Saturday, June 21, 2014

குடுகுடுப்பைக்காரனைவிட பூம்பூம் மாட்டுக்காரனே மேல்!

பூம்பூம் மாட்டுக்காரன்

பொதுவாக பூம்பூம் மாட்டுக்காரன் குறி சொல்லும் போது, அவனது மாடுதான் அவன் சொல்வதற்கேற்ப தலையை ஆட்டி ஆமோதிக்கும். ஆனால், இவன் போட்டிருக்கும் வேஷம் மட்டும்தான் பூம்பூம் மாட்டுக்காரனைப் போல இருக்கும். அதிலும் அந்தத் தாடியும், தலைப் பாகையும் மிகவும் எடுப்பாகவே இருக்கும். இந்த பூம்பூம் மாட்டுக்காரன் மிகத்தாழ்ந்த மெல்லிய கீச் குரலில்தான் பேசுவான். இவன் பேசுவது இவனுக்கே கேட்காது. இவன் பேசியது எதுவும் புரியாததால் பூம்பூம் மாடு தலையை ஆட்டலாமா வேண்டாமா என யோசிப்பதற்குள் இவனே மேலும் கீழுமாக தலையை ஆட்டி ஆமோதித்துக் கொள்வான்.


இப்படியாக இவன் ஒரு பத்து ஆண்டுகாலம் “நாடு வல்லரசாகும்! நாடு வல்லரசாகும்!” என குறி சொல்லிப் பார்த்தான். நாடு வல்லரசு ஆவதற்குப் பதிலாக இவனது மாட்டுக்கு வைக்கோலும், தவிடும், புண்ணாக்கும் வைத்தவர்கள் மட்டுமே காடுகளையும், கனிம வளங்களையும் கபளீகரம் செய்தார்கள்; ராசாவானார்கள்; மாறா வலிமை பெற்றார்கள்.

குறி கேட்ட மக்களோ, மேலும் மேலும் துன்ப துயரங்களுக்கு ஆளானார்கள். விலைவாசி உயர்வால் வாடி வதங்கினார்கள். வேலை இன்மையால் வாழ்வை இழந்தார்கள். நல்ல காலம் பிறக்காதா என ஏங்கினார்கள்.

குடுகுடுப்பைக்காரன்

உரக்கத்தைக் களைந்து, கதிரவன் கீழ்வானில் தென்பட ஓரிரு மணித்துளிகளே இருந்த அதிகாலை நேரம் அது. அப்பொழுது  “நல்ல காலம் பொறக்குது! நல்ல காலம் பொறக்குது!” என்கிற குரல் கேட்டு ஆர்வத்தோடு திரும்பினால்,  அங்கே எடுப்பான பைஜாமா குர்தாவோடு ஒரு குடுகுடுப்பைக்காரன் தனது 'டிரிம்மான' தாடியை மென்மையாக வருடியவாறே, தனது காவி சிஷ்யர்களோடு துயருற்ற மக்களை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தான். “வளர்ச்சி! வளர்ச்சி!” என காவி சிஷ்யர்கள் கோஷங்கள் எழுப்பிய வண்ணம் வந்தனர்.


இவன் தெற்கே சென்ற போது மீனவர்கள் துயரம் தாமரை இலையில் பட்ட நீரைப் போல விரைவில் நீங்கும் என்றான். விதர்பா சென்ற போது விவசாயிகளின் தற்கொலைத் துயரம் விலகி ஓடும் என்றான். வடக்கே சென்ற போது வேலை இன்மை இனி இருக்காது என வசீகரமாய்ச் சொன்னான். கிழக்கே சென்ற போது வங்கத்து மக்களின் வாட்டம் இனி இருக்காது என அருள் வாக்கு கொடுத்தான்.

இவற்றை எல்லாம் கேட்ட மக்களுக்கோ உற்சாகம் பீறிட்டது. இவன் அர்த்த ஜாமத்தில் வருவதற்குப் பதிலாக விடிந்த பிறகே வந்து குறி சொல்வதால் இவன் சொல்வது கண்டிப்பாக பலிக்கும் என நம்பினர்.

