Wednesday, January 30, 2013

சோலை மலையும் பத்ம விருதுகளும்!

1947 ல் ஆங்கிலேயன் வெளியேறினாலும் அவனது அரசியல் சாசன சட்டமே ஆட்சிக் கட்டிலில் கோலோச்சியது. அதையே சற்று திருத்தி இந்திய அரசியல் சாசன சட்டமாக பெயர் மாற்றி நடைமுறைக்கு வந்த நாளை 64 வது முறையாக நர்சரி பள்ளி தொடங்கி டெல்லி செங்கொட்டை வரை கொண்டாடி விட்டோம்.

“தாயின் மணிக் கொடி... தாயின் மணிக்கொடி” என்கிற பாடலுக்கு வீர நடை போட்டு சல்யூட் அடித்த பிஞ்சுக் குழந்தைகள்,

“தேச பக்த வீரனே... அணி திரண்டிடு” என எக்காலமிட்டு போருக்கு அழைக்கும் மழலைகள்,

“கல்லெல்லாம் செல செஞ்சான் பல்லவ ராசா” என நளினமாய் நாட்டியமாடி நம் 'பாரம்பரியக் கலைகளை' புரிய வைத்த ஃபிரிகேஜிக் குழந்தைகள்,

“சொர்க்கம் என்பது நமக்கு... சுத்தம் உள்ள வீடுதான்” என ஆடிப்பாடி சாலைகளையும், பேருந்து நிலையங்களையும் அசுத்தப்படுத்தாதீர்கள் என 'புத்திமதி' கூறி புரிய வைத்த பள்ளி மாணவர்கள்,

ராமதாசுக்களும், காடுவெட்டி குருக்களும் நம்மைக் கூறுபோடும் நேரத்தில் இந்திய நாடு என் வீடு...இந்தியன் என்பது என் பேரு என மக்களின் 'ஒற்றுமையை' நிலைநாட்டிட நாட்டியமாடிய உணர்ச்சி பிழம்பான சிறார்கள்,

நான் ஏன் பிறந்தேன்...நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்...” என பாட்டுப்பாடி நாட்டுக்கு நாம் ஆற்ற வேண்டிய 'கடமைகளை' உணர்த்திய குழந்தைகள் என இந்த ஆண்டு களைகட்டியிருந்தது குடியரசு நாள் கொண்டாட்டம்.

இதற்காக ஒரு வாரம் பயிற்சி எடுத்து ஒரு சில நூறு ரூபாயை செலவு செய்து அடுத்தவர்களுக்கு தேசபக்தியை எடுத்துச் சொல்லியாச்சு. மற்றதை இனி அடுத்த ஆகஸ்டில் பார்த்துக்கொள்ளலாம்.

மொத்தத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுக்கும், செலவு செய்த பெற்றோர்களுக்கும், பயிற்சி அளித்த பள்ளி ஆசிரியர்களுக்கும் இந்த ஒரு நாள் குடியரசு நாள் கொண்டாட்டம் மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும்.

குடியரசு நாள் என்னவென்று தெரியாத ஒரு பாமரன்கூட தொலைக்காட்சி பார்த்தாவது கொஞ்சம் மகிழ்ந்திருப்பான்.

ஆனால் குடியரசு நாளன்று மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்லும் ஒரு கூட்டத்தையும், ஆழ்ந்த வருத்தத்துக்கு ஆளாகும் மற்றொரு கூட்டத்தையும் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

பத்ம விருதுகள்

குடியரசு நாளையொட்டி பாரதரத்னா, பத்மவிபூசன், பத்மபூசன், பத்மசிறீ என ஐந்து வகையான விருதுகளை வழங்கி கௌரவிக்கிறது நடுவண் அரசு. கலை, அறிவியல் தொழில் நுட்பம், பொது நிர்வாகம், தொழில் வர்த்தகம், இலக்கியம், கல்வி, கலை இலக்கியம், வியைாட்டு, பொது விவகாரம் போன்ற பிரிவுகளில் சிறப்பான சேவை செய்தவர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.

மக்களின் உயரிய பண்புகளை நாசமாக்கி இலட்சங்களையும் கோடிகளையும் சுருட்டும் கோமாளிகளுக்கு கலைச் சேவைக்கான பத்மபூசன் - பத்மசிறீ விருதுகள்; பத்துபேர்கூட கேட்கவில்லை என்றாலும் இறுதி மூச்சுவரை பத்ம விருதுக்காகவே ஒற்றை நாடியை இழுத்துப் பிடித்துப் பாடிக் கலைத்த இசைவிற்பன்னர்களுக்கு கலைச் சேவைக்கான விருதுகள்; தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி கொள்ளையடிக்கும் முதலாளிகளுக்கு தொழில் வர்த்தகப் பிரிவிற்கான விருதுகள்; விளையாட்டையே ஒரு தொழிலாகத் தேர்வு செய்து அதன் மூலம் கோடிகளைக் கண்ட விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டுத் துறைக்கான விருதுகள் என இந்த விருதுகளின் பட்டியல் வெகு நீளமானது. இந்த ஆண்டு மட்டும் 108 பத்ம விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

வயலில் பாடுபடும் விவசாயி, உடலை மறைக்க உடை தரும் நெசவாளி, குடியிருக்க வீடு கட்டும் கட்டடத் தொழிலாளி இவர்கள் செய்வதெல்லாம் நடுவண் அரசுக்கு ஒரு தொழிலாகத் தெரியவில்லை போலும்! மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காக பாடுபடும் இவர்களுக்கு இதுவரை ஏதாவது பத்ம விருதுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றதா?

