Thursday, March 15, 2012

அண்டை வீட்டுக்காரரின் பொறாமை! ----- தொடர் ....1

இத்தொடரை 09.01.2012 அன்று தொடங்கினேன். சில தவிர்க்க முடியாத காரணங்களால் தொடர முடியவில்லை. இத்தொடரை முடித்து விட்டு அடுத்த தலைப்புக்குச் செல்ல முடிவெடுத்துள்ளேன். எனவே முதல் பகுதியை ஒரு முறை மீள்பதிவு செய்கிறேன். 

நன்றி!
ஊரான்.
---------------------------------------------------------------------------------------------------------------------------
அண்டை வீட்டுக்காரரின் பொறாமை! 
பழனியப்பனுக்கு வயது 54. சென்னை-கொரட்டூரில் உள்ள தனியார் காகித உற்பத்தி ஆலையில் பணிபுரிபவர். அம்பத்தூருக்கு அருகில் உள்ள கருக்கு கிராமத்தில் தனது மனைவி நாகவள்ளியுடன வசித்து வருகிறார். நாகவள்ளிக்கு வயது 50. முப்பது வயதிலேயே விவாகரத்து வாங்கிக் கொண்ட மகள் ராஜேஸ்வரியும் இவர்களோடுதான் தங்கியுள்ளார்.

சென்னைவாசி என்றாலும் பழனியப்பனுக்கு வாழ்க்கை வெறுத்துவிட்டது. சென்னையின் விலைவாசியோ, போக்குவரத்து நெரிசலோ, ஜெயாவின் பேருந்து கட்டண உயர்வோ இவரது வெறுப்புக்குக் காரணமில்லை. நிரந்தரமான வருவாய் இருந்தும் வாழ்க்கையில் நிம்மதி இல்லை. நிம்மதியைத் தேடி இவர் அடிக்கடி கோவில் கோவிலாக வெளியூருக்கு யாத்திர சென்றுவிடுவார்.

பக்தி முத்தியதாலோ அல்லது ஆன்மீக நாட்டத்தாலோ இவர் யாத்திரை செல்வதில்லை. பக்கத்து வீட்டுக்கார்களுடன்  தனது மனைவி அடிக்கடி சண்டை போடுவதை சகிக்க முடியாமல்தான் பழனியப்பன் யாத்திரை சென்றுவிடுகிறார். 

கடந்த வாரம் யாத்திரை முடிந்து வீட்டிற்குள் நுழைந்தாரோ இல்லையோ தனது சண்டைக்கு ஆதரவாகப் பேச வேண்டும் என வலியுத்துகிறார் நாகவள்ளி. அதற்கு பழனியப்பன் மறுக்கிறார். அது மட்டுமல்ல, அண்டை வீட்டுக்காரர் தனது மனைவி மீது புகார் கொடுக்க காவல் நிலையம் சென்ற போது பழனியப்பனும் உடன் சென்றதாகத் தகவல். அதனால் ஆத்திரம் அடைந்த நாகவள்ளி கணவனைத் திட்டித் தீர்க்கிறார். 

பழனியப்பனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை; ஆத்திரமடைகிறார். வீட்டில் இருந்த கடப்பாரையால் மனைவியின் மண்டையைப் பிளக்கிறார். பலத்த அடிபட்ட நாகவள்ளி சற்று நேரத்தில் மாண்டு போகிறார். பிறகு தனது மகள் ராஜேஸ்வரியையும் பழனியப்பன் கொலை செய்கிறார். 

இது கதையல்ல. கடந்த வியாழன் அன்று சென்னையில் நடந்த உண்மைச் சம்பவம்.

இங்கே கொலை செய்கிற அளவுக்குச் செல்வது அசாதாரணமானதுதான். ஆனால் அக்கம் பக்கத்து வீட்டாருடன் சண்டை என்பது இச்சமூகத்தில் மிகச் சாதாரணமானது.

இத்தகைய சண்டை-சச்சரவுகளுக்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது பொறாமை. 

"Neighbour's envyOwner's Pride" இது ஒனிடா (ONIDA) நிறுவனத்தின் பிரபலமான விளம்பரம். அதாவது ஒனிடா நிறுவனத்தின்  தொலைக்காட்சி உள்ளிட்ட எந்தப் பொருளை ஒருவர் வைத்திருந்தாலும் அது "அண்டை வீட்டுக்காரரின் பொறாமை; (பொருளின்) சொந்தக்காரரின் பெருமை" என பறை சாற்றிக் கொள்ளலாம் என்பது அதன் பொருள்.

இந்தப் பொறாமை அண்டை வீட்டாரோடு நிற்பதில்லை.

Neighbour என்ற ஆங்கிலச் சொல்லிற்கு -
அயலவர்; 
அருகிலுள்ளவர்; 
அக்கம் பக்கத்திலுள்ளவர்;
அண்டை வீட்டார்; 
அடுத்திருப்பவர்; 
அடுத்த தெருவினர்;
பக்க ஊரினர்; 
அண்டை நாட்டினர்
என சென்னை பல்கலைக்கழக "ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியம்" பொருள் கூறுகிறது.
இதில் அண்டை மாநிலத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆனால், இதே Neighbour க்கு அதே சொற்களஞ்சியத்தில்
நட்புணர்ச்சியுடையவர்:
பாசமுடையவர்: 
பாசத்துக்குரியவர்
என்றும் பொருள் கூறப்பட்டுள்ளது.

மொத்தத்தில் Neighbour யாராக இருந்தாலும் நட்போடும் பாசத்தோடும் இருக்க வேண்டும் என்று பொருள் கொள்வதே பொருத்தமானதாக இருக்க முடியும்.

பாசத்தோடும் நட்போடும் பழக வேண்டியவர்களை ஒனிடா வந்து பொறாமை கொள்ள வைத்துவிட்டதோ!  ஆனால் ஒனிடா பொருள் இல்லாத போதும் பொறாமை குடி கொண்டுள்ளதே,  அண்டை வீட்டாருடன் சண்டை சச்சரவுகள் நீடிக்கின்றனவே! என்ன காரணம்?


-----தொடரும்

No comments:

Post a Comment