Monday, February 16, 2015

குலநாசம் ஓங்கட்டும்!

“ஸ்ரீகிருஷ்ணா! கௌரவர்களைக் கொன்றுவிட்டால் குலநாசமாகிவிடும்; குலநாசம் ஏற்பட்டால் அதர்மம் பெருகும்; குலப்பெண்கள் நடத்தை கெட்டுப் போவார்கள்; பெண்கள் நடத்தைக் கெட்டுப் போனால் வர்ணக் கலப்பு உண்டாகிவிடும்; வர்ணக் கலப்பு குலத்தை நரகத்திற்கே அழைத்துச் செல்லக்கூடியது; வர்ணக் கலப்பால் சாதி தர்மங்கள் அழிந்து விடும்; குலதர்மங்கள் அழிந்துவிட்டால் நரகவாசம் ஏற்படும்; அதனால் போர் வேண்டாம்!”

என கண்ணனைப் பார்த்துக் கூறிவிட்டு அம்புகளுடன் வில்லை எறிந்துவிட்டு உட்கார்ந்துவிட்டான் அர்ச்சுனன். (பகவத்கீதை 1:37-47).

அதாவது போரில் ஆண்கள் மாண்டு போனால் பெண்கள் கண்டவனோடெல்லாம் கள்ள உறவு வைத்துக் கொள்வார்கள். கள்ள உறவில் பிள்ளைகள் பிறந்துவிட்டால் சாதிக் கலப்பு ஏற்பட்டு சாதி தர்மம் அழிந்து விடும் என்பதே அர்ச்சுனனின் கவலை. அர்ச்சுனன் சத்திரியன் அல்லவா!

சாதி தர்மத்தைக் காப்பதற்காக மிகக் கீழ்நிலையில் உள்ள சூத்திரன் தன்சாதிப் பெண்களை மட்டுமே மனைவியாக்கிக் கொள்ளலாமேயொழிய உயர்ந்த சாதிப் பெண்களை மனைவியாக்கிக் கொள்ளக் கூடாது (மனு:9:157) என்றும், நான்கு வர்ணசாதிகளும் தன் தன் சாதிகளுக்குள்ளேயே மணம் முடிக்க வேண்டும் (மனு: 10:5) எனவும்  விதி வகுத்து வைத்தான் மனு.

என்னதான் விதி வகுத்து வைத்தாலும் வர்ணக் கலப்பை மனுவால் தடுக்க முடியவில்லை.

அதனால்தான் நான்கு வர்ணங்களுக்கிடையில் கலப்பு மணம் புரிந்தவர்களுக்குப் (காதல் இன்றி கலப்பு மணம் ஏது!) பிறந்த வாரிசுகளை அனுலோம சாதி, பிரதிலோம சாதி, அந்தராள சாதி, விராத்திய சாதி, பாகிய சாதி எனச் சாதிகளாகப் பகுத்து இவைகளுக்குள் அம்பட்டன், மீனவன், தச்சன், ஒட்டன் உள்ளிட்ட பல்வேறு சாதிப் பிரிவுகளாக மக்களை அடையாளப்படுத்தி அந்தந்த சாதிகளுக்கான தொழிலையும், அவரவர்களுக்கான தர்மங்களையும், வசிக்க வேண்டி இடங்களையும் தீர்மானித்து அதையும் விதியாக்கினான் அனு. (மனு:10:1-131).

பிராமணன், சத்திரியன், வைசியன் உள்ளிட்ட மேல் சாதிப் பெண்களை கீழ்சாதி சூத்திரன் மணம் முடிக்கக்கூடாது என்றான் அன்றைய மனுவாதி.

பார்ப்பனன், முதலியான், பிள்ளையான், கவுண்டன், நாயுடு, ரெட்டி, செட்டி, வன்னியன், கள்ளன், தேவன், நாடான், முத்தரையன், கோனான் உள்ளிட்ட உயர்சாதி வீட்டுப் பெண்களை கீழ்சாதி தாழ்த்தப்பட்டவன் மணம் முடிக்கக் கூடாது என்கின்றனர் இன்றைய மனுவாதிகள்.

அன்று அர்ச்சுனன் பெயரால்  வர்ண சாதிக் கலப்பை தடுப்பதன் மூலம் வர்ண சாதி கௌரவத்தைக் காக்க முயன்றான் மனு.  

இன்று அதே கவலையோடு காதலர் தின எதிர்ப்பு என்ற போர்வையில் காதலை எதிர்ப்பதன் மூலம் சாதிக் கலப்பை தடுத்து தன் தன் சாதிக் கௌரவத்தைக் காக்க மனுவின் வழியில் முயல்கின்றனர் இன்றைய மனுவாதிகள்.

காதலுக்கு எதிராக - சாதிக் கலப்பிற்கு எதிராக இரண்டாயிரம் ஆண்டுகளாக கூச்சல் போடும் மனுவாதிகள் சாதிக் கௌரவத்தைக் காத்தார்களா இல்லை சாதிக் கௌரவம் இவர்களை சந்தி சிரிக்க வைத்ததா என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம். 

No comments:

Post a Comment