கையை தலையில் வைத்து திருநங்கைகள் ஆசீர்வாதம் செய்தாலே நல்லது நடக்கும் என நம்பி பத்து ரூபாயை சுளையாக எடுத்துக் கொடுக்கும் மக்கள் வாழும் பூமியல்லவா நமது பூமி!

கோவில் குருக்கள் தட்டை நீட்டும் போது, அது பிச்சைக்காரனை நினைவு படுத்தினாலும் அதில் இருக்கும் குங்குமமும் விபூதியும் வாழ்வைப் பாதுகாக்கும் கவசமென நம்புவதால், அதை இலவசமாகப் பெறுவது இறைவனை ஏமாற்றுவதாகிவிடும் என்பதால், சட்டைப் பையைத் துழாவி ஒரு ஐம்பது காசையாவது அய்யர் நீட்டும் தட்டில் போடும் கடமை உணர்வு கொண்டவர்களல்லவா நமது மக்கள்.

“நல்ல காலம் பொறக்குது! நல்ல காலம் பொறக்குது!” என ஒருவன் நம்பிக்கையை ஏற்படுத்தினால், அவனை வெறுங்கையோடவா அனுப்புவார்கள்! குடுகுடுப்பைக்காரன் வார்த்தைகளை நம்பினார்கள். இருந்ததை எல்லாம் வாரிக் கொடுத்தார்கள். வந்ததை எல்லாம் மூட்டை கட்டினான் குடுகுடுப்பைக்காரன். மூட்டைகள் மூன்னூரைத் தாண்டிவிட்டது. உற்சாகத்தோடு தலைநகர் நோக்கி விரைந்தான். ஏற்கனவே, அங்கே இருந்த பூம்பூம் மாட்டுக்காரன் இவன் அள்ளி வரும் 'லோடைப்' பார்த்து ஓட்டம் பிடித்தான். கோட்டை கொத்தளம் குடுகுடுப்பைக்காரன் வசமானது.

உள்நாட்டில் கிடைத்த 'லோடைப்' பார்த்து புளகாங்கிதம் அடைந்தான் குடுகுடுப்பைக்காரன். காய்ந்து போன நாட்டிலேயே இத்தனை 'லோடு' என்றால், அண்டை நாடுகளுக்குச் சென்றால் இன்னும் அள்ளி வரலாம் என்பதால் தலைநகரில் 'லோடை' இறக்கிய கையோடு, அண்டை நாடுகளுக்கு குறி சொல்லக் கிளம்பி விட்டான். இனி அவன் குறி சொல்லும் எல்லை அகண்ட பூமியாய் விரியக்கூடும்.

ஒரே வாரத்தில், அவன் எல்லை விரிந்தது. ஆனால் அவன் வாக்கை நம்பிய மக்களோ ஒரே வாரத்தில் குப்புற விழுந்தார்கள். தெற்கே மீனவர்களின் துயரம் மேலும் தீவிரமானது. தெற்கு மட்டுமல்ல, நாட்டின் நாற்திசைகளிலும் மக்கள் குமுறத் தொடங்கிவிட்டனர். விலை வாசி விர்ரென வான்நோக்கி உயர்ந்தது. வெங்காயத்தைப் பார்த்து வெலவெலத்துப் போயினர் மக்கள். 

ஜூன் மாதம், தென்மேற்கிலிருந்து வரவேண்டிய வருண பகவான்கூட குடுகுடுப்பைக்காரனைப் பார்த்து வெலவெலத்துப் போய் எல்நினோ போபியாவால் பீடிக்கப்பட்டு கடும் காய்ச்சலில் அவதிப்படுகிறானாம். அவன் குணமாகி பருவம் தவறிய பிறகாவது வருவானா எனத் தெரியாத நிலையில் மக்கள் நாவறண்டு உதடுகள் ஒட்டிய நிலையில் வாயடைத்துப் போயுள்ளனர். வாயுபகவானையும் இனி எட்டிப் பிடிக்க முடியாதாம். மாதா மாதம் அவன் வேகத்தை அதிகப்படுத்த திட்டம் போடப்பட்டுவிட்டதாம்.

