Sunday, July 20, 2014

நாங்கல்லாம் கீரைக்கு மாறி ரொம்ப நாளாச்சு!

இன்று வாரச்சந்தை. பழமும் மீனும் வாங்கி வரலாம் என காலை 11 மணிக்கு சந்தைக்குச் சென்றேன். மீன் கடை காலியாக இருந்தது. நான் அவரது வாடிக்கையாளர் என்பதால் என்னைப் பார்த்ததுமே-  

"சார்! இன்னைக்கு மீன் சரியா வரல சார்!" என்றார். 

"சரி! அடுத்த வாரம் வாங்கிக்கிறேன்!" என்று சொல்லிவிட்டு தக்காளி வாங்கலாம் என வழக்கமாக தக்காளி வாங்குபவரிடம் சென்றேன். அவரிடம் வழக்கமாக இருப்பதைவிட சரக்கு மிகக் குறைவாக இருந்தது. தக்காளி கிலோ ஐந்து ரூபாய்க்கும் - பத்து ரூபாய்க்கும் விற்கும் போது விலை எல்லாம் கேட்பது கிடையாது. நேரே கடைக்குச் சென்று ஒரு கிலோ தக்காளியை வாங்கிக் கொண்டு அடுத்த பொருளை வாங்க வேறு கடைக்குச் சென்று விடுவேன்.

கடந்த பதினைந்து நாட்களாக தக்காளியின் விலை ஏறுமுகமாக இருப்பதாலும், தற்போது கிலோ 80 ரூபாய் வரை விற்பதாலும் 'தக்காளி வாங்கலாமா? வேண்டாமா?' என்கிற கேள்வி வேறு என்னுள் எழுந்தவாறே இருந்தது. சந்தையில் முதல் தர தக்காளியைக் காணமுடியவில்லை. நான் வழக்கமாக வாங்கும் கடைக்காரரிடமும் இரண்டாம் தர தக்காளிதான் இருந்தது. 

விலை கேட்டேன். "கிலோ 50 ரூபாய்" என்றார். வாங்குவதற்கு மனம் இடம் தரவில்லை. சாி! சந்தையை ஒரு சுற்று சுற்றிவிட்டு வரலாம், வேறு கடையில் 30 ரூபாய்க்கு கிடைக்கலாமில்லையா என்கிற  நப்பாசையில் வேறு சில கடைகளில் விசாரித்தேன். அங்கேயும் 50 ரூபாய்தான். மீண்டும் அவர் கடைக்கே வந்தேன். "எல்லா எடத்திலேயும் ஐம்பது ரூபாய்தான்" என்று அவர் முணு முணுத்தது சந்தையின் இரைச்சலில்கூட என் காதில் விழத்தான் செய்தது. பிறகு ஒரு கிலோ தக்காளியை வாங்கிக் கொண்டேன். வேறு கடைகளில் வாங்காமல் இவர் கடையிலேயே வாங்கியதற்குக் காரணம் எடை குறித்த நம்பிக்கைதான்.

இலவசமாக கருவேப்பிலை - கொத்தமல்லி வாங்கிய காலம் போய், பிறகு ஒரு ரூபாயாகி,  பிறகு மேலும் இரண்டு ரூபாயாகி, அதன் பிறகு ஐந்து ரூபாயாகி, தற்போது பத்து ரூபாயாகிவிட்டது.  கொத்தமல்லி - கருவேப்பிலை - இஞ்சி - பச்சை மிளகாய் - புதினா இவை ஐந்தையும் வாங்கினால் ரூபாய் ஐம்பது காலியாகிவிடும். வெங்காயம் இல்லாமல் சமைக்க முடியாதே. ஒரு கிலோ வெங்காயம் வாங்கினால் ஐம்பது ரூபாய் காலி. அடுத்து காய்கறிகள் வாங்கலாம் என்றால் கத்தரியிலிருந்து பாகற்காய்வரை எல்லாமே கிலோ ரூபாய் நாற்பதிலிருந்து ரூபாய் எண்பது வரை. காய்கறிகளுக்காக ஒதுக்கும் வாராந்திரத் தொகையோ 200 ரூபாய்தான். இந்த இருநூறை வைத்துக் கொண்டு என்ன வாங்குவது? என்ன சமைப்பது? ஒன்றும் விளங்கவில்லை. குழப்பம்தான் மிஞ்சியது.

