Monday, December 31, 2012

நவீன ரவுடிகள்!

ஒடிசா மாநில அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் மின் உற்பத்தி செய்வதற்கான மின்கலங்களை நிர்மானிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எல்லா வேலைகளையும் அந்நிறுவன ஊழியர்களைக் கொண்டே செய்துவிட முடியாது என்பதால் சில வேலைகளை அயல் பணிகள் என்ற பெயரில் (out sourcing) ஒப்பந்ததாரர்கள் மூலம் செய்து முடிப்பார்கள். ஒப்பந்ததாரர்களோ தொழில் அனுபவமுள்ள ஆட்களை வைத்து வேலைகளை முடிப்பார்கள். அவ்வாறு வேலை நடபெறும் போது திடீரென ஒரு கும்பல் வருகிறது. “பந்த் கரோ” என கூச்சலிடுகிறது. வேலையாட்கள் திகைத்து நிற்கிறார்கள். “எங்கள் ஆட்கள் 15 பேருக்கு வேலை கொடு. இல்லையேல் வேலை செய்ய விடமாட்டோம்” என மிரட்டுகிறது. உள்ளூர் ஆட்களை வைத்துதான் வேலை செய்ய வேண்டும் என்கிறது அக்கும்பல். ஏற்கனவே போதுமான ஆட்கள் இருக்கும் போது வேலை தெரியாத புதிய ஆட்களை வைத்து என்ன செய்ய முடியும்? இறுதியில் 15000 ரூபாயை பிடுங்கிக்கொண்டு அக்கும்பல் சென்றுவிடுகிறது. பிறகு யார் என விசாரித்தால் அவர்கள் ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கவாதிகளாம். அதேபோல மறு நாள் ஒரு கும்பல் வருகிறது. அவர்களும் “பந்த் கரோ” என்கிறார்கள். இறுதியில் பணம் கைமாறுகிறது. இவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் பி.எம்.எஸ். தொழிற்சங்கவாதிகளாம். தொழிற்சங்கத்தின் பெயரால் இப்படி தொழிற்சங்கப் போர்வையில் பணம் பறிப்பது வடக்கே.

இங்கே எப்படி?

ஒரு குறிப்பிட்ட சாதிக்கட்சியின்  காஞ்சிபுரம் மாவட்ட துணைச் செயலாளர் ஒருவர் சமீபத்தில்  வெட்டிக் கொலை செய்யப்பட்டதை பெரும்பாலும் அறிந்திருப்பீர்கள். இவரை ஆதிக்கச்சாதி வெறியினர் கொலை செய்துவிட்டார்கள் என முதலில் வீர வசனம் பேசியவர்கள் பிறகு இது கட்டப்பஞ்சாயத்து மோதலில் தனது சொந்தக்கட்சியினராலேயே செய்யப்பட்ட கொலை என தெரிய வந்ததும் அமுங்கிப்போனார்கள்.

ஒரு வன்னியரிடமிருந்து ஒரு தாழ்த்தப்பட்டவர் வாங்கிய கடனும் வட்டியுமாக சேர்த்து 1 கோடியே 39 லட்சத்ததை எட்டுகிறது. கடனைத் திருப்பிக் கேட்டபோது வாங்கியவர் தொகையைத் தராமல் இழுத்தடிக்கிறார். பெரும்பாலும் கொடுக்கல் வாங்களில் நடக்கின்ற ஒன்றாக இருந்தாலும் இது பெருந்தொகையாயிற்றே! கொடுத்தவர் சும்மா இருப்பாரா? நெருக்கடி கொடுக்கிறார். கடன் வாங்கியவர் மேற்கண்ட சாதிக்கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளரை அனுகி தன்னை ‘டார்ச்சர்’ செய்வதாக முறையிடுகிறார். “கடனை திருப்பித் தர முடியாது என சொல்” என உசுப்பிவிடுகிறார். பணத்தை எப்படியாவது திரும்பப் பெற்றுவிட வேண்டும் என்பதற்காக கடன் கொடுத்தவர் காஞ்சிபுரத்தில் உள்ள பிரபலமான வன்னிய  சாதி தாதாவை அனுகுகிறார். இப்பிரச்சனை முற்றுகிறது.  பணத்தைப் பெறுவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் குறிப்பிட்ட சாதிக்கட்சியின்  மாவட்டத் துணைச் செயலாளரை போட்டுத்தள்ள திட்டம் வகுக்கப்படுகிறது.

அண்ணன் எப்போ சாவான். திண்ணை எப்போ காலியாகும்”  எனக் காத்துக்கொண்டிருக்கிற அந்தக்கட்சியின் அடுத்த மட்டத் தலைவர்களைக்கொண்டே போட்டுத்தள்ள திட்டம் தீட்டப்பட்டு அவ்வாறே கொலையும் நிறைவேற்றப்படுகிறது. இதில் கடன் கொடுத்தவரும் கடன் வாங்கியவரும் இருவேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தவிர இதில் சாதியப் பிரச்சனை ஏதுமில்லை. இந்தக் கொலையால் காஞ்சிபுரமே கொலை பீதியில் உரைந்து போகிறது.

இக்கொலையில் ஈடுபட்ட கூலிப்படையினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் கைமாறியிருக்கிறதாம். கோடிகளை திரும்பப் பெறவேண்டுமானால் லட்சங்கள் பெரிதல்லவே!

சொந்தக்கட்சித்தலைவனையே இங்கே கொலை செய்கிற அளவுக்கு அந்தக் கட்சியின். அணிகள் துணிந்துவிட்டார்கள் என்றால் அதற்கான அடிப்படை என்ன  என்பதே இங்கு முக்கியம்.
தனியார் மயம் - தாராள மயம் – உலக மயக்கொள்கையின் விளைவாக சுங்குவார்சத்திரம் – திருப்பெரும்புதூர் - படப்பை - செய்யாறு சிப்காட் என காஞ்சிபுரத்தைச் சுற்றிதான் பல்வேறு தொழிற்சாலைகள் அமைந்திருக்கின்றன. இங்குள்ள ஆலைகளில் உள்ள ‘ஸ்கிராப் மெட்டீரியல்’களின் ஏலத்தை கட்டுப்படுத்தக்கூடியவர்கள் கொலையுண்டவரின் கட்சியினர்தானாம். ‘ஸ்கிராப்பை’  யார் ஏலம் எடுத்தாலும் அந்ததந்த தொழிற்சாலைகளிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை மாமூல் என்கிற வகையில் மாவட்டத் தலைமைக்குத் தானாகவே வந்து சேருமாம். இத்தொகை மட்டுமே ஒரு மாதத்திற்கு சுமார் ஐம்பதாயிரம் தேருமாம். உட்கார்ந்த இடத்திற்கே ஐம்பதாயிரம் வருகிறது என்றால் அந்தப்பதவியை யார்தான் அடைய விரும்பமாட்டார்கள்? இந்தச் சூழலில்தான் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார்கள் மாவட்டத் தலைமைக்கு வரமுயன்றவர்கள். கொலையுண்டவர் அந்தக் கட்சியின் முழு நேர ஊழியராம். அம்பேத்கரியத்தையும் - பெரியாரியத்தையும் - மார்க்சியத்தையும் படித்து குறிப்பெடுத்து அணிகளுக்கு அறைக்கூட்டம் நடத்தவா இவர் முழுநேர ஊழியராக வேலை செய்தார்?

இவர்களின் சட்டவிரோதச் செயல்கள் காவலர்களுக்குத் தெரியாதா? அவர்கள் இவற்றை எல்லாம் தடுக்கலாமே என சிலர் நினைக்கலாம். அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பதைத்தவிர இதில் சொல்வதற்கு என்ன இருக்கு?

ஒரு விபத்து நடந்துவிட்டால் போதும். அன்று இவர்களுக்கு வேட்டைதான். சமீபத்தில் தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் ஒரு விபத்து நடந்தது. முட்டை லாரி ஒன்று இருசக்கர வாகனத்தில் மோதியதில் அதில் பயணித்த பள்ளி மாணவர்களில் ஒருவனுக்கு லேசான காயம். மற்றவனுக்கு பலமான அடி இல்லை என்றாலும் மருத்துவ மனைக்குச் செல்ல வேண்டிய அளவுக்கான காயம். தேசிய நெடுஞ்சாலை என்பதால் கூட்டம் கூடுகிறது. இதைக் கேள்விப்பட்ட காஞ்சிபுரத்தில் கொலையுண்ட அந்த சாதிக்கட்சியின் அல்லக்கைகள் அங்கே வருகிறார்கள். “என்ன வேடிக்கை?” என மிரட்டி அங்கே கூடியிருந்த கூட்டத்தையும் -  “உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டியது தப்பு” என மாணவர்களையும் மிரட்டி விரட்டிவிட்டு லாரி ஓட்டுனரிடம் 15000 ரூபாயை பிடுங்கிக் கொண்டு லாரியை விடுவிக்கிறார்கள். காவலர்களிடம் முறையிடலாமே என இங்கேயும் கேள்வி எழுப்பலாம்! ஆனால் அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பதைத்தவிர இதில் சொல்வதற்கு என்ன இருக்கு?

மேற்கண்ட இரு நிகழ்வுகளும் சில வகை மாதிரிகள்தான். திருச்சி கல்லுக்குழி கந்தனைப்போல, தாராநல்லூர் சந்திரனைப்போல முன்பெல்லாம் கட்டப் பஞ்சாயத்துக்கென சிறப்பு பயிற்சி பெற்ற தனி நபர்கள் இருந்தார்கள். இன்றோ இவர்கள்  ஓட்டுச்சீட்டு – சாதியக் கட்சிகளின் தலைவர்களாக இருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள ஓட்டுச்சீட்டு  - சாதியக் கட்சிகள் அனைத்துமே இவ்வாறுதான் உள்ளன.

இன்றைய உலக மயம் உருவாக்கியுள்ள நவீன ரவுடிகள் இவர்கள். மிரட்டலும் - உருட்டலும் - கொலையுமே இவர்களின் அன்றாடத் தொழில். குடியும் - கூத்தியுமே இவர்களின் பொழுது போக்கு. முன்பு இவர்கள் ‘டாடா சுமோ’க்களில் திரிந்தார்கள். இன்று ‘ஸ்கார்பியோ’க்களிலும், ‘இனோவா’க்களிலும் கட்சிக்கொடிகளை கட்டிக்கொண்டு வலம் வருகிறார்கள். வெள்ளை வேட்டியும் மடிப்புக் கலையாத கதர் சட்டையுமே இவர்களின் சீருடைகள். ஊராட்சி - பேரூராட்சி - நகராட்சி – மாநகராட்சி - வருவாய் ஆய்வாளர் - துணைக் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் தொடங்கி ஏட்டு – எஸ்.ஐ – டி.எஸ்.பி – எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகளே இவர்களின்  மிக நெருங்கிய நண்பர்கள். இவர்களுக்கு எழுத்துக் கூட்டி படிக்கத் தெரியவில்லை என்றாலும் நண்பர்கள் வட்டம் பெரிதென்பதால் இவர்கள் ‘சட்டம்’ தெரிந்த “நாட்டு வக்கீல்கள்”. இவர்களின் நடை – உடை – பாவனை – தோரணை – பேச்சு – பந்தா மற்றும் வாகன வசதிகளைப்பார்த்து நாம் மூக்கின் மேல் விரல் வைத்து வாய் பிளந்து நிற்கின்றோம்.

நம் மூக்கின் மேல் உள்ள விரல் அல்லக்கைகளின் கண்களை குறிபார்த்தால் மட்டுமே பெருகி வரும் கொலை பீதிக்கு முடிவு கட்ட முடியும்.

இதுவே எனது புத்தாண்டுச் செய்தி!

Wednesday, December 26, 2012

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவே கிடையாதா?



ஊழலுக்கு எதிராக டெல்லியில் நடந்ததைப் போன்றதொரு போராட்டம் தற்போது மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பிறகு நடந்து வருகிறது. ஊழலை ஒழிக்க, கடுமையான லோக்பால் சட்டம் தேவை எனக் கோரியவர்களைப் போலவே பாலியில் வன்கொடுமை செய்வோரை மிகக்கடுமையக தண்டிக்கவேண்டும்; அதிலும் டெல்லி மாணவி மீது பாலியல் வன்கொடுமை செய்தவர்களை தூக்கிலிட வேண்டும் எனக்கோரி தற்போது போராடுபவர்களும் வலியுறுத்துகின்றனர். இந்தப் போராட்டத்தின் மூலம் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு ஒரு முடிவு ஏற்படும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு ‘இந்தியாடுடே’ ஆங்கில ஏட்டில் ஒரு கட்டுரை படித்தேன். மராட்டிய மாநிலத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான செய்தி அது. ஒரு காமுகன் அப்பாவி பெண் ஒருத்தியை பாலியல் வன்கொடுமை செய்து சின்னாபின்னப்படுத்தி விடுகிறான். வஞ்சிக்கப்பட்ட பெண்ணும் அவரது குடும்பத்தாரும் பலமுறை முறையிட்டும் காவல்துறையோ மற்றபிற வாக்கு வங்கி அரசியல் கட்சிகளோ உள்ளுர் பெரிய தலைகளோ இதை ஒரு பெரிய பிரச்சனையாக பார்க்கவில்லை.

பாதிக்கப்பட்டவர்கள் மக்கள் யுத்தக் குழுவைச்சார்ந்த (PWG) நக்சல்பாரி புரட்சியாளர்களிடம் (இன்றைய மாவோயிஸ்டுகள்) முறையிடுகின்றனர். நக்சல்பாரிகள் முன்னிலையில் ஊர்மக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்ட மக்கள் நீதிமன்றம் கூடுகிறது. பொது விசாரணைக்குப் பின் குற்றம் உண்மை என நிரூபிக்கப்படுகிறது. தண்டனை வழங்குவது குறித்து மக்கள் மத்தியில் அப்போதே கருத்து கேட்கப்படுகிறது. பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி இவன்தான் என்பதற்கு அடையாளமாக அவனது மூக்கை அறுக்க வேண்டும் என மக்கள் தீர்ப்புக்கூற, அதுவே முடிவாகி அவனது மூக்கு வெட்டப்படுகிறது. இச்சம்பவத்திற்குப் பிறகு அப்பகுதியில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை முற்றிலுமாக ஒழிக்கப்படுகிறது.

இந்திய தண்டனைச் சட்டம்

இந்திய தண்டனைச் சட்டம் (இ.த.ச) பிரிவு 375, 376, 376A, 376B, 376C, 376D ஆகிய பிரிவுகள் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் பற்றி சொல்கிறது. பிரிவு 376 ன்படி பாலியல் வன்கொடுமைக்கு (rape) அதிகபட்சமாக ஆயுள் தண்டனைதான் வழங்கமுடியும்.
 
மேற்கண்ட வழக்கில் நீதிமன்றம் சென்றிருந்தாலும்கூட அதிகபட்சம் ஆயுள் தண்டனைதான் வழங்கியிருக்க முடியும். ஆயுள் தண்டனை என்ன; தூக்கு தண்டனை நிச்சயம் என்றாலும்கூட அதற்கு யாரும் அஞ்சிவிடுவதில்லை. நமது கால்துறை மற்றும் நீதிமன்றங்களைப்பற்றி நம்மைவிட குற்றவாளிகளுக்கு மிக நன்றாகவேத் தெரியும். அது மட்டுமல்ல, தூக்கு தண்டனைக் குற்றங்களை நிரூபிப்பது மிகவும் கடினமானது என்பதால் குற்றவாளிகள் தண்டனை ஏதுமின்றி தப்பித்துவிடுவர் என்பதால் தூக்கு தண்டனை சரியான தீர்வு கிடையாது என்பதை பெண் வழக்கறிஞர்களே முன்வைக்கின்றனர்.

பாலியல் வன்கொடுமை செய்தவர்களை தூக்கிலிடுவதற்கு சட்டமே இல்லாத போதும், தூக்கிலிட வேண்டும் என்று குடியரசு மாளிகையை முற்றுகையிடுகின்றனர். குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்கிற அதேவேளையில் இனி குற்றங்கள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லைதான். உணாச்சிப் பெருக்கான இதுபோன்ற போராட்டங்கள், பாலியல் தொடர்பான குற்றங்களின் சமூகப்பின்னணியை பரிசீலிப்பதற்கும், குற்றங்களை நிரந்தரமாக ஒழித்துக்கட்டுவதற்கான தீர்வை நோக்கி இட்டுச்செல்வதில்லை.

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் பள்ளி மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையைப் போன்று நாடெங்கிலும் அன்றாடம் பாலியல் வன்கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் டெல்லியில் நடந்தது போன்ற ஒரு சில குற்றங்கள் மட்டுமே மக்கள் கவனத்தை ஈர்க்கின்றன.

மன்னர்கள் காலத்தில்

அடிமை உடைமைச் சமுதாயத்தில் தொடங்கிய பெண்கள் மீதான வன்கொடுமைகள், நிலவுடமைச் சமுதாயத்தில் கேள்வி கேட்பாரின்றி நடந்தேறின. பண்ணை நிலவுடமையாளர்கள் இதை ஒரு அன்றாட நிகழ்வாகவே செய்து வந்தனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கூலி ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களே. இன்றும்கூட வட இந்திய மாநிலங்களில் இதுதான் நிலைமை. அதே போல முதலாளிகளும், பணக்காரர்களும் இன்று பெண்கள் மீதான வன்கொடுமையை கமுக்கமாக அறங்கேற்றி வருகின்றனர். பணபலமும், அதிகார பலமும், சாதி பலமும்தான் இவர்களை எப்போதும் பாதுகாத்து வருகிறது.

மன்னர்கள் தங்கள் காமலீலைகளை கஜூராவ்க்களில் செதுக்கினார்கள்; எல்லோராவில் தீட்டினார்கள; காமசூத்திரங்களாக எழுதித் தள்ளினார்கள். இத்தகைய கழிவுகளைத்தான் இந்தியாவின் பாரம்பரியப் பெருமை என்று இன்றும் பேணிக்காத்து வருகிறார்கள் காமத்தின் பாதுகாவலர்கள்.

திரைப்படங்களில்

“மாங்கா - அட தேங்கா - கொஞ்சம் தொட்டுப் பார்க்கட்டுமா” என எம்.ஜி.ராமச்சந்திரன் பாடியதில் காமம் இல்லையா?  சுகன்யாக்களின் தொப்புள்களில் பம்பரம் விட்டு கலைப்பணியாற்றும் கேப்டன்களால் பாலியல் தூண்டல் ஏற்படாதா? காம வெறியை வளர்ப்பதற்காகவே ஜெயமாலினிகள், சில்க்ஸ்மிதாக்கள், அனுராதாக்கள், டிஸ்கோ சாந்திகள், சிம்ரன்கள், நமீதாக்கள் என தொடர்ச்சியாக காமக்கிழத்திகளை திரைப்பட முதலாளிகள். அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கின்றனர்.

ஏடுகளில்

ஆடுகளைத் தோலுரித்து தொங்கவிடுவதைப்போல தினமலர், குமுதம், ஆனந்த விகடன், விகடன் டைம்பாஸ்,  நக்கீரன், சினிமா எக்ஸ்பிரஸ் ஈரான ஏடுகளில் அரைகுறை ஆடைகளுடன் காமக்கிழத்திகளின் ஸ்டில்களைப் போட்டு காமத்துக்கு கடை விரிக்கவில்லையா பத்திரிக்கை முதலாளிகள்?

தொலைக்காட்சிகளில்

மானாட - மயிலாட என்ற பெயரில் காமத்தைத் தூண்டும் கலா மாஸ்டர் அக்காள்களுக்கு பாலியல் குற்றங்களைத் தூண்டுவதில் பங்கு இல்லை என்று மறுக்க முடியுமா? குத்தாட்ட பாடல்களை நேயர் விருப்பம் என்ற பெயரில் திரும்பத் திரும்ப போட்டுக் காட்டி இஞைர்களிடையே காம போதையை ஏற்றவில்லையா தொலைக்காட்சி ஊடக முதலாளிகள்?

நாவல்களில்

சான்டில்யன்கள், சுஜாதாக்கள், ராஜேந்திரகுமார் - ராஜேஸ்குமார்கள் முதல் ‘சரோஜாதேவி’ புத்தகங்கள் வரை பெண்களின் அவையங்களை வர்ணித்து எழுதித் தள்ளியதில் காமம் வளர்க்கப்படவில்லையா?

நட்சத்திர விடுதிகளில்

‘டிஸ்கொத்தே’ என்கிற பெயரில் நட்சத்திர விடுதிகளில் நடத்தப்படும் இரவு நேர களியாட்டங்களால் காமம் தூண்டப்படாதா? உள்ளுர் மாரியம்மன் கோவில் திருவிழாக்களில்கூட காமக்கிழத்திகளை ஆடவிட்டுத்தானே பக்தியை வளர்க்கிறார்கள் நம்மூர் ‘நாட்டாமைகள்’.

இணையதளங்களில்

கூகுளைத்தட்டினால் கொட்டப்படும் உடலுறவுக்காட்சிகள் - படங்கள் மூலம்  சைவ சித்தாந்தத்தையா போதிக்கின்றனர் இணைய தள முதலாளிகள்? இவைகளைத் தடைசெய்ய வக்கில்லாமல் சைபர் குற்றங்களில் ஈடுபட்டால் இனி குண்டர் சட்டம் பாயும் என மிரட்டுகிறது அரசு. ஆளும் கூட்டத்தின் தில்லுமுள்ளுகளை அம்பலப்படுத்தி எழுதுவதுதான் இவர்கள் மொழியில் சைபர் குற்றங்கள் போலும்!

விளைவு

வேலை ஏதுமின்றி தண்டச்சோறு திங்கும் காம வெறிபிடித்த திமிங்கலங்களும், அரசே ஊற்றிக்கொடுக்கும் சாராயத்தை ஏற்றிக்கொண்ட வெறியர்களும் தனிமையில் உள்ள பெண்களை குறிவைத்து குதறுகிறார்கள்.  இதில் பெற்ற மகள் என்றும் பாராமல் சீரழிக்கும் அவலங்களும் நடந்து வருகின்றன. பணத்திமிர் கூடிவிட்டால் காமத்தின் வன்மம் மேலும் உக்கிரமாகிறது. கீழ்சாதிப் பெண்தானே என்கிற சாதிய வன்மமும் பாலியல் குற்றங்களில் முக்கியப்பங்காற்றுகிறது.

ஆளும் வர்க்கத்தின் பங்கு

இப்படி மன்னர் காலம் தொட்டு இன்றைய இணையதள காலம் வரை பெண்களை போகப்பொருளாக சித்தரித்து, ஆண்களிடம் காம வெறியை வளர்த்தவர்கள் – வளர்த்து வருபவர்கள் பணக்காரர்களும் முதலாளிகளுமே. இவற்றை எல்லாம் அரசும், காவல்துறையும் வேடிக்கை பார்ப்பது மட்டுமல்ல இத்தகைய இழி செயல் புரிவோருக்கு கலைப்பணிக்கான விருதுகளையல்லவா வழங்கி கௌரவிக்கிறது!

எப்படித்தான் தடுப்பது?

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை தூக்கிலட வேண்டும் என ஒரு பக்கம் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் போதுதான் தூத்துக்குடியில் பள்ளிச்சிறுமியைக் குதறினார்கள். பாலியல் குற்றங்களுக்கு எதிராக தீவிரமான போராட்டங்களை நடத்துவது, கராத்தே உள்ளிட்ட தற்காப்புக் கலைகளை பெண்கள் கற்றுக்கொள்வது, தற்காப்பு ஆயுதங்களை எப்போதும் கையில் வைத்திருப்பது, தூக்கு தண்டனை உள்ளிட்ட கடுமையான சட்டங்களை அமுல்படுத்துவது, இறுதியில் ஆண்கள் பெண்களை ஒரு மனுசியாக மதிக்கக்கற்றுக்கொள்வது என பல்வேறு ஆலோசனைகளை முன்வைக்கப்படுகின்றன. முற்றும் துறந்த முனிகளே முந்தானைகளைத் தேடும் போது பக்திகூட இதில் சக்தியற்றுப்போகிறதே!

டெல்லியில் நடைபெறுவது போன்ற தன்னெழுச்சியான போராட்டங்கள் மூலமாகவோ அல்லது ‘பெண்ணியவாதிகள்’ முன் வைக்கும் தீர்வுகள் மூலமாகவோ புரையோடியிருக்கும் பாலியல் வன்மத்தையும், பாலியல் குற்றங்களையும் முற்றிலுமாக ஒழித்துவிட முடியாது.

தற்போதைய உலகமயக் கொள்கை “எதைச் செய்தேனும் பணத்தை ஈட்டு! எல்லாவற்றையும் அனுபவி!” என மக்களிடையே நுகர்வு வெறியை வளர்த்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாடகங்கள், கதைகள், திரைப்படங்கள், நெடுந்தொடர்கள் போன்ற ஊடகங்கள் மூலமாக பெண்களையும் ஒரு நுகர்வுப் பண்டமாக - அனுபவிப்பதற்கான ஒரு பொருளாக பார்க்கிற எண்ணத்தை வளர்த்துவருகிறார்கள்.  காசுக்காக எதையும் செய்யத் துணிந்துவிட்ட திரைப்பட – பத்திரிக்கை - தொலைக்காட்சி – இணையதள - முதலாளிகளையும் இத்தகைய முதலாளிகளை பாதுகாக்கும் அரசுகளையும் ஒழித்துக்கட்டாமல் பாலியல் குற்றங்களுக்கு ஒரு போதும் முடிவுகட்டமுடியாது.

பாலியல் குற்றங்களுக்கு எதிரான போராட்டங்களை பெண்கள் மட்டுமே நடத்தி வெற்றி பெற்றுவிடவும் முடியாது. முதலில் பெண்கள் ஒவ்வொருவரும் புரட்சிப் போராளிகளாக மாறவேண்டும். அமைப்பாய் அணிதிரள வேண்டும். அப்பாவி பெண்களிடம்தான் காமாதி காம சூரர்களின் ‘வீரம்’ எடுபடும். அஜிதாக்களைக் கண்டால் அஞ்சி நடுங்குவார்கள். விலைவாசி உயர்வு, வேலையின்மை என பெருகிவரும் மக்கள் பிரச்சனைகளுக்குக் காரணமான தனியார் மயம் -  தாராள மயம் - உலக மயத்தை எதிர்த்த போராட்டங்களோடு பாலியல் வெறியைத் தூண்டுகிற சமூக வெறியர்களுக்கு எதிராகவும் போராட்டங்களைக் கூர்மைப்படுத்தும் போது பாலியில் வன்மங்களும் வெறியாட்டங்களும் இச்சமூகத்திலிருந்து துடைத்தெறியப்படும்.

இதற்கு இ.த.ச க்களும் ‘நிதி’மன்றங்களும் தேவையில்லை. மக்கள் நீதிமன்றங்களே இன்றைய தேவை.

Monday, December 17, 2012

இதுவரை ஊரான்... நூறைக்கடந்து....

அன்பார்ந்த வலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம்.

மின் தட்டுப்பாடு, உடல்நலமின்மை போன்ற காரணங்களால் அதிகமாக எழுத முடியவில்லை என்றாலும் தொடர்ந்து எழுத முயற்சித்து அவ்வப் பொழுது ஒரு சில பதிவுகளை வெளியிட்டு வருகிறேன். அதிகமாக எழுத முடியவில்லையே என்கிற வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு.

பழைய பதிவுகளை சுலபமாகத் தேடிப்பிடித்து படிக்கும் வகையில் இவ்வலைப்பூவை நவீன முறையில் மாற்றியமைக்க முடியவில்லையே என்கிற மற்றொரு வருத்தமும் எனக்கு உண்டு.

எனினும் வாசகர்களின் மறு வாசிப்பிற்காக பழைய பதிவுகள் அனைத்தையும்  இங்கே தொகுத்துள்ளேன்.

நன்றியுடன்
ஊரான்

---------------------------

இதுவரை ஊரான்.......


Saturday, December 8, 2012

சாதிப் பெருமை பேசுவதே வன்கொடுமைதான்!

தருமபுரி நாயக்கன் கொட்டாய், கடலூர் பச்சாரப்பாளையத்தைத் தொடர்ந்து தற்போது தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், டி.கல்லுப்பட்டி என தொடர்கின்றன தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைத் தீண்டாமைத் தாக்குதல்கள். டி.கல்லுப்பட்டி கைலாசநாதர் மலைக்கோவிலில் பூசாரியாக இருந்த எஸ்.நாகமுத்து என்கிற 22 வயதான தாழ்த்தப்பட்ட இளைஞர் ஆதிக்கச்சாதியினரால் தொடர்ந்து இழிவுபடுத்தப்பட்டதால் தூக்குமாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதை தற்கொலை என்று சொல்லக்கூடாது. இது ஒரு படுகொலை!

இப்படி நாடெங்கிலும் தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைத்தாக்குதல்கள் தொடர்கின்றன. இத்தகைய தாக்குதல்களில் யாரைக் குற்றவாளியாக்குவது? தாக்குதல்களைத் தூண்டுவோர், தாக்குதல்களில் நேரடியாக ஈடுபடுவோர், தாக்குதல்களுக்குத் துணைபோவோர் மட்டுமே குற்றவாளிகளா? இவர்கள் மட்டுமல்ல!தீண்டாமையை கடைபிடிக்கின்ற அனைவருமே குற்றவாளிகள்தான். அப்படியானால் தீண்டாமையை கடைபிடிப்பவர்கள் யார்? தான் இந்தச்சாதிக்காரன் என பெருமை பேசுவதும், தனது பெயருக்குப் பின்னால் சாதிப்பெயரைப் போட்டுக்கொள்வதும் தீண்டாமையின் மற்றோரு வடிவமே. ஆம்! இவர்கள் அனைவருமே வன்கொடுமைக் குற்றவாளிகள்தான்!

சாதியம் குறித்து நான் ஏற்கனவே எழுதிய பதிவுகளை உங்களோடு பகிர்கிறேன்.



சாதி வெறி தலைவிரித்தாடுவது பாமரர்களிடமா? படித்தவர்களிடமா?



ஊரான்


Saturday, December 1, 2012

தருமபுரி: ராமதாஸ் சொன்னதும் நாம் சொல்ல நினைப்பதும்!

பெற்றோர் சம்மதமின்றி திருமணம் கூடாது! - ராமதாஸ்
(தினமணி-30.11.2012)
தருமபுரி அருகே உள்ள நாயக்கன்கொட்டாய் வன்முறைச் சம்பவம் தொடர்பாக தருமபுரியில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாமக ராமதாஸ் பேசியதும் நாம் சொல்ல நினைப்பதும்:
ராமதாஸ் சொன்னது
“தமிழகத்தில் ஜாதிய மோதல்களைத் தடுக்கவும், வன்முறைச் சம்பவங்கள் நிகழாமல் பாதுகாக்கவும் ஆண், பெண் இருபாலருக்கும் 21 வயது வரை பெற்றோர் சம்மதமின்றி திருமணம் நடத்தக் கூடாது”
நாம் சொல்ல நினைப்பது
அப்படினால் ஆண் பெண் இருபாலருக்கும் வயது 21 க்கு மேல் ஆனபிறகு பெற்றோர் சம்மதமின்றி திருமணம் செய்து கொண்டால் சாதி மோதல்களும் வன்முறை நிகழ்வுகளும் நிகழாதா?
ராமதாஸ் சொன்னது
“ "ஈவ்-டீசிங்' தடுப்புக்குத் தமிழக காவல் துறையில் தலித் அல்லாத போலீஸாரைக் கொண்டு தனிப் பிரிவு ஏற்படுத்த வேண்டும்”
நாம் சொல்ல நினைப்பது
பொது இடங்களில் தலித் பையன்களைத்தவிர பிறசாதிப் பையன்கள்  ‘ஈவ்-டீசிங்' செய்வதில்லையா? பள்ளிகள் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், கூட்ட நெரிசல் மிக்க ரயில்கள்-பேருந்துகளில் நடைபெறும் ‘ஈவ்-டீசிங்கை'த் தடுக்க உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டும் நெறிகளை  சமீபத்திய வழக்கு ஒன்றில் வகுத்துள்ளது அய்யாவுக்குத் தெரியுமா? எல்லா சாதிகளையும் சார்ந்த பையன்கள் செய்யும் இத்தகைய  ‘குலோபல்’ ‘ஈவ்-டீசிங்'கைத் தடுக்க எந்த சாதிப் போலீசைக் கொண்டு தனிப் பிரிவு ஏற்படுத்துவது?
ராமதாஸ் சொன்னது
“சமூக நல்லிணக்கத்துக்காகவும், ஒற்றுமைக்காகவும் 14 மாவட்டங்களில் மாநாடு நடத்தியது பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும்தான். வாழ்நாளில் இதுவரை தலித்களுக்கு எதிராகப் பேசியதும் இல்லை. எழுதியதும் இல்லை”
நாம் சொல்ல நினைப்பது
அப்படியாவது முதல்வர் நாற்காலி தேறுமா என பார்த்தீர்கள். ஆனா பப்பு வேகலயே!
ராமதாஸ் சொன்னது
“தங்களது இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்களைத் தவறான பாதைக்கு வழி நடத்திச் செல்லும் திருமாவளவன், பாமக மீதும் அதன் தலைவர்கள் மீது குறை கூறி பேசுகிறார். இத்தகைய செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது”
நாம் சொல்ல நினைப்பது
காதலித்தால் வெட்டு! குத்து! தீ வைப்பு! வன்முறை!.... ஓ!.... இதெல்லாம்தான் நீங்கள் வன்னிய இளைஞர்களை வழி நடத்திச் செல்லும் சரியான பாதையோ!
 ராமதாஸ் சொன்னது
“நாயக்கன்கொட்டாய் வன்முறைக்கு காதல் திருமணமோ, பெண்ணின் தந்தை தற்கொலையோ, பாமகவோ, வன்னியர் சங்கமோ காரணமில்லை.
அந்தக் கிராமத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த பெண்களை கேலி செய்யும் பழக்கமும், இளம்பெண்கள் மீதான தொடர் அத்துமீறல்களும்தான் இத்தகைய வன்முறைக்குக் காரணமாக அமைந்துவிட்டது”
நாம் சொல்ல நினைப்பது
மைனர் கல்யாணம்’ என்றீர்கள்! ‘செட்டப் கல்யாணம்’ என்றீர்கள்! இப்போது "ஈவ்-டீசிங்' என்கிறீர்கள்! இன்னும் எத்தனை காரணங்கள் கைவசம் வைத்திருக்கிறீர்களோ!
ராமதாஸ் சொன்னது
“காதல் திருமணம், கலப்புத் திருமணங்களால் தமிழ் தேசியம் மலரும் என்பது இப்போதைக்கு சாத்தியமில்லை”
நாம் சொல்ல நினைப்பது
இப்போதைக்கு சாத்தியமில்லை என்றால்  பிறகு  எப்போதாவது  கலப்புத் திருமணங்களால் தமிழ் தேசியம் மலரும் என்ற நினைப்பு அய்யாகிட்ட ஒட்டிக்கிட்டு இருக்கு போல!

ராமதாஸ் சொன்னது
“தலித் இளைஞர்கள் படித்து பட்டம் பெறவும், வேலை தேடவும், பொருளாதாரத்தில் முன்னேறவும் திருமாவளவன் அறிவுறுத்த வேண்டும்”
நாம் சொல்ல நினைப்பது
தலித் இளைஞர்கள் படித்து பட்டம் பெறவும், வேலை தேடவும், பொருளாதாரத்தில் முன்னேறவும் திருமாவளவன் அறிவுறுத்துவது ஒரு பக்கம் இருக்கட்டும். கிட்டத்தட்ட தலித் இளைஞர்களைப் போல பெரும்பான்மையாக உள்ள வன்னிய இளைஞர்கள் படித்து பட்டம் பெறவும், வேலை தேடவும், பொருளாதாரத்தில் முன்னேறவும் நீங்க எப்ப அறிவுறுத்தப் போறீங்க?
ராமதாஸ் சொன்னது
“தமிழகத்தில் தலித் அல்லாத சமூகத்தினர் மீது வன்கொடுமைச் சட்டத்தைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. இதனால்தான், இந்தச் சட்டத்துக்கு எதிராகவும், காதல் நாடக திருமணங்களுக்கு எதிராகவும் 81 சதம் பேர் ஓரணியில் திரண்டுள்ளனர்”
நாம் சொல்ல நினைப்பது
அரசு அலுவலகங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் இதற பிற்படுத்தப்பட்டோர் OBC என்ற போர்வையில் ஏற்கனவே ஓரணியில் திரண்டுள்ளதைச் சொல்கிறாரோ! 


ஊரான்.



Friday, November 30, 2012

வச்சேன் பாருடீ ஆப்பு..யார்கிட்ட..??

எனக்கு மின்னஞ்சலில் வந்த கார்ட்டூன்கள் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இவற்றில் சிலவற்றை நீங்கள் ஏற்கனவே முகநூலிலும் வலைப்பூக்களிலும் பார்த்திருக்கக்கூடும். கார்ட்டூன்கள் பொருள் பொதிந்தவையாக இருக்கும் அதே வேளையில் நகைச்சுவையாகவும் இருக்கின்றன.



"நான் இல்லன்னா நீங்க 3 பேரும் அம்பேல்தான் டீ!"

 அம்பேல் ஆனது 3 பேர் மட்டுமல்ல... நாங்களும்தான்!
பதிவர்களின் சிந்தனைக்குச் சிறை!



நண்பர்களுக்கு நன்றி!

ஊரான்.

Wednesday, November 28, 2012

பசி...பசி...பசி...


எனக்கு மின்னஞ்சலில் வந்த கார்ட்டூன்கள் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இவற்றில் சிலவற்றை நீங்கள் ஏற்கனவே முகநூலிலும் வலைப்பூக்களிலும் பார்த்திருக்கக்கூடும். கார்ட்டூன்கள் பொருள் பொதிந்தவையாக இருக்கும் அதே வேளையில் நகைச்சுவையாகவும் இருக்கின்றன.
















நண்பர்களுக்கு நன்றி!

ஊரான்.