தொடர் வண்டி தூரமாகிப் போனது. கையில் இருந்த பணம்கூட சீழ் பிடித்ததால் வீங்கிப் போனதாம். குடுகுடுப்பைக்காரன் கோட்டைக்குப் போனவுடன் ஒரே வாரத்தில் எல்லாம் தலைகீழாய் மாறிப்போனதால், இது பற்றி மக்கள் எதுவும் பேசக்கூடாது என்பதால் மக்களின் பாஷைக்கே பூட்டு போட்டு விட்டானாம் குடுகுடுப்பைக்காரன். இனி அவன் பேசும் பாஷைதான், மக்கள் பாஷையாம். நீங்கள் “ஹே! ஹே!” என்றால் அவன் “ஹி! ஹி!” என இளித்துவிட்டு, “பை! பை!”தான் காட்டுவான்.

பூம்பூம்மாட்டுக்காரன் பத்து ஆண்டுகாலம் பதுங்கிப் பதுங்கிச் செய்ததை, குடுகுடுப்பைக்காரன் பத்து நாட்களிலேயே செய்ததைப் பார்த்து “ஆகா! தவறு செய்து விட்டோமா? குடுகுடுப்பைக்காரனை விட பூம்பூம்மாட்டுக்காரனே மேல்!” என எண்ணத் தொடங்கிவிட்டனராம் மக்கள்!

ஊரான்

Saturday, June 14, 2014

எச்சிலால் கங்கையை நிரப்புவோம்!



எச்சில் துப்புவதால் கங்கை போன்ற நதிகள் மட்டுமல்ல சிறு ஓடைகள்கூட ஒருபோதும் மாசடையாது. எச்சில் துப்புவதற்கேன்றே யாரும் நதிகளை நாடிச் செல்வதில்லை. பல் துலக்கும் போதோ அல்லது குளிக்கும் போதோதான் வாயைக் கொப்பளித்து துப்புவார்கள். இத்தகையச் செயல்களை கோவில் குளங்களிலும் கிணறுகளிலும்கூட நாம் பார்க்க முடியும்.

எச்சில் துப்புவதனால் கங்கை அசுத்தமாகிவிடும் என்பதைவிட எச்சில் துப்புவதனால் கங்கையின் புனிதம் கெட்டுவிடும் என்பதே இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இந்தப் பொருளில்தான் கங்கையில் எச்சில் துப்புவதைப் பார்க்கிறது பா.ஜ.க நடுவண் அரசு. கங்கையை சுத்தப்படுத்துவது அல்லது தூய்மைப்படுத்துவது என்பதைவிட புனிதப்படுத்துவதே இந்த அரசின் நோக்கமாக இருக்கிறது. அதனால்தான் ஆலைக்கழிவுகளையும், நகராட்சிக் கழிவுகளையும் கொட்டி நதிகளை நாசப்படுத்துவோர் மீது பாய்வதற்குப் பதில் எச்சில் துப்புவோர் மீது பாயத் தயாராகிக் கொண்டிருக்கிறது அரசு.

செரிமானத்திற்கு அவசியத் தேவையாகக் கருதப்படும் உமிழ்நீரைத்தானே  எச்சில் என்கிறோம். உணவு உண்ணும் போது வாயை நன்றாக மூடிக்கொண்டு மென்றால்தான் அதிக உமிழ்நீர் சுரக்கும்; இந்த உமிழ்நீரே செரிமானத்தை ஒழுங்கு படுத்தி நமது உடல் நலத்தைக் காக்கும். நமது உடலைப் பேணும். இந்தகைய சிறப்பு வாய்ந்த உமிழ்நீர் எப்படி எச்சிலானது?

