப் போராடுவதைத் தவிர வேறு நோக்கங்கள் கிடையாது. உயிர் வாழவும், இனப்பெருக்கம் செய்யவும் விலங்குகளுக்கு உணவு தேவை. தன்னைவிட பலமான எதிரி விலங்குகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளவும், இயற்கை சீற்றங்களை எதிர் கொள்ளவும் பாதுகாப்பான வசிப்பிடம் தேவை. சில விலங்குகள் தாங்களாகவே தங்களுக்கான வசிப்பிடங்களை உருவாக்கிக் கொள்கின்றன. ஒரு சில விலங்குகள் பாதுகாப்பான இடங்களைத் தேர்வு செய்து கொள்கின்றன. ஆக விலங்குகள் அனைத்தும் உயிர் வாழ்வதற்காக அன்றாடம் போராடித்தான் ஆக வேண்டும். அவைகளுக்கு வாழ்க்கையே ஒரு போராட்டம்தான். மனிதனுக்கும்தான். அதனால்தான் போராடுதல் (struggle) விலங்குகளின் தலையாயப் பொதுப் பண்பு என பிரபல ஹோமியோபதி மருத்துவர் இராஜன் சங்கரன் வரையறுக்கிறார்.  

ஆனால் மனிதன் என்கிற விலங்கு மட்டும் உயிர் வாழ்வதற்காக மட்டும் போராடுவதில்லை. அதற்கும் மேலே ஏறாளமான ஆசாபாசங்களை வளர்த்துக் கொண்டு அவைகளுக்குாகப் போராடுவது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. விலங்குகளுக்கு, உணவும் பாதுகாப்பான இடமும் இருந்துவிட்டால் வாழ்க்கை வளமானதுதான். ஆனால் மனிதனுக்கோ தேவைகள் ஏறாளம். எவ்வளவு போராடினாலும் பலருக்கு வாழ்க்கை வளமாவதில்லை. எனவே மேலும் மேலும் போராட்டத்தை தீவிரப் படுத்துகிறான். இன்றைய உலகமயச் சூழலில் தேவைகள் அதிகரித்துள்ள அதே வேளையில் அவைகளைப் பெருவதற்கான போராட்டங்களும் மூர்க்கத் தனமாக மாறி வருகின்றன. அதனால்தான் கொலை, கொள்ளை, வரதட்சணை போன்ற கொடுமைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

முயற்சி செய்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்கிறார்கள். இந்த முயற்சியேகூட போராட்டத்தின் ஒரு வடிவம்தானே. என்னதான் போராடினாலும் வழுக்கி விழுந்து எழ முடியாதவர்களே ஏராளம். எழ முயல வேண்டுமானால் மீண்டும் போராடித்தான் ஆகவேண்டும்.

போராடிப் போராடி அலுத்துப் போன மக்களுக்கு வாழ்க்கை என்றுமே பூந்தோட்டமாக இருந்ததில்லை. மக்களின் போராட்டமான வாழ்க்கை பூந்தோட்டமாக மாற விவேகானந்தரைப் போல ஆன்மீகத்தை நாடுவதுதான் ஒரே வழி என சமீபத்தில் ஒரு பட்டி மண்டபத்தில் நடுவராக வீற்றிருந்த சுகி.சிவம் தீர்ப்பு எழுதி முடித்து வைத்தார். பட்டி மண்டபத் தீர்ப்புகள் மேல் முறையீடுகள் ஏதும் இல்லாத இறுதித் தீர்ப்பாயிற்றே! யார் கேள்வி கேட்க முடியும்?  

அரங்கில் குழுமியிருந்த சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவருமே ஆன்மீகத்தில் ஈடுபாடு உடையவர்கள்தான். இந்தியா ஒன்றும் நாத்திக நாடல்லவே. ஆன்றாடம் இறைவனை உள்ளன்போடு வழிபட்டு தங்கள் துன்பம் நீங்காதா என முறையிடும் மக்கள் நிறைந்த ஆன்மீக நாடுதானே இந்தியா. ஏற்கனவே ஆன்மீகத்தில் ஈடுபட்டும் இவர்களின் வாழ்க்கை ஒன்றும் பூந்தோட்டமாக மாறவில்லையே!