'ஒண்ணும் வேணாம் வா!. வீட்ல வெரமிளகாய் இருக்கு. முட்டை வாங்கிக்கலாம். அரைக்கீரை, மொளக்கீரை, சிறுகீரை, மணத்தக்காளிக் கீரை, புளிச்சக்கீரை  என ஒவ்வொன்றிலும் ஒரு கட்டு வாங்கினால்கூட  கட்டு பத்து ரூபாய் என்றாலும் ஐம்பது ரூபாய்க்குள் முடிந்துவிடும். ஒரு டசன் முட்டை வாங்கினால் ஒரு ஐம்பது ரூபாய். ஒரு வாரத்தை சமாளித்துவிடலாம்!' என சென்ற வார சந்தையில் இரு பெண்மணிகள் பேசிக்கொண்டதாக எனது துணைவியார் சொன்னதுதான் என் நினைவுக்கு வந்தது. 

ஏற்கனவே வீட்டில் கீரைகள் இருப்பதால் அதை வைத்தே சமாளித்துக் கொள்ளலாம் என்பதால் ஏதாவது ஒரு பழம் மட்டும் வாங்கலாம் என யோசித்து 'கொய்யா சாப்பிட்டால் மலச்சிக்கலுக்கு நல்லது' என பலரும் சொல்வதால் அரை கிலோ கொய்யாவை வாங்கி பையில் வைப்பதற்கள் "கொய்யா வெல அதிகம். அரை கிலோ முப்பது ரூபாய்!" என்றார் கடைக்கார பெண்மணி. எடை நாணயம் கருதி இவரிடமும் நான் விலை கேட்பது கிடையாது. 

"என்ன ஏதாவது திருவிழா வருதா?" என்று கேட்டேன். 

"ஆமா! கிருத்திகை வருதே!" என்றார். கஷ்ட காலம் என்றால் 'அப்பா! முருகா!' என்பார்கள் பக்தர்கள். விக்கிற வெலவாசி கஷ்டத்துல கொய்யா வாங்கலாம் என்றால் 'இப்ப அந்த முருகனே கஷ்டத்தைக் கொடுக்கிறானே!' என எண்ணிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

கீரைகளை அதிகம் சாப்பிடுங்கள் உடம்புக்கு நல்லது என இனி மருத்துவர்கள் அறிவுரை கூற வேண்டியதில்லை. நாங்கல்லாம் கீரைக்கு மாறி ரொம்ப நாளாச்சு!

Saturday, July 19, 2014

நெருப்பைக் கக்கும் டிராகன்களை நேரில் பார்க்க வேண்டுமா?

முசோலினி மற்றும் ஹிட்லரை பாசிஸ்டுகள் என்று சொன்னபோது அது நமக்கு விளங்கவில்லை. ஆனால் ஈழத்தமிழர்களை கொன்றொழித்த ராசபக்சேவை பாசிஸ்ட் என்று சொன்ன போதுதான் பாசிஸ்ட் என்றால் என்ன என்பதை நம்மால் மிக எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது. 

தொடர் வண்டிக் கட்டணம் பெட்ரோல்-டீசல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, தமிழக மீனவர்கள் மற்றும் ஈழத்தமிழர்கள் குறித்த பிரச்சனைகளில் பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடுகள் பற்றிய விவாதங்களில் ஊடகவியலாளர்களும் மாற்றுக்கட்சியினரும் எழுப்பிய கேள்விகளுக்கு பதில சொல்ல முடியாமல் மூஞ்சி தொங்கிப்போன சங்பரிவாரத் தலைவர்கள், தற்போது சமூக வலைதளங்களில் இந்தி மொழியைப் பயன்படுத்த நடுவண் அரசு பிறப்பித்த உத்தரவு மற்றும் சி.பி.எஸ்.சி பள்ளிகளில் சமசுகிருத வாரம் கொண்டாட அரசு சுற்றறிக்கை அனுப்பியது குறித்த விவாதங்களில் பங்கேற்கும் எதிர் அணியினரை பயங்கர வெறிகொண்டு மூர்க்கத்தனத்தோடு எதிர்க்கின்றனர்.

18.07.2014 அன்று தந்தி தொலைக்காட்சியில் நடைபெற்ற விவதாதத்தின் போது பாரதிய ஜனதாகட்சியைச் சேர்ந்த ராசா என்பவர் கடுஞ் சீற்றத்துடன் "இந்தியை எதிர்ப்பவன் தேசத்துரோகி" என தனது தோழமைக்கட்சியான ம.தி.மு.க வின் அந்திரிதாசு மீது  பாய்ந்த காட்சியைப் பார்த்தபோது  எனக்கு சற்றே நடுக்கம் ஏற்பட்டது. நல்ல வேளை. விவாதம் அந்த நேரத்தில் முடியும் தருவாயில் இருந்ததால் அந்திரிதாசு தப்பித்தார்.

அதோபோல இந்தியாவில் இனி ஒருவன் தன்னை தமிழன் என்றோ, தெலுங்கன் என்றோ, மலையாளி என்றோ, மராட்டியன் என்றோ, காசுமீரி என்றோ, வங்காளி என்றோ சொல்லிக் கொள்ளக்கூடாது. அப்படி எந்த ஒரு இனமும் இந்தியாவில் கிடையாது. இந்தியாவில் இருப்பது ஒரே இனம்தான். அது இந்தியன் என்கிற இனம் மட்டுமே. இதற்கு எதிராக எவன் பேசினாலும் அவனும் தேசத்துரோகிதான் என்பதுதான் சங்பரிவாரத் தலைவர்களின் இனம் குறித்த முடிவு.

நெருப்பைக் கக்கும் டிராகனை நான் நேரில் பார்த்ததில்லை. இனி அந்தக் குறை எனக்கு இல்லை. தொலைக்காட்சி ஊடகங்களில் நடைபெறும் விவாதங்களில் பங்கேற்கும் சங்பரிவாரத் தலைவர்களைப் பார்த்தாலே போதும். 

Thursday, July 17, 2014

கிரேதா யுகம் நிச்சயம் வரும்! இந்தியாவும் வல்லரசாகும்!

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்துவதில் தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் இடையில் உள்ள பிணக்கு தீர்ந்த பாடில்லை.

காவிரி நதி நீர்ப் பங்கீடு பிரச்சனையில் தமிழ்நாட்டிற்கும் கர்நாடகத்திற்கும் இடையிலான சச்சரவு முடிவுக்கு வந்தபாடில்லை.

பாலாற்றின் குறுக்கே ஆந்திரம் அணை கட்ட முயற்சிப்பதால் தமிழ்நாட்டிற்கும் ஆந்திரத்திற்குமிடையே பிரச்சனை.

நதி நீர்ப் பங்கீட்டில் பல்வேறு மாநிலங்களுக்கிடையில் பிரச்சனை.

பிழைப்பு தேடி வட இந்தியர்கள் தமிழகம் நோக்கி படை எடுப்பதால் தமிழர்களுக்கும் வட இந்தியர்களுக்குமிடையே பிரச்சனை.

வட இந்தியாவிலேயே பிகாரிகளுக்கும் மராட்டியர்களுக்குமிடையே பிரச்சனை.

காசுமீரத்துக்கும்  இந்தியாவிற்குமிடையே பிரச்சனை.

வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கும் இந்தியாவிற்குமிடையே பிரச்சனை.

இந்துக்களுக்கும் இசுலாமியர்களுக்குமிடையெ பிரச்சனை.

தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிற உயர் சாதிக்காரர்களுக்குமிடையே பிரச்சனை.

பார்ப்பனர்களுக்கும் பிற சாதிக்கார்களுக்குமிடையே பிரச்சனை.

இப்படி திரும்பும் இடமெல்லாம் இந்தியவெங்கும் பிரச்சனை! பிரச்சனை!!

இப்பொழுது காங்கிரசு குப்பைத் தொட்டியில் வீசப்பட்டுவிட்டது. இனி யாரும் கவலைப்பட வேண்டாம். குறிப்பாக தமிழர்கள் காவிரி பிரச்சனை குறித்தோ அல்லது முல்லைப் பெரியாறு பற்றியோ அல்லது பாலாறு பிரச்சனை பற்றியோ கவலைப்பட வேண்டாம் என சங்பரிவாரத்தலைவர்கள் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்

மேலும் தமிழக மக்கள் தங்களுடைய பிள்ளைகளை மத்தியப் பள்ளிக் கல்வி வாரியத்தின் (CBSE) கீழ் செயல்படும் பள்ளிகளில் மட்டுமே சேர்க்குமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இத்தகைய பள்ளிகளில் இடம் கிடைக்கவில்லை என்றால் கவலைப்படாமல் தங்களின் பிள்ளைகளை "அம்மா” வழங்கிய விலையில்லா ஆடு-மாடுகளை மேய்க்க அனுப்பி வைத்தாலே போதும். பிள்ளைகள் படிக்கவில்லை என்றாலும் பாண்டவர்கள் வனவாசத்தில் வாசம் செய்ததைப்போல இந்தப் பிள்ளைகளும் ஆடு-மாடுகளை  மேய்த்துக் கொண்டே வனத்திலேயே வாசம் செய்து சுதந்திரமாய் சஞ்சரிக்கலாம். வனத்தில் கிடைக்கும் கனிகளையும் கிழங்குகளையும் உண்டு வாழலாம்.

அதே நேரத்தில் மத்தியப் பள்ளிக் கல்வி வாரியத்தின் (CBSE) கீழ் செயல்படும் பள்ளிகளில் இடம் கிடைத்த பிள்ளைகளோ ஆண்டு தோறும் ஆகஸ்டு மாதத்தில் நடைபெறும் சமசுகிருத வாரக் கொண்டாட்டங்களில் பங்கேற்று தேசிய ஒருப்பாடு பற்றிய விழிப்புணர்வைப் பெறுவார்கள்தேசிய ஒருப்பாடு பற்றிய விழிப்புணர்வைப் பெறுகிற அதே வேளையில் அவர்கள் சமசுகிருதத்தில் புலமையும் பெறுவார்கள். இப்படி அவர்கள் சமசுகிருதத்தில் புலமை பெற்றுவிட்டால் தேசிய ஒருமைப்பாடு பற்றிய உணர்வு அவர்களின் குருதியில் ஊறிவிடும்

தேசிய ஒருமைப்பாடு பற்றிய விழிப்புணர்வு ஒன்று மட்டுமே இந்தியாவைப் பீடித்திருக்கும் நதிநீர்ப் பிரச்சனை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்க வழிவகுக்கும். மற்றபடி இந்தப் பிரச்சகைளைத் தீர்க்க வேறு குறுக்கு வழிகள் கிடையாது.

அப்பொழுது நாடு அமைதிப் பூங்காவாக மாறியிருக்கும். அதன்பிறகு காடுகளுக்குச் சென்று வனவாசம் மேற்கொண்ட பிற பிள்ளைகள் ஊருக்குத் திரும்பி அமைதியான முறையில் தங்கள் மாடுகளை சமவெளிப் பிரதேசங்களில் மேய்த்துக் கொள்ளலாம். அம்மா கொடுத்த மாடுகள் எல்லாம் கோமாதாக்களாக அவதாரமெடுத்திருக்கும்.

கன்றுக்கு இல்லை என்றாலும் கோமாதாக்களின் பாலை ஒட்டக் கறந்து மத்தியப் பள்ளிக் கல்வி வாரியத்தின் (CBSE) கீழ் செயல்படும் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்குக் கொடுத்து வந்தால் அவர்கள் கோமாதாக்களின் பாலைக் குடித்து தயிரும் நெய்யும் உண்டு கொழுகொழுவென வளர்வார்கள். அவர்களின் உடலும் வனப்பு பெறும்; மூளையும் விருத்தியடையும். இறுதியில் அவர்களின் அறிவுக்கூர்மையாலும் பிறரை எளிதாகக் கையாளும் ஆற்றலாலும் இந்தியாவின் தேசிய ஒருமைப்பாடு நிலைநாட்டப்பட்டு அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும். பிறகு வளர்ச்சிப் பாதையில் இந்தியா முன்னேறும். அப்பொழுது இந்தியா வல்லரசாவதை எந்தக் கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது.

பாண்டவர்களைப் போல பதின்மூன்று ஆண்டு காலத்திற்குள் முடிந்து விடுவதற்கு இது ஒன்றும் கிரேதா யுகம் அல்லஇது கலியுகம். நூற்றுமுப்பது ஆண்டுகள்கூட ஆகலாம். பொருத்தவன்தானே பூமி ஆள்வான். என்ன அவசரம்! பொருத்திருப்போம். கிரேதா யுகம் நிச்சயம் வரும். இந்தியாவும் வல்லரசாகும்.

தொடர்புடைய பதிவுகள்:

கோவணம்!

Wednesday, July 16, 2014

பேஷா பேஷராறு ராகவன்!

சமூக வலைதளங்களில் இந்தியை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என அன்மையில் நடுவண் அரசு பிரப்பித்த ஆணை மற்றும் அதையொட்டி தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பு பற்றி தொலைக்காட்சி ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது.

அத்தகைய விவாதங்களில் பங்கேற்ற பா.ஜ.க வின் ராகவன் அவர்கள் ஆங்கிலத்தின் மீது கடும் சினம் கொண்டு பேஷினார். ஆங்கிலம் தனக்கு அந்நிய பாஷை என்றும் அது தனக்குத் தேவையில்லை எனவும் பொறிந்து தள்ளினார்.

பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயீத் - பத்திரிக்கையாளர் வேத பிரதாப் வைதிக் சந்திப்பு பற்றிய பிரச்சனை குறித்து இன்று (16.07.2014) தந்தி தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு நடைபெற்ற விவாதத்தில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஹரிஹரன் மற்றும் சி.பி.எம்.மின் குமரேசன், காங்கிரசின் அமெரிக்கை நாராயணன் ஆகியோருடன் ஷொன்னீங்க, பேஷரது, பிரஷ்னை, கேழ்ப்பது, விஷயம், ஷொல்ரது என தமிழில் ரொம்ப பேஷாகப் பேஷினார்  திருவாளர் ராகவன் அவர்கள். அன்று ஆங்கிலத்தின் மீது பொறிந்து தள்ளிய அதே ராகவனுக்கு இன்று parliament, issue, devil, certificate, select, selection, government, consideration, right, intelligence bureau, advice போன்ற அந்நியனின் ஆங்கில ஷொற்கள் தமிழை இணைக்கும் இணைப்பு ஷொற்களாக இருந்தது ஏனோ?

Monday, July 14, 2014

“ஐயா”வை அசிங்கப்படுத்தும் ‘அய்யா’க்கள்!

வால் நெருப்பைக் கொண்டே இராவணனின் லங்காவையே பொசுக்கிய வானரக்கூட்டதிற்கு ராஜபக்சேவெல்லாம்  சும்மா ஜுஜுபி என நேற்றுவரை கூப்பாடு போட்ட ‘அய்யா’வுக்கு இன்று திடீர் நெஞ்சுவலியாம்.

‘அய்யா’வின் நெஞ்சு வலிக்கான காரணத்தைக் கண்டறிய முடியாமல் மருத்துவர்கள் திணறி வருகிறார்களாம். ‘அய்யா’வை குணப்படுத்துவது ஒரு சவாலான வேலை என்பதால் ஒரு தனி அறையில் மருத்துவக் குழாம் மிகத்தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருந்த போது

“இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக்கு இந்தியா ஆதரவளிக்காது” என இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சொன்னதைக் கேட்டதனால் ஏற்பட்ட அதிர்ச்சிதான் ‘அய்யா’வின் நெஞ்சுவலிக்குக் காரணம் என அசரீரி ஒலித்ததாம். 

இதற்கெல்லாம் எப்படி மருத்துவம் பார்ப்பது என்கிற குழப்பத்தில் மருத்துவர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்களாம். இதைக்கண்ட பாட்டாளிச் சொந்தங்கள் ‘அய்யா’வுக்குத் தைலம் தெளிக்க தயாராகிவிட்டதாகக் கேள்வி!

பொருள் பொதிந்த “ஐயா”வை பொருளற்ற ‘அய்யா’க்கள் அசிங்கப்படுத்தியது போதும்!

-------------------------------------------------------

தொடர்புடைய பதிவுகள்:

கோவணம்!



Saturday, July 5, 2014

கோவணம்!

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி உறையூர் நாச்சியார் கோவில் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் நடுத்தர வயது ‘இளைஞன்’ ஒருவன் கர்ஜித்துக் கொண்டிருந்தான். அவன் அண்ணாவைப் புகழ்ந்த போது சிறந்த சொற்பொழிவாளனாக - நெப்போலியனின் வீரத்தைப் புகழ்ந்த போது  தமிழர்களை உய்விக்க வந்த வீரனாக - ஷேக்ஸ்பியரின் மேற்கோள்களை அள்ளித் தெளித்த போது ஒரு சிறந்த இலக்கியவாதியாக - பலருக்கும் தோன்றியிருக்கக் கூடும். அவன் கட்டியிருந்த எடுப்பான கரை வேட்டியும், அணிந்திருந்த வெள்ளைச் சட்டையும், தோளில் நீண்டு தொங்கிய கருப்புத் துண்டும் அவனை ஒரு அரசியல்வாதியாக காட்டியதைவிட வருங்கால தமிழகத்தின் அடையாளம் இவன்தான் என பலரும் கருதும் வண்ணம் இருந்தன.

இருபது ஆண்டு காலம் அய்யனின் தயவில் டெல்லியிலே சிங்கமென கர்ஜனை செய்தவன் இனிமேலும் அய்யனிடம் அண்டியிருக்க வாய்ப்பில்லை என்பதால் தனக்கான கூட்டத்தைத் தேடி பம்பரமாய் சுழலத் தொடங்கிய காலம் அது. மேடைகளில் அல்லேலூயாக்களின் நடிப்பை விஞ்சும் ஆற்றல் கொண்டவன் இவன். இந்த ஆற்றலே இவனை நோக்கி இளைஞர்களை ஈர்க்க வைத்தது.

நானும் அப்பொழுது இளைஞன்தான். ஆனால் ஏனோ அவனது ஆற்றல் என்னை ஈர்க்கவில்லை. மாறாக அவனது உடையும், மேடையில் அவன் வெளிப்படுத்திய உடல் மொழியும் (மேனரிசம்), அவனது பேச்சின் தொனியும் ஒரு நாடக நடிகனைத்தான் எனக்கு நினைவூட்டின.

காலங்கள் உருண்டோடின. நான் உறையூரில் உணர்ந்ததையே பிற்காலத்தில் மற்றவர்களும் உணரத் தொடங்கியிருக்கக்கூடும். அதனால்தானோ என்னவோ கூடாராம் காலியாவதும் காலியான இடத்தை நிரப்ப அவ்வப்பொழுது நாடகத்தின் வசனங்களை மாற்றுவதும் அவனுக்கு வாடிக்கை ஆகிவிட்டது.

இவன் வாழும் பூமியோ கடலை ஒட்டிய கரிசல் காடு. இந்தக் கடலை நம்பி ஏராளமான மீனவர்கள் வாழ்ந்து வந்தனர். வலைகளை உலர்த்தவும் இளைப்பாறவும் இந்தக்கடலில் இருந்த ஒரு சிறு தீவு இவர்களுக்கு பெரிதும் உதவியது. ஆனால் அது தற்போது அண்டை நாட்டுக்காரன் வசமாகிவிட்டதால் மீனவர்கள் மீளாத்துயரில் ஆழ்ந்தனர்.

மக்களின் பிரச்சனைகள் சிக்கலானால் சினிமாக்காரன் அதை கதையாக்கி காசாக்கிக் கொள்வான். அரசியல் நடிகன் என்றால் அதையே பதவிக்கான படிக்கல்லாக மாற்றிக் கொள்வான். அதனால்தான் இவனும் அந்தத் தீவை மீட்காமல் ஓயமாட்டேன் என தொடர்ந்து கர்ஜித்தான்.

அதே போல சேதுக்கால்வாய் திட்டம் வந்தால் இனி தென் தமிழகமே தொழில் பூங்காவாய் பூத்துக் குலுங்கும் என்றான். சேதுக்கால்வாய்க்காக அவன் வீரிட்டபோது இராமன் பாலத்தில்கூட விரிசல் ஏற்பட்டது. கால்வாயை வெட்டாமல் இனி உறங்குவதில்லை என சேதுகால்வாய்க்காக ஊர் ஊராய் மேடையேறி வீரவசனம் பேசினான்.

இவனது வசனங்கள் வெற்றுக் கோஷங்களாய் மேடையோடு முடங்கிப் போயின. டெல்லிக் கோட்டைக்குச் செல்ல பயணச் சீட்டு என்னவோ வந்த பாடில்லை.

மீண்டும் வசனம் மாறியது. மது அரக்கனை ஒழித்துக்கட்ட குமரி முதல் சென்னை வரை நடையாய் நடந்தான். அப்படி நடந்த போது அசதி அவனை வாட்டியது. கண்கள் மருக மயங்கி விழும் நிலையில் முந்தானையின் ஈரம் முகத்தில் பட்டு கண்விழித்தான். எதிரே வந்து நின்ற ஒரு அம்மணியைக் கண்டு ஆனந்தம் அடைந்தான். முன்பு ஒரு முறை இந்த அம்மணி தன்னை காராகிரகத்தில் பிடித்துத் தள்ளியிருந்தாலும் தற்போது தன் நெஞ்சில் ஈரத்தை வார்த்ததால் அந்த அம்மணியை நன்றி உணர்வோடு பார்த்து விட்டு நடை பயணத்தைத் தொடர்ந்தான். சென்னையை நெருங்கியபோது திரும்பிப் பார்த்தான். இவனோடு வந்த சிலர் அந்த அம்மணியின் முந்தானையை பிடித்துக் கொண்டே எதிர் திசையில் சென்றுவிட மற்றவர்களோ சாலை ஓர மரநிழலிலேயே தங்கிவிட இவன் மட்டும் நிற்கதியாய் விடப்பட்டதைக் கண்டு துவண்டு போனான்.

வயதில் எழுபதை நெருங்கினாலும் தான் ஒரு இளைஞன் என்பதை அவ்வப் பொழுது நிரூபிக்க முயன்றான். அதற்காக முண்டா பனியன் - அரை டிரவுசரோடு வாலிபாலும் விளையாடிப் பார்த்தான். ஆனால் காற்றடித்த பந்தைக்கூட எதிர் கொள்ள முடியாமல் குப்புற விழுந்தான். தட்டுத் தடுமாறி மீண்டும் எழுந்தான்.

மேடை கிட்டிய போதெல்லாம் கருப்புத் துண்டை வலது தோளுக்கும் இடது தோளுக்குமாய் மாற்றி மாற்றி இழுத்து விடும் போது அது நமக்கு முதுகு அரிப்பைச் சொரியும் ஏற்பாடாய்த் தோன்றினாலும் அவனுக்கு அது பழக்கமாகிவிட்டது. இன்னும் எத்தனைக் காலம்தான தோள் துண்டை இழுத்துக் கொண்டிருப்பது என எண்ணத் தொடங்கினான். வயது மட்டுமல்லாமல் அரசியல் வாழ்வும் வயோதிகத்தை தொட்டுவிட்டதோ என அஞ்சினான். கால் போன போக்கிலே வாட்டத்துடன் செல்லத் தொடங்கினான்.

அவன் ஒரு கானகத்தை நெருங்கியபோது மலையிலிருந்து அருவி கொட்டும் சத்தம் கேட்டு அதை நோக்கி நடந்தான். தாரை தாரையாய் கொட்டும் அருவியைக் கண்டு மயங்கினான். கொட்டிய தாரைகள் அனைத்தும் நேர்த்தியாகக் கோர்க்கப்பட்ட மணி மாலையாய் இவனது கண்களுக்குத் தோன்றின. அருவி ஓடிய பாதையில் இவனும் ஓடினான். அந்த அருவி ஒரு தாமரை தடாகத்தில் சங்கமித்தது.

ரிஷிகளும் முனிவர்களும் அங்கே நீராடிக் கொண்டிருந்தனர். சில முனிவர்கள் அம்மணமாகவும், ஒரு சில ரிஷிகள் காவி கோவணத்தோடும் காட்சி அளித்தனர். மற்ற சிலரோ கோட்டு சூட்டு அணிந்தும், பைஜாமா குர்தாவோடும் இருந்தனர். இவர்கள் வேறு வேறு உடைகளில் இருந்தாலும் இவர்களின் முகம் மட்டும் நரமாமிசம் உண்ணும் கழுகுகளையே நினைவு படுத்தின. தாமரைத் தடாகம்கூட குருதி கலந்து காவியாய் காட்சியளித்தது.

அந்தத் தடாகமே பார்ப்பதற்கு அச்சமூட்டுவதாகத் தோன்றியது. தடாகத்தில் இறங்கத் தயங்கினான். “இது புனித அருவி நீர்! தடாகத்தில் இறங்கி முங்கினால் இளமை திரும்பும்! மறுமலர்ச்சி அடைவாய் நீ!” என இரு கரம் நீட்டி அழைத்தான் பைஜாமா குர்தாவோடு இருந்த ஒரு தாடிக்காரன்.

தாடிக்காரன் அழைத்த பாங்கில் இவன் கிரங்கிப் போனான். தோளில் தொங்கிய கருப்புத் துண்டை தூக்கி எறிந்தான். அது மீண்டும் எடுக்க முடியாத அளவுக்கு தூர இருந்த 'சங்கி' முள்ளில் சிக்கிக் கொண்டது. சட்டை – பனியனையும், வேட்டியையும் உருவி கரையில் எறிந்தான். கோவணத்தோடு தாமரை தடாகத்தில் குதித்தான். தாமரைத் தடாக நீரில் நீந்தி மகிழ்ந்தான். தடாக நீரில் ரத்த வாடை வீசினாலும் அது அவனுக்கு புது ரத்தம் பாய்ச்சுவதாகவே கருதினான். இளமை திரும்பி கட்டிளம் காளைாகி விட்டதாகக் கருதி உற்சாக மிகுதியில் குதூகலித்தான்.

குதூகலம் இவனை மீண்டும் கர்ஜிக்க வைத்தது. இவன் கர்ஜனையைக் கண்ட காவிக்கூட்டமும் உற்சாகத்தால் கூத்தாடியது. ‘ஆகா! நமக்கு பெருங்கூட்டம் சேர்ந்துவிட்டது’ என நம்பி சேதுக்கால்வாயைப் பற்றி கர்ஜிக்க வாயைத் திறந்த போது “உஷ்!” என வாயை மூடினான் தாடிக்காரன். “கடல் தீவுக்குப் போவோம்!” என கர்ஜித்த போது அதற்கு தாடிக்காரனும் புன்னகைத்து தலையசைத்தான். இது ஒன்றே போதும். “யாருக்குத் தேவை சேதுக் கால்வாய்! இனி அது உதவாது!” என புது வியாக்கியானம் கொடுத்து அந்தர் பல்டி அடித்தான்.

‘கடல் தீவுக்குப் போவோம்!’ என இவன் செய்த கர்ஜனை மலை முகடுகளில் முட்டி மோதி தமிழகமெங்கும் எதிரொலித்தது. “வெற்றி நமதே!” இனி டெல்லிக்குச் செல்ல பணச்சீட்டு உறுதி  என எண்ணி கோவணத்தோடு கரையேறி கழற்றி எறிந்த உடைகளைத் தேடினான். முள்ளில் சிக்கிய கருப்புத் துண்டு சுக்கு நூறாகி எடுக்க முடியாமல் நைய்ந்து போயிருந்தது. வேட்டி சட்டையைத் தேடினான். காணவில்லை. அவை ஏற்கனவே அருவியில் அடித்து செல்லப்பட்டதை அப்பொழுதுதான் உணர்ந்தான்.

கோவணத்தோடு கரிசல் காட்டுக்குச் சென்றால் மக்கள் காரிதுப்புவார்களே எனக்கருதினானோ என்னவோ அருவியின் போக்கில் சென்றால் வேட்டி சட்டை கிடைத்துவிடும் என நம்பி அதன் போக்கிலேயே சென்றான். உடை மட்டும் கிடைக்கவில்லை. மேலும் சென்று பார்க்கலாம் என முயன்றபோது அவன் கடலுக்குள் வெகு தூரம் வந்து விட்டதை உணர்ந்தான்.

அதற்குள் ஒருமாத காலம் உருண்டோடி விட்டது. இவனது டெல்லி பயணத்திற்கும் பயணச்சீட்டு கிடைக்கவில்லை. இப்போது இவன் இருப்பதோ நடுக்கடலில். இனி எந்தப் பக்கம் செல்வது எனப் புரியவில்லை. சற்று தூரத்தில் ஒரு தீவு தெரிந்தது. அந்தத் தீவுதான் ஏற்கனவே அண்டை நாட்டுக்காரன் வசமாகியிருந்த தீவு. அதை நோக்கி நீந்தத் தொடங்கினான்.

“ஏய்! யாரப்பா நீ? அங்கே எல்லாம் போகக்கூடாது” என்ற குரல் கேட்டு தலையை உயர்த்திப் பார்த்தான். எதிரே ஒரு படகில் தாமரை தடாகத்தில் பார்த்த அதே தாடிக்காரன் நின்றிருந்தான். தாடிக்காரன் கையில் இப்பொழுது செங்கோல் மின்னியது.

“அய்யா! நான் மிகவும் களைத்துப் போயிருக்கிறேன். தண்ணீரிலேயே தத்தளிப்பதால் உடல் ஜில்லிட்டுப் போயிக்கிறது. அந்தத்தீவு பக்கத்தில்தானே இருக்கிறது. அங்கே சென்று இளைப்பாறுவதற்கு உங்களது தயவு தேவை. நீங்களும் சற்று உடன் வாருங்களேன்! தடாகத்தில் நீராடியபோது அங்கே போவதற்கு நீங்கள்கூட தலையசைத்தீர்களே!” என்றான்.

ஆனாலும் தாடிக்காரன் இவனது பேச்சைக் கேட்பதாகத் தெரியவில்லை. தாடிக்காரனின் பேச்சை மீறிச் செல்லவும் இவனுக்கு துணிச்சல் இல்லை. மிகுந்த மனவேதனையோடு மீண்டும் வந்த வழியே நீந்தி கரை சேர்ந்தான். தாமரை தடாகத்தில் இறங்கியதால் உடைகளைப் பறிகொடுத்து கோவணத்தோடு இருந்த இவனது நிலையைக் கண்டு மக்கள் காரி துப்பினர்.

”தோளில் தொங்கிய துண்டும் போச்சு. வேட்டி சட்டையும் போச்சு. கோவணத்தோடு இனி எப்படி மற்றவர்கள் முகத்தில் முழிப்பது!” என மனம் நொந்து போய் ஒரு புளிய மரத்து நிழலில் ஒதுங்கினான். அந்த அம்மணி அருகில் இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்குமா என ஒரு கணம் எண்ணிப்பார்த்தான். ‘அதற்கெல்லாம் இனி வாய்ப்பில்லை. காலம் கடந்து விட்டது. இனி வாழ்வதில் அர்த்தமில்லை’ என முடிவெடுத்து கோவணத்தின் ஒரு முனையில் சுருக்கு முடிச்சுப் போட்டு அதை கழுத்தில் மாட்டிக் கொண்டு மறுமுனையை மரக்கிளையின் மீது வீசினான்.

தொடர்புடைய பதிவுகள்: