Thursday, December 31, 2015

எனது புத்தாண்டு கோரிக்கையை ஆதரிப்போர் மட்டும் வாழ்த்து கூறலாம்!

இந்து மதத்தில் நான்கு வர்ணங்களும் பல்வேறு சாதிப்பிரிவுகளும் இருந்தாலும் இந்த மொத்தப்பிரிவு மக்களும் உயர்சாதியினர் தீண்டத்தக்கவர்களாகவும், தாழ்த்தப்பட்டவர்கள் தீண்டத்தகாதவர்களாகவும் இரு பிரிவுகளாகப் பகுப்படுகின்றனர்.

இந்தியாவின் மிகப் பெரிய சாபக்கேடு இந்து மதமும் அதன் உயிர்மூச்சான தீண்டாமையும்தான் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. உயர்சாதியினரால் தாழ்த்தப்பட்டவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் போதெல்லாம் உயர்சாதியினரை ‘சாதி இந்துக்கள்’ என்தான் குறிப்பிடுகின்றனர். 'சாதி இந்துக்கள்' என்றால் அவர்கள் உயர்சாதியினர்; தீண்டத்தக்கவர்கள் என்பதும், தாழ்த்தப்பட்டவர்கள் என்றால் அவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்பதுதான் அதன் பொருள்.

தீண்டத்தக்கவர்கள் தங்களுக்குள் ஒருவர் மற்றொருவரை தீண்டிக் கொள்ளலாம். ஆனால் தீண்டத்தகாத தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டத்தக்க சாதி இந்துக்களை தீண்டிவிடவும் கூடாது; சாதி இந்துக்கள் தங்களை தீண்டாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இதுதான் தாழ்த்தப்பட்டவர்களின் நிலை.

அதனால்தான் பார்ப்பனப் பெண்ணை படையாச்சி பையன் காதலித்தால் கடுமையாக எதிர்க்கப்படுவதில்லை. ஆனால் படையாச்சிப் பெண்ணை பறையன் காதலித்துவிட்டால் கடித்துக்குதறுகிறார்கள். இந்த நடைமுறைதான் தீண்டாமை நிலவுவதை பறைசாற்றுகிறது.

சாதி ஒழிந்தால் தீண்டாமையும் ஒழிந்துவிடும் என்று எளிமையாகச் சொன்னாலும் அது அவ்வளவு விரைவில் நடந்துவிடக்கூடிய ஒன்றல்