Monday, May 20, 2013

பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் – 9


தொட்டால் தீட்டு

தீண்டாமைதான் பார்ப்பனியத்தின் மிக முக்கியமான கூறு. தீண்டாமையை ஆங்கிலத்தில் untouchable என்கிறார்கள். தீண்டுதல் என்றால் தொடுதல், மீறி தொட்டு விட்டால் தீட்டாகிவிடும் என்பதுதான் இதன் நேரடி பொருள். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து வசதிகள் மேம்படாத காலத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவனின் உடை காற்றில் அசைந்து தங்கள் மேல் பட்டுவிட்டாலே தாங்கள் தீட்டுப்பட்டுவிட்டதாகக் கருதினார்கள் பிற மேல்சாதியினர். இப்படித் தீட்டுப்பட்டுவிட்ட மேல் சாதியினர் தீட்டோடு தங்கள் வீட்டிற்குள் நுழைய மாட்டார்கள். வீட்டை நெருங்கும் போது குழந்தைகள் பாசத்தோடு ஓடிவந்து அணைக்க முயலும் போது “தொடாதே!” என ஒதுங்கிக் கொள்வார்கள். தன்னைத் தொட்டு விட்டால் குழந்தையும் தீட்டுப்பட்டு விடுமாம். அதனால்தான் இத்தனை எச்சரிக்கை.

பிறகு பின்வாசல் வழியாகச் சென்று உடுத்தியிருக்கும் ஆடைகளைக் களையாமல் குடம் குடமாய் தண்ணீரை தலையில் ஊற்றிக் கொண்ட பிறகுதான் வீட்டிற்குள் நுழைவார்கள். உடுத்தியிருந்த ஆடைகளை நனைக்காமல் கழற்றி போட்டுவிட்டு குளித்தால் நனைக்கப்படாத துணியில்கூட தீட்டு ஒட்டிக் கொண்டிருக்குமாம். அதனால்தான் உடுத்திய உடையோடு தலை முதல் பாதம் வரை தண்ணீரால் கழுவுகிறார்கள். சாவுக்குச் சென்று வந்தவன் என்ன செய்கிறானோ அதைத்தான் ஒரு தாழ்த்தப்பட்டவனின் துணி தன்மேல் பட்டுவிட்டதற்கும் செய்கிறார்கள். ஒரு தாழ்த்தப்பட்டவனை பிணத்துக்குச் சமானமாகத்தான் பார்க்கின்றனர்.

தனது துணியின் நுனி ஒரு உயர்சாதிக்காரன் மீது பட்டுவிட்டது என்பது மட்டும்தான் அந்தத் தாழ்த்தப்பட்டவனுக்குத் தெரியும். ஆனால் தீட்டுக் கழிப்புகள் எப்படி நடக்கின்றன என்பதை அவன் பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. தீண்டாமை எத்தனைக் கொடியது என்பதை அவன் இன்னமும் முழமையாக அறிந்திருக்கவில்லை என்பதைத்தான் இச்செயல்கள் உணர்த்துகின்றன. ஒரு தாழ்த்தப்பட்டவனின் உடையின் ஒரு நுனி தன்மேல் பட்டுவிட்டதற்கே இத்தனை தீட்டுக்கழிப்புகள் நடத்தும் பிற மேல் சாதியினர், தாழ்த்தப்பட்டவர்களை மற்ற விசயங்களில் எப்படி நடத்தியிருப்பார்கள் / நடத்துகிறார்கள் என்பதை விவரிக்க வேண்டியதில்லை. குடம் குடமாய் தலையில் ஊற்றுவதற்குத் தண்ணீர் இல்லை என்றால் தலையில் தண்ணீர் தெளித்துவிட்டு ஆடைகளை மாற்றிக் கொண்டு தீட்டுக் கழிப்போரும் உண்டு.

இன்று போக்குவரத்து வசதிகள் கிராமம் வரை செய்யப்பட்டுள்ளன. எல்லாச் சாதியினரும் ஒரே பேருந்தில் ஒட்டி உரசிக் கொண்டு பயணிக்கிறார்கள். முன்பு துணியின் நுனி பட்டதற்கே தலை முழுகியவன் இன்று இவன் வேர்வையும் அவன் வேர்வையும் ஒன்று கலந்தாலும் அவ்வாறு தலை முழுகுவதில்லை. அப்படியானால் தீண்டாமை ஒழிந்துவிட்டதா? இது போன்ற சில மாற்றங்களை வைத்துதான் “இப்பவெல்லாம் யாரு சார் தீண்டாமையை கடைபிடிக்கிறார்கள்?” என்று பலரும் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். 

வாடகை வீட்டில் தீட்டு

ஐயர் முதல் அகமுடையர் வரை சாதியைக் கேட்காமல் நகரங்களில் வாடகைக்கு வீடு தருகிறார்களா? எதற்காக முன்கூட்டியே சாதியைத் தெரிந்து கொள்கிறார்கள்? வாடகைக்கு வருபவன் தாழ்த்தப்படவனாக இருந்தவிடக்கூடாது என்பதால்தானே? இது தீண்டாமை இல்லையா? கிராமங்களில் சேரிகள் தனியாக இருப்பதனாலும், தாழ்த்தப்பட்டவர்கள் வாடகை வீடு தேடுவதற்கான தேவை இல்லை என்பதனாலும் வாடகை வீட்டுத் தீட்டு கிராமங்களில் இருக்க வாய்ப்பில்லை.

பரோடா மன்னரால் மாநிலத் தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகத்தில் அம்பேத்கருக்கு பயிற்சியாளர் வேலை கிடைத்த போது அவர் ஒரு பயணிகள் விடுதியில் தங்குகிறார். அது பார்சிகள் தங்கும் விடுதி. தான் ஒரு தாழ்த்தப்பட்டவர் என்பதால் விடுதியில் தங்க இடம் தரமாட்டார்கள் என்பதால் தன்னை ஒரு பார்சி எனக்கூறியதால்தான் அவருக்கு அங்கே இடம் கொடுத்தார்கள். ஆனால் சில நாட்களில் பார்சிகள் இதைத் தெரிந்து கொண்டு அவரை அடிக்க வந்த போது “இன்னும் ஒரு வாரமாவது தங்க அனுமதியுங்கள்” எனக் கெஞ்சிக் கேட்கிறார். ஆனால் பார்சிகள் அதற்கு இடம் தரவில்லை.

அதன் பிறகு தனது நெருங்கிய நண்பர்களான ஒரு இந்துவையும், ஒரு கிருஸ்தவரையும் அணுகி அவர்களது வீட்டில் தற்காலிகமாகத் தங்குவதற்கு அனுமதி கோருகிறார். ஒரு தாழ்த்தப்பட்டவரை வீட்டில் அனுமதித்தால் வேலையாட்கள் வெளியேறி விடுவார்கள் என்பதற்காக அந்த இந்து நண்பரும், பிராமணக் குடும்பத்திலிருந்து வந்த பழைமைவாதி என்பதால் தனது மனைவி ஒரு தாழ்த்தப்பட்டவரை வீட்டில் அனுமதிக்கமாட்டார் என அந்தக் கிருஸ்தவ நண்பரும் கைவிரித்துவிட அன்று இரவே ஊரைக் காலி செய்துவிட்டு பம்பாய்க்குப் பயணமாகிறார் அம்பேத்கர்.

“இந்துவுக்கு ஒருவன் தீண்டத்தகாதவன் என்றால் அவன் பார்சிக்காரர்களுக்கும் தீண்டத்தகாதவன்தான் என்பதை அப்பொழுதுதான் முதன் முதலாகத் தெரிந்து கொண்டேன்” என 1916 ல் தனக்கு நேர்ந்த அனுபவத்தை வேதனையோடு பதிவு செய்கிறார் அம்பேத்கர். கிட்டத்தட்ட நுறு ஆண்டுகள் முடியப் போகிறது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு வாடகை வீடு தருவதில் அதே நிலைதான் இன்றும் தொடர்கிறது. தீண்டாமை எங்கே ஒழிக்கப்பட்டிருக்கிறது?

கோவில்களில் தீட்டு

கோவில்களில் நுழைய தாழ்த்தப்பட்டவர்கள் அனுமதிக்கப் படுவதில்லையே ஏன்? அவர்கள் கோவிலுக்குள் நுழைந்து வழிபட்டால் என்ன நடந்து விடும்? கோவில் இடிந்து விழுந்து விடுமா? அல்லது கோவிலில் வீற்றிருக்கும் சாமி கோபித்துக் கொண்டு வெளியேறிவிடுமா? “இது எங்க கோவில், வேண்டுமானால் அவர்கள் தனியாக கோவில் கட்டிக் கொள்ளட்டுமே, ஏன் இங்கே வர வேண்டும்?” என்று கேட்கிறார்களே இதில் தீண்டாமை இல்லையா?

தண்ணீரில் தீட்டு

அம்பேத்கர் உள்ளிட்ட சுமார் 30 பேர் வேருலிலுள்ள புத்த சமயக் குகைகளைப் பார்க்க அவர்கள் தவுலாதாபாத் நகரைக் கடந்து பிறகு அவுரங்காபாத் வழியாகச் செல்ல வேண்டும். தவுலாதாபாத் கோட்டை மிகவும் பிரபலமானது என்பதால் அதைப் பார்ப்பதற்காகச் செல்கிறார்கள். இவர்களோடு உள்ளூர் தாழ்த்தப்பட்டவர்களும் சேர்ந்து செல்கின்றனர். பயணக் கலைப்பைப் போக்க கோட்டை வாயிலுக்கு வெளியே நீர் நிரம்பியிருந்த குளத்தில் முகத்தையும் கால்களையும் கழுவிக் கொண்டு கோட்டை வாயிலுக்குச் சென்ற போது ஒரு வயதான வெள்ளைத் தாடியுடன் கூடிய முகமதியர் “தெத்கள் (தீண்டத்தகாதவர்கள் என்ற பொருளில்) குளத்தை அசுத்தம் செய்துவிட்டார்கள்” என்று கூப்பாடு போடுகிறார். அந்த முதியவரோடு பல இளம் முகமதியர்கள் சேர்ந்து கொண்டு “இந்தக் குளத்தை தீண்டத்தகாதவர்கள் உபயோகிக்கக்கூடாது என்பதை நீங்கள் ஏன் வெளியூர்க்காரர்களுக்குச் சொல்லவில்லை?” எனக் கொலை வெறியோடு உள்ளூர் தாழ்த்தப்பட்டவர்களை நோக்கி கேள்விக் கணைகளை தொடுத்ததோடு மிகவும் ஆபாசமாகத் திட்டித் தீர்த்தார்கள். அதன் பிறகு தாழ்த்தப்பட்டவர்கள் கோட்டைக்குள் அனுமதிக்கப்பட்டாலும் எந்தத் தண்ணீரையும் அவர்கள் தொட்டுவிடக்கூடாது என்பதை கண்காணிக்க கூடவே ஆயுதந்தாங்கிய சிப்பாய் ஒருவனை அனுப்பி வைக்கிறார்கள்.

“ஒருவன் இந்துவுக்குத் தீண்டத்தகாதவன் என்றால் அவன் முகம்மதியருக்கும் தீண்டத்தகாதவனே என்பதை இந்த நிகழ்ச்சி படம் பிடித்துக் காட்டும்” என 1934 ல் நடந்த ஒரு நிகழ்ச்சியை பதிவு செய்கிறார் அம்பேத்கர்.

இஸ்லாமியர்களே இப்படி என்றால் இந்துக்களைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன?. எண்பது ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால் பொதுக் கிணற்றிலும், பொதுக் குழாயிலும் தண்ணீர் பிடிப்பதற்கு இன்னமும் தாழ்த்தப்பட்டவர்கள் அனுமதிக்கப்படுவதில்லையே.ஏன்?  தீண்டாமை எங்கே ஒழிக்கப்பட்டிருக்கிறது?

காதலில் தீட்டு

பிற உயர் சாதிக்காரர்கள் தங்கள் சாதிகளுக்குள் காதலித்து திருமணம் செய்து கொண்டால் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் ஏதோ ஒரு வழியில் சமாதானமாகி விடுகிறார்கள். இங்கே தீண்டாமை என்கிற கேள்வியே எழுவதில்லை. ஆனால் ஒரு தாழ்த்தப்பட்டவன் பிற சாதிப் பெண்ணைக் காதல் திருமணம் செய்து கொண்டால் அது எட்டிக் காயாகக் கசக்கிறது. சாதிய ஏற்றத்தாழ்வுதானே என அவன் இங்கே சமாதானமாவதில்லை. தாத்தப்பட்டவன் உயர்சாதிப் பெண்ணைக் காதலித்து விட்டால் நாயக்கன் கொட்டாய்கள் பற்றி எரிகின்றன. இத்தகைய காதல் திருமணங்களை எதிர்ப்பதில் தீண்டாமை கிடையாதா?

பொதுவாக பார்ப்பனர்கள் வேறு சாதிப் பெண்களைக் காதலிப்பதில்லை. ஒரு பார்ப்பனப் பெண் பிற்படுத்தப்பட்டவன் வீட்டிற்கு மருமகளாக வரலாம். அல்லது ஒரு பிற்படுத்தப்பட்டப் பெண் மற்றொரு பிற்படுத்தப்பட்டவனின் வீட்டிற்கு மருமகளாக வரலாம். சாதிய ஏற்றத்தாழ்வு என்கிற எதிர்ப்புகள் இருந்தாலும் பிறகு சமாதானமாகி விடுகிறார்கள். ஆனால் ஒரு தாழ்தப்பட்டவள் தனது வீட்டிற்கு மருமகளாக வந்தவிடக்கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார்களே பிற உயர் சாதியினர். அது ஏன்? அதனால்தானே தாழ்த்தப்பட்டப் பெண்களை பிற உயர் சாதியினர் காதலிப்பது மிகவும் அரிதாகவே நடக்கிறது. இந்த எச்சரிக்கை உணர்வில் தீண்டாமை ஒளிந்திருக்கவில்லையா?

இப்படி தீண்டாமைக் கொடுமைகள் அன்றாட வாழ்க்கையில் ஏறாளமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இன்றைய நவீன காலத்தில் தீண்டாமை என்பது தொட்டால் தீட்டு என்கிற பழைய வடிவிலிருந்து புதிய வடிவில் தொடர்கின்றன. இத்தகைய தீண்டாமையை பார்ப்பனர்கள் மட்டுமா கடை பிடிக்கிறார்கள்? தாழ்த்தப்பட்டவர்களுக்கு மேல் உள்ள எல்லா சாதியினரும்தான் கடைபிடிக்கிறார்கள். அப்படியானால் இவை எல்லாம் பார்ப்பனியம் கிடையாதா?

தொடரும்.....

தொடாபுடைய பதிவுகள்




பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் – 7




No comments:

Post a Comment