பணக்காரன் ஏழையின் உமிழ்நீரை எச்சிலாகப் பார்ப்பதைப் போல தாழ்த்தப்பட்டவனின் உமிழ்நீரை உயர்சாதிக்காரன்  எச்சிலாகப் பார்க்கிறான். வர்க்கமும் சாதியுமே இங்க உமிழ்நீரை எச்சிலாக மாற்றியிருக்கிறதோ!

எச்சில் வெறும் உமிழ்நீரோடு மட்டும் தொடர்புடையதல்ல. சாப்பிட்ட பிறகு வீசி எறியப்படும் இலையை எச்சி இலை என்கிறோம். தண்ணீர் குவளையோ அல்லது தேனீர்க் குவளையோ வாயில் பட்டுவிட்டால் எச்சில் குவளை என்கிறோம். சொந்த சாதிக்காரன் எச்சில் படுத்திவிட்டால் கழுவினாலே போதும். எச்சில்பட்ட குவளை பரிசுத்தமாகிவிடும். ஆனால் தாழ்த்தப்பட்டவன் எச்சில் படுத்திவிட்டால் கழுவினாலும் எச்சில் போகாது. அது எச்சிகரை படிந்ததாகவே கருதப்படும். அதனால்தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தேனீர்க்கடைகளில் தனிக்குவளை வைக்கப்படுகிறது.

கிளி கடித்த மாங்காயும், குரங்கு கடித்த கொய்யாவும் இனிப்பைத் தருகிறது. ஆனால் தாழ்த்தப்பட்டவன் எச்சில் மட்டும் அருவெறுப்பைத் தருகிறது. ‘காக்கா கடி’யில்கூட சாதி இருக்கிறது.

ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுவிட்டால் அவள்  கடைசி வரை கரைபடிந்தவாளகவே கருதப்படுகிறாள். வேறு வார்த்தையில் சொன்னால் அவள் புனிதமற்றவள். அதே போலத்தான் எச்சிக்கரை படிந்த குவளையும் புனிதத் தன்மையை இழந்து விட்டதாக பார்க்கப்படுகிறது.
  
புனிதம் மதத்தோடு தொடர்புடையது. இந்து – இஸ்லாம் - கிருஸ்துவம் உள்ளிட்ட அனைத்து மதங்களுக்கும் புனிதம் பொருந்தும் என்றாலும். இங்கே கங்கை இந்து மதத்தின் புனிதமாக கருதப்படுகிறது. மினரல் வாட்டரில் நீங்கள் முங்கி எழுந்தாலும் அது புனித நீராடல் ஆகிவிடாது. ஆனால் கூவத்தைவிடக் கேவலமான நிலையில் கங்கை இருந்தாலும் அந்தக்  கங்கையில் முங்கி எழுந்தால் அது புனித நீராடலாகிவிடும். புனிதமே இங்குப் பிரதானமானது; காக்கப்பட வேண்டியது. அதனால்தான் எச்சில் துப்பினால் கங்கையின் புனிதம் கெட்டுவிடும் என்பதால் அபராதம் - சிறை பற்றி பேசுகிறது அரசு.

எச்சில் மதத்தோடு மட்டுமல்ல இந்து மதத்தைப் பொருத்தவரை அது தீண்டாமையோடும் தொடர்புடையது. எச்சிலும் – புனிதமும் - தீண்டாமையும் இந்து மத நெறிமுறைகளோடு பின்னிப் பிணைந்த ஒன்று. தீண்டாமையும் புனிதமும் நீடிக்கும் வரை எச்சில்தான் நமக்குப் புனிதமானது. புனிதம் பேசும் இடங்களிலெல்லாம் கங்கையாய் பெருகட்டும் நமது எச்சில்!

பெண் என்ன செய்தாள்? …………தொடர்-3


75 வயதான எனது தாய்க்கு கண்புரை அறுவை சிகிச்சை முடிந்து பத்து நாட்கள்தான் ஆகி இருந்தன. மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை கண்ணில் சொட்டு மருந்து விட வேண்டும். கண் இமையை ஆட்காட்டி விரலால் கீழாக அழுத்தி மேலே பார்க்கச் சொல்லி சொட்டு மருந்தை விட வேண்டும். ஒரு மாத காலத்திற்கு சமையல் வேலைகள் செய்வது மற்றும் கண்ணில் தூசு படும்படியான வேலைகளை செய்வது கண்ணுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அவரை பராமரிக்க வேண்டி நானே சமைக்கிற வேலைகளை மேற்கொண்டேன்.

விவசாய வேலை காரணமாக கிராமத்தில் வசிக்கும் எனது சகோதரிகளும் தாயை கவனித்துக்கொள்ள வர முடியவில்லை. அப்படியே வந்தாலும் ஒன்றிரண்டு நாட்களுக்கு மேல் அவர்களால் தொடர்ச்சியாக இருக்கவும் முடியாது. நகர்ப்புற ஆண்களுக்கு ஓரளவுக்காவது சமைக்கத் தெரியும். சமைக்கத் தெரியவில்லை என்றாலும் ஹோட்டல்களை நாடிக் கொள்ளலாம். ஆனால் கிராமப்புற ஆண்கள் மனைவியின் சமையலைத்தான் நம்பி ஆகவேண்டும். வேறு வழி கிடையாது. அதனால் கிராமப்புற பெண்கள் வெளியூர் சென்றாலும் உடனே ஊர் திரும்பிவிட வேண்டும்.

உறவினர்களின் அடுத்தடுத்த திருமணங்களில் பங்கேற்க எனது துணைவியாரும் வெளியூருக்குச் சென்று திரும்ப முடியாத சூழ்நிலை. எனவே  நான்தான் எனது தாயை பராமரித்தாக வேண்டும். ஏற்கனவே நான் தனியாக இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்ட போதெல்லாம் உணவுக்காக உணவகங்களை நாடிச் செல்லாமல் எனக்கான உணவை நானே சமைக்க முற்பட்டதால் ஓரளவுக்கு சமைக்கத் தெரியும்.

முதல் ஒரு சில நாட்களில் பெரும்பாலும் தயிர் சோறு மட்டுமே. இல்லை என்றால் எலுமிச்சை அல்லது தக்காளி சோறு மட்டுமே. தொட்டுக்க மாம்பழம் இருந்ததால் சமாளிக்க முடிந்தது. கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் கேரட், கீரை உள்ளிட்ட காய்கறிகளை தவறாமல் சேர்த்துக் கொள்ள அறிவுருத்தி மருத்துவ மனையிலிருந்து ஒரு பிரசுரத்தையும் கொடுத்து அனுப்பி இருந்தார்கள். எனவே கொஞ்சம் சத்தான உணவையும் சேர்ப்போமே என்பதால்தான் இன்று சோறு, பொரியல், கூட்டு, சாம்பார் என கூடுதலாக சமைக்க முயன்றேன்.

மீண்டும் மாலையில் தேனீர் தயாரித்தல், பிறகு சமையல், பாத்திரங்களைக் கழுவுதல் என அதே பாணியிலான வேலைகள் தொடர்ந்தன. இப்படி கிட்டத்தட்ட பதினைந்து நாட்களை சமாளித்துள்ளேன்.

இத்தகைய வேலைகளினூடாக மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை எனது கைகளை நன்றாகக் கழுவிக் கொண்டு தாயின் கண்ணுக்கு சொட்டு மருந்து போட்டு வந்தேன். இதற்காக நண்பகல் 12 மணிக்கு வீட்டிற்கு வந்து செல்வேன். நான் வீட்டு வேலைகளையும் செய்து கொண்டு கண்ணுக்கு மருந்து போடுவதையும் பார்த்த எனது தாய் என்ன நினைத்தாரோ தெரியவில்லை? அவர்களாகவே சொட்டு மருந்து போட முயற்சி செய்து பிறகு பழகிக் கொண்டார்கள். நெருக்கடிகள் வரும் போது முடியாத வேலைகளைக்கூட முயன்றால் செய்ய முடியும் என்பதற்கு இது ஒரு கண்கூடான உதாரணம்.

இன்றைய சமையலின் போது காலையில் மட்டும் கிட்டத்தட்ட சுமார் 2 மணி நேரம் நின்று கொண்டே வேலை செய்திருக்கிறேன். சமையல் வெறும் உடல் உழைப்பு கோரும் வேலை மட்டுமல்ல; அதிக நுணுக்கத்தையும், அதே வேளையில் பொருமையையும் கோரும் வேலை என்பதை உணர முடிந்தது. கொஞ்சம் கவனம் சிதறினால்கூட வெண்டைக்காய் பொரியலுக்கு ஏற்பட்ட கதிதான் மற்றதற்கும் ஏற்படும். பிறகு மீண்டும் ஒரு முறை புதிதாக சமைக்க நேரிடும்.

சமையல் வேலை மட்டுமல்ல, துணி துவைப்பது, வீடு - வாசலைப் பெருக்கி சுத்தமாக வைத்துக் கொள்வது என ஒரு பெண்ணுக்கான வேலை முடிவற்றதாய் அன்றாடம் தனது வாழ்நாள் முழுதும் தொடர்கிறது.

வெளியில் வேலைக்குச் சென்று வீடு திரும்பும் கணவனின் களைப்பைப் போக்க மனைவி உதவுகிறாள்; ஆனால் வீட்டிலேயே உழைத்து ஓய்ந்து போகும் மனைவியின் களைப்பை அவளாகவே போக்கிக் கொள்ள முயல்கிறாள். இதுதான் ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பங்களில் பெண்களின் நிலை.

வீட்டு வேலைகளை மட்டுமே செய்கின்ற பெண்களுக்கே இத்தகைய சுமை என்றால் கணவன்-மனைவி இருவருமே வேலைக்குச் செல்லும் குடும்பங்களில் பெண்களின் நிலை எப்படி இருக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள். கணவன்-மனைவி இருவருமே கூலி வேலைக்கோ அல்லது வயல் வேலைக்கோ அல்லது அலுவலக வேலைக்கோ செல்லும் குடும்பங்களில் காலை உணவையும் பகல் உணவையும் காலையில் மனைவிதான் சமைக்க வேண்டும். முடியாத சூழலில் பழையதை வைத்து பகல் பொழுது வரை சமாளித்து விடுவார்கள்.

வேலை முடிந்து இருவரும் மாலையில் வீடு திரும்பிய பிறகு கணவன் ஓய்வெடுக்கவோ அல்லது பொழுது போக்கவே சென்று விடுவான். ஆனால் மனைவியானவள் சமையல் வேலை செய்தாக வேண்டும். எட்டு மணி நேர வேலைக்குப் பிறகு எந்திரங்களுக்குக்கூட ஓய்வு தருகிறார்கள். வாராந்திர – மாதாந்திர பராமறிப்பின் போதும் ஓய்வு தருகிறார்கள். ஆனால் பெண்ணுக்கான ஓய்வோ மரணத்தோடு சேர்ந்தே வருகிறது.

அன்றாடம் உழைக்கும் இத்தகையப் பெண்களை மனையாள் என்றார்கள். பிறகுஹவுஸ் ஒய்ஃப்என ஆங்கிலத்தில் கௌரவமாகச் சொன்னார்கள். அதையே இப்பொழுதுஹோம் மேக்கர்என மெருகேற்றிச் சொல்கிறார்கள். பட்டங்கள்தான் மாறினவே ஒழிய பெண்ணானவள் வீட்டில் சும்மா இருப்பவள் என்கிற கருத்து மட்டும் இன்னமும் நீடிக்கிறது என்பதே உண்மை.

மேட்டுக் குடி பணக்காரக் குடும்பங்களில் சமைப்பதற்கும், வீட்டு வேலைகளுக்கும் சம்பளத்திற்கு ஆட்களை வைத்துக் கொள்வதால் அக்குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு மேற்கண்ட சுமை எதுவும் இருப்பதில்லை; அதனால் அந்தச் சுமையின் வலியை அவர்கள் உணர்வதற்கே வாய்ப்பில்லை.

ஆண்கள் செய்யும் வேலைகளை பெண்கள் செய்யும் போது மட்டுமே பெண்ணுக்கு பெருமை சேர்க்கின்றனர். இதற்கு கிரண் பேடிகளையும், கல்பனா சாவ்லாவையும் உதாரணம் காட்டுகின்றனர். ஆனால் ஆண்களால் செய்ய முடியாத அல்லது செய்ய இயலாத வேலைகளை பெண்கள் அன்றாடம் செய்தாலும் அதை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.

நடைபாதைக் கடை முதல் நட்சத்திர விடுதிகள் வரை ஆண்கள்தானே சமைக்கிறார்கள்; அதுவும் சுவையோடு சமைக்கிறார்களே! ஆண்களும் சமையலின் சுமையை உணரத்தானே செய்கிறார்கள் என்று பேசுவோரும் உண்டு. தொழில் ரீதியான இத்தகைய ஆண்களின் சமையல் அனுபவத்தை பெண்களின் குடும்பச் சுமையோடு ஒப்பிடவே முடியாது. இரண்டும் தன்மையில் வேறு வேறானவை.
  
பெண்கள் பற்றிய வரலாறோ வேறுவிதமாக இருக்கிறது. ஆண்கள் செய்யும் வேலைகள் மட்டுமல்ல ஆண்களால் செய்ய முடியாத வேலைகளில் பெண்களே முன்னிலை வகித்துள்ளனர்; வகிக்கின்றனர். இதை ஆண்களால் ஒருக்காலும் ஈடு செய்யவே முடியாது.

மானிடர்களின் காலம் தொடங்கியது தொட்டு, உலகின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையான சமுதாயத்திலும் எல்லா இடங்களிலும் எப்போதும் பெண்கள் இடைவிடாது தொடர்ச்சியாக பணியாற்றியுள்ளனர்இப்படித் தொடங்குகிறது ரோஸலிண்ட் மைல்ஸ் அவர்களின்பெண் என்ன செய்தாள்?”  என்கிற சிறு நூல்.

வரலாற்றில் எல்லா இடங்களிலும் பெண்கள் தமது குழந்தைகளைப் பராமரித்தனர். கால் நடைகளில் பால் கறந்தனர், வயல்களில் உழவு வேலை செய்தனர், துணிகளை வெளுத்தனர், ரொட்டி சுட்டனர், வீட்டைச் சுத்தம் செய்தனர், துணிகளைத் தைத்தனர், நோயுற்றவர்களைப் பராமரித்தனர், மரணப்படுக்கையிலிருந்தவர்களின் அருகில் அமர்ந்து கண்ணீர் வடித்தனர், இறந்தவர்களைப் புதைத்தனர்; பெண்களின் இந்த அரும் பணிகள் இன்றும் உலகில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன” 

பெண்களின் பணிகள் நின்று போனால் அடுப்பங்கரை மட்டுமல்ல இந்த அகிலமும் சேர்ந்தே இருண்டு போகும்.
  
முற்றும்.

தொடர்புடைய பதிவுகள்:
பெண் என்ன செய்தாள்? …………தொடர்-2
பெண் என்ன செய்தாள்? .........தொடர்-1

 விலை ரூ.25
வெளியீடு: நியூ சென்சுரி புக் ஹவுஸ்