சுகி.சிவம் சொல்கின்ற ஆன்மீகம் விவேகானந்தரின் ஆன்மீகம் போல என்றால் அனைவரும் காவித் துண்டை போர்த்திக் கொண்டு ஆன்மீகம் வளர்க்க கிளம்பிவிட்டால் பிறகு யார் பயிர் வளர்ப்பார்கள்? யார் சோறு போடுவார்கள்? யார் ரோடு போடுவார்கள்? ஒரு வேளை காற்றை சுவாசித்து உயிர் வாழும் கலையைக் கற்றுக் கொடுப்பார்களோ! இப்பொழுதே அதைக் கற்றுக் கொடுத்தால் பட்டினியால் மாண்டு போகும் ஒரிசாவின் ஏழைகளைக் காப்பாற்றலாமே!

வாழ்க்கையை பூந்தோட்டமாக மாற்றியமைத்துக் கொண்டவர் விவேகானந்தராம்.  உண்மையான ஆன்மீகவாதியாக, அதாவது சாமியாராக மாறிவிட்டால் வாழ்க்கை எப்பொழுதுமே பூந்தோட்டமாம்.

பொதுவாக சாமியார்கள் திருமணம் செய்து கொள்வதில்லை. ஆகவே குடும்பம் இல்லை. கணவன் மனைவிக்கு இடையிலான போராட்டம் இல்லை. பிள்ளை குட்டிகள் இல்லை என்பதால் மழலையர் பள்ளிக்குப் படையெடுக்கும் வேலை இல்லை. உயர் கல்வி பயில சேர்த்த சொத்தை எல்லாம் இழந்து நடுத் தெருவில் நிற்க வேண்டியதில்லை. பெண் பிள்ளைகள் இல்லை என்பதால் மூட்டை மூட்டையாக வரதட்சணையும் சீர் செனத்தையும் சேகரிக்க வேண்டியதில்லை.

விண்ணை முட்டும் விலைவாசியை சமாளிக்க வேண்டியதில்லை. ஏன் என்றால் செல்லும் இடமெல்லாம் வாய் ருசிக்க ஓசியிலேயே வயிறு முட்டத் தின்றுவிடுவதால் உணவுக்கான போராட்டம் இல்லை. நியாய விலைக் கடைக்கும் மளிகை, காய்கறி கடைகளுக்கும் மஞ்சள் பையை எடுத்துச் சென்று கால் கடுக்க நிற்க வேண்டிய அவசியமில்லை. பால் விலை ஏறினால் இவர்கள் ஏன் போராடப் போகிறார்கள்? பாலைத்தான் சுண்டக் காயச்சி பாதாம் கலந்து கொடுத்து விடுகிறார்களே! பெட்ரோல், டீசல், எரிவாயு விலை ஏறினால் இவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? 

பேருந்து நிலையத்துக்கும், இரயிலடிக்கும் ஓட வேண்டிய அவசியமில்லை. போக்கு வரத்து நெரிசலில் சிக்காமல் 'சொய்ங்' என விண்ணில் பறந்து நகரங்களைக் கடப்பவர்கள், சாலைப் புழுதியில் சிக்காமல் குளு குளு மகிழுந்தில் உடல் கலைப்பின்றி பயணிப்பவர்கள்.

வரவு செலவு திட்டம் போட்டா இவர்கள் வாழ்க்கை நடத்துகிறார்கள்? சம்பளக்காரன் மாதாந்திர வரவு செலவு கணக்குப் போட வேண்டும். தவறினால் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டும். சம்பளக்காரன் நடுத் தெருவுக்கு வந்தால் சமூகம் ஏளனமாய்ப் பார்க்கும். ஆனால் சாமியார்கள் நடுத் தெருவுக்கு வந்தால் பண மழை கொட்டும். 

சாலை வசதி, மின்சாரம், குடிநீர், சுகாதாரம், மருத்துவ வசதி போன்ற அடிப்படைத் தேவைவகள் கூட கிடைக்காததால் மக்கள் அன்றாடம் போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராட்டம் இல்லாமல் எதுவுமே கிடைப்பதில்லை. ஆன்மீகத்தை நாடிவிட்டால் இவை எல்லாம் கிடைத்து விடுமா? வாழ்க்கை பூந்தோட்டமாக மாறிவிடுமா? அவ்வளவு ஏன்? குறைந்த பட்சம் கொசுத் தொல்லையிலிருந்தாவது மக்களை விடுவிக்க முடியுமா? இதைப் பற்றி கேள்வி எழுப்பினால் இதற்கும் ஒரு முல்லா கதையை கை வசம் வைத்திருப்பார்கள். கதை சொன்னால்தான் நம்மாளு கவுந்து விடுகிறானே!

சொற்பொழிகளும் ஆசிர்வாதங்களும்தான் இவர்களின் மூலதனம். இம்மூலதனம் 'ரெக்கரிங் டெபாசிட்' போல குட்டி போடுவதால் இவர்களின்  வாழ்க்கை எப்பொழுதும் பூந்தோட்டம்தான்.'ஷேர் மார்க்கெட்டில்' பணம் போட்டவன்கூட திவாலாகிவிடுகிறான். ஆனால் என்றுமே திவாலாகாத தொழில் ஆன்மீகம் ஒன்றுதான். ஆன்மீகத்தை நம்புகிறவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆன்மீகத்தை போதிப்பவர்கள் சொகுசாய் வாழ்கிறார்கள். இல்லாத ஒன்றை நோக்கி மக்களை இழுத்துச் செல்வதுதான் ஆன்மீகம். பட்டிமண்டபங்கள் நடத்தி, சொற்பொழிவுகளைப் பொழிந்து ஆன்மீகத்திற்கு புத்துயிரூட்ட சுகி.சிவம் போன்ற நவீன ஆன்மீகவாதிகள் சுற்றுலா செல்கிறார்கள்.

ஆன்மீகத்தை வளர்க்கவே விவேகானந்தர் அன்று ஊர் ஊராய் பிரசங்கம் செய்தார். அதே வேலையை இன்று சுகி.சிவம் போன்ற ஆன்மீக விற்பனையாளர்கள் கையில் எடுத்துக் கொண்டார்கள். இன்றைய ஆன்மீகம் மிகவும் 'மாடர்னானது'; ரொம்பவும் 'காஸ்ட்லியானது'. ஆயிரங்களை காலில் வைத்தால்தான் சாமியார்கள் கையை உயர்த்துவார்கள்;சுகி.சிவம் போன்றவர்கள் 'மைக்கை' பிடிப்பார்கள்.  ஆன்மீகமே சும்மா கிடைக்காத போது வாழ்க்கை மட்டும் சும்மா கிடைத்துவிடுமா?

சாமான்யனுக்கு வாழ்க்கை என்பது எப்பொழுதும் போராட்டம்தான். 

Saturday, July 2, 2011

பெண் மனம் பெரிதும் விரும்புவது தன் அழகையா? அறிவையா?

விஜய் தொலைக்காட்சியில் நடுத்தர மற்றும் மேட்டுக்குடி மக்களை மையமாக வைத்து கோபிநாத்தின் “நீயா நானா?” நிகழ்ச்சி வாரம் தோறும் ஒலிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் இவர்கள்தான் இந்தியாவோ எனக் கேட்கத் தோன்றும் அளவுக்கு நடுத்தர மற்றும் மேட்டுக்குடி மக்களின் அன்றாட ஆசாபாசங்கள் அனைத்தையும் அக்கு வேறு ஆணிவேராக அலசி எடுத்து வருகிறார் கோபிநாத். மயிர் வரை நீண்டுவிட்ட இந்த மயிர்பிளக்கும் வாதம் இன்னும் எத்தனை நாளுக்குத்தான் எனத் தெரியவில்லை.

நிகழ்சியில் பங்கேற்போருக்கு பெரும்பாலும் தமிழில் பேச வராது. தங்களின் 'வளமான வாழ்க்கைக்கு' உதவாது என்பதால் தமிழை இரண்டாம் மொழியாகக்கூட படிக்க விரும்பாத இவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்? தாய்த் தமிழையே வேண்டாம் என்பவர்கள் பெற்ற தாயை மட்டும் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? இவர்களுக்காகத்தான் முதியோர் இல்லங்கள் திறந்து கிடக்கின்றனவே! இவர்களின் பிரச்சனைகள்தான் கோபிநாத்துக்கு மிகவும் பிடிக்கும் போலும்!

உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி, வசிக்க இடமின்றி வாடும் பெரும்பான்மையான இந்திய உழைப்பாளிகளின் பிரச்சனையை அலசினால் அதை யார் பார்ப்பார்கள்? பசிக்காக அல்ல-ருசிக்காக உண்பவர்கள்;  தேவைக்காக அல்ல-பகட்டைக் காட்ட மானம் போனாலும் கவலையில்லை என 'பேஷனுக்காக' ஆடை அணிபவர்கள்;  வசிப்பதற்காக அல்ல-கனவுலகில் மிதப்பதற்காக வாழ்விடங்களைத் தேடுபவர்கள்; இவர்கள்தான் ”நீயா நானா!” நிகழ்ச்சியின் மாந்தர்கள்.

இவர்களை ஒன்று கூட்டி கால் நகம் முதல் உச்சஞ் தலை மயிர் வரை அலசி ஆராய்வதில் இவருக்கு நிகர் இவரே. இவர் இந்த வாரம் (26.06.2011) எடுத்துக்கொண்ட தலைப்பு "பெண் மனம் பெரிதும் விரும்புவது தன் அழகையா? அறிவையா?"

இங்கே பெண் மனம் என்பது ஏழை எளிய பெண்களுக்கானதல்ல. இவர்களுக்கு ஏது அழகும் அறிவும் என ஒதுக்கிவிட்டாரோ! அதனால்தான் மருந்துக்குக்கூட ஏழை எளிய பெண்கள் யாரையும் இந்நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை போலும்!

அறிவின் கர்வத்தில் உள்ளவர்கள் ஒரு அணியாகவும், அழகின் கர்வத்தில் இருப்பவர்கள் மற்றொரு அணியாகவும் அறிவையும் அழகையும் அலசி எடுத்தார்கள். அழகு முக்கியமல்ல என வாதாடியவர்கள் அறிவுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைவிட அழகுக்கே முக்கியத்துவம் கொடுத்து அலங்காரத்தோடு வந்திருந்தார்கள்.

இரு அணிகளைச் சேர்ந்தவர்கள் அனைவரும் அழகுசாதனப் பொருட்கள் அடங்கிய 'லேடீஸ் பேக்' இல்லாமல் வெளியே செல்லமாட்டார்கள். பிறகெதற்கு இந்த மயிர் பிளக்கும் வாதம்? நீயா நானாவின் 'ரேட்டிங்' ஏற வேண்டாமா? 


ஆண்களைக் கவரும் கவரிமான்

பொதுவாக அழகியல் குறித்த அடிப்படையான புரிதலுக்குப் பதிலாக, அழகு இரசிப்பதற்கானது, நுகர்வதற்கானது என்கிற கருத்தாக்கமே நிலவுகிறது. பெண்ணானவள் பிறரை குறிப்பாக ஆண்களைக் கவரும் கவரிமான் என்பதைத்தாண்டி இவர்களின் அழகியல் கண்ணோட்டம் செல்வதில்லை. வாடிக்கையாளர்களைக் கவர ஒரு விலைமாது செய்யும் அலங்காரத்திற்கும், ஒரு ஆண் தன்னைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்பதற்காக ஒரு பெண் தன்னை அழகுப்படுத்திக் கொள்ளும் அலங்காரத்திற்கும் சாரம்சத்தில் வேறுபாடு கிடையாது. அழகின் கர்வத்தில் இருந்த ஒரு சிலர் இதை பகிரங்கமாகவே பகிர்ந்து கொண்டார்கள். உணர்ந்தோ உணராமலோ பெண்கள் இத்தகைய மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பதே இன்றைய எதார்த்தம்.

பிறர் புகழ வேண்டும்,  பாராட்ட வேணடும் என்கிற ஏக்கமே இவர்களை இத்தகைய நிலைக்கு இட்டுச் செல்கிறது. இந்த ஏக்கம் (longing for opinion of others) மனதளவில் ஒரு நோயக்குறி என்பதை ஹோமியோபதி மருத்துவம் தெளிவுபடுத்துகிறது. உருவ அழகுக்கு முக்கியத்துவம் தரும் அனைவருக்குமே-ஆண்கள் உட்பட-இது பொருந்தும்.

சாமான்யப் பெண்கள் யாரும் அழகுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. இதைத்தான் “கிராமங்களில் யாரும் அழகைத் தூக்கி சுமப்பதில்லை.” என சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எழுத்தாளர் சந்திரா முன்வைத்தார்.

முழங்காலுக்கு மேல் புடவையைத் தூக்கிச் செருகி நாத்து நடும் பெண்கள்; வயல்களில் அவர்கள் நேர்த்தியாய் நட்டுள்ள நாத்துகள்; இங்கே அழகென இரசிப்பது அப்பெண்களின் உமைப்பால் உருவான நெல் வயல்களைத்தானே தவிர அவர்களின் முழங்கால்களை அல்ல. ஆனால் இதைக்கூட ஆபாசமாக்கி நாத்து நடும் பெண்களை அசிங்கப் படுத்துபவர்கள் திரைப்படக் கயவர்கள்.

ஒற்றை மயிருக்கு ஒப்பாரி வைக்கும் ஒய்யாரப் பெண்களே! கட்டு தூக்கியதால் ஒட்டுமொத்தக் கூந்தலும் ஒட்டிக் கொண்டு சிக்கெடுக்கும் விவசாயப் பெண்டிரை நீங்கள் கண்டதில்லையோ!

உழைக்கும் பெண்களைப் பொருத்தவரை உழைப்பே அவர்களுக்கு அழகு சேர்க்கிறது. உழைக்காதப் பெண்களுக்கோ அவர்களின் கூந்தல் மயிர் ஒன்று உதிர்ந்தாலே அழகும் சேர்ந்தே உதிர்கிறது.  

”அழகாய் இருக்க யாருக்குதான் ஆசை இல்லை?” என்கிற வாதமும் முன்வைக்கப்படுகிறது.  நமது ஆக்கங்களும், சேவையும் பயனுள்ளதாய் இருந்தால் நாம்தான் இவ்வுளகில் அழகானவர்கள். உழைப்பால் உருவாகும் அழகு உலகம் உள்ளவரை போற்றப்படும். உருவத்தால் எழுப்பப்படும் புற அழகு முப்பதுகளிலேயே முடிந்துவிடும்.

இயற்கையான நமது உள்மனது எதை அழகு எனப் பார்க்கிறது? நேர்த்தியாக கட்டப்பட்ட கட்டடங்கள், சீனாவில் உள்ள உலகின் மிக நீண்ட கடல் பாலம், தாஜ்மகால் உள்ளிட்ட ஏராளமான மனிதனின் படைப்புகளைக் கண்டு வியந்து அவற்றின் அழகை இரசிக்கிறோம். மனித உழைப்பே இத்தகைய அழகுக்கு காரணம் என்பதால்தான் நம்மை அறியாமலேயே “என்னமா அழகா கட்டியிருக்காம் பாரு!” என்கிறோம். நேர்த்தியான மனிதப் படைப்புகள் அனைத்தையும் பற்றி நாம் கொண்டுள்ள மதிப்பீடு இதுதான். இது இயல்பாய் எழுகிற மன உணர்வு. இங்கே நாம் அழகெனப் பார்ப்பது உழைப்பைத்தான்.

உருவத்தால் கவர்ச்சியாய்த் தோன்றாத பலர் அவர்களது சேவை மற்றும் சாதனைகளால் நமக்கு அழகானவர்களாய்த் தோன்றுகிறார்கள். சேவைக்கும் சாதனைகளுக்கும் அடிப்படையாய் இருப்பது உழைப்பு மட்டும்தான். இப்படி இயல்பாய் உழைப்பையே அழகெனப் பார்க்கும் நம் மனம் தோற்றப் பொலிவில் மயங்கலாமா?

கோபிநாத்துகளும் இதைப் புரிந்து கொண்டால் சரி!

தொடர்புடைய பதிவுகள்:
எட்ட முடியாத உச்சத்தில் மல்லிகைப்பூ!