எல்லோரும் அவரவர் பிழைப்புக்காக உழைப்பதைப் போலத்தான் கலை, அறிவியல் தொழில் நுட்பம், பொது நிர்வாகம், தொழில் வர்த்தகம், இலக்கியம், கல்வி, கலை இலக்கியம், வியைாட்டு, பொது விவகாரம் உள்ளிட்ட பிற துறை சார்ந்தவர்களும் தங்களது பிழைப்புக்காக ஒரு துறையை தேர்வு செய்து கொண்டு வேலை செய்கிறார்கள். மேற்கண்ட துறைகள் விவசாயம், நெசவு, கட்டுமானம் போன்ற துறைகளைவிட மேம்பட்ட துறைகள் கிடையாது. அப்படி இருந்தும் இவர்களின் உழைப்பால்தான் இந்தியா தலை நிமிர்ந்து நிற்பதாகவும், இவர்கள்தான் இந்தியாவிற்குப் பெருமை தேடித் தருவதாகவும் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.

சம்பாதிக்க மட்டும் இத்தகையத் தொழிலை இவர்கள் தேர்வு செய்வதில்லை. மேற்கண்ட விருதுகளைக் குறிவைத்தே சிலர் செயல்பட்டு வருகின்றனர். விருது கிடைத்தால் உழைப்பு வீண்போகவில்லை என புலகாங்கிதம் அடைவதும், கிடைக்கவில்லை என்றால் புலம்பித் தீர்ப்பதும் இவர்களின் வாடிக்கை. கலைக்காகவே, விளைட்டுக்காகவே தங்களது வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டதாக பீலா விடுவார்கள். யார் இவர்களை அர்பணிக்கச் சொன்னது? தொழில் சரிபட்டு வரவில்லை என்றால் வேறு தொழிலுக்குச் செல்ல வேண்டியதுதானே! இவர்களை யார் தடுத்தார்கள்?

“பொதுவாகச் சொன்னால், சலித்தும் சோம்பிக்கிடக்கின்ற பேர்வழிகளுக்கு விளையாட்டுக் காட்டுவதற்காகப் பலவிதமான விளம்பரம் தரும் பகட்டான காட்சிகளைப் புதிது புதிதாகப் புனைய வேண்டியிருக்கிறது” என மக்களுக்கு எந்தவகையிலும் பயன்படாத கலை - விளையாட்டு உள்ளிட்ட சில துறைகளில் நிகழ்த்தப்படும் சாதனைகள் பற்றி “நான் எவ்வாறு எழுதக் கற்றுக் கொண்டேன்?” என்கிற தனது நூலில் மாக்சிம் கார்க்கி குறிப்பிடுவதை இங்கே நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

குடியரசுத் தலைவர் பதக்கம்

மாநில காவல் துறையிலும் சீர்மிகு பணிக்காக கடலோர காவல் படைத்தலைவருக்கும், சிறப்புப் பணிக்காக குற்றப்பிரிவு தலைவருக்கும் - ஊழல் தடுப்புத் துறைத் தலைவருக்கும் குடியரசுத் தவலவரின் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

இப்படி பதக்கம் வழங்கப்பட்டுள்ளதால் இனி இலங்கை காடையர்களால் தமிழக மீனவர்கள் கொலை செய்யப்படமாட்டார்கள் என்றோ, இனி தமிழகத்தில் நகைக் கொள்ளையோ இன்ன பிற குற்றச் செயல்களோ நடைபெறாது என்றோ, இனி அரசு அலுவலகங்களில் இலஞ்ச - ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றோ நீங்கள் கருதினால் அது உங்களின் நம்பிக்கை; நம்பிவிட்டுப் போங்கள்!

விருது பெறும் விவசாயி சோலைமலை

இத்தகைய கூத்துகளுக்கிடையில் ஒரு ஏக்கரில் சராசரியாக 3800 கிலோ மகசூலுக்குப் பதிலாக புதிய சாகுபடி முறையில் (System of Rice Intensification - SRI) 8272 கிலோ மகசூல் ஈட்டி சாதனை புரிந்த மதுரையைச் சேர்ந்த சோலை மலை என்கிற விவசாயி தமிழக அரசின் ரூ5 இலட்சம் ரொக்கப் பரிசையும் ரூ3500 மதிப்பிலான தங்கப் பதக்கத்தையும் பெற்றுள்ளது ஒரு ஆறுதலான செய்தி. 

SRI முறையில் உற்பத்தி செய்யப்படும் நெல் மிகப் பெரிதாக இருப்பதால் இதை சோற்றுக்காக பயன்படுத்துவது கடினமானதால் மாவாக மட்டமே பயன்படுத்த முடியும். ஒரு காலத்தில் ஐ.ஆர்.எட்டு நெல் பலரின் பசியைத் தீர்த்தது போல இந்தப் புதிய இரகம் உழவனை உய்விக்குமா எனத் தெரியவில்லை. மேலும் இத்தகைய புதிய முயற்சியை யார் உருவாக்கினார்கள்? விதைக்கான மூலம் எது? புதிதாக தமிழக அரசு விவசாயிக்கு பதக்கம் வழங்குவது ஏன்?  இதில் பன்னாட்டு விதை நிறுவனங்களின் பங்கு ஏதேனும் இருக்குமா? என்கிற கேள்விகளும் கூடவே எழத்தான் செய்கிறது?

இருந்தாலும் சோலை மலையின் சாதனை பத்ம விருது பெற்ற  மற்றவர்களின் சாதனைகளை விஞ்சி நிற்கிறது.

No comments:

Post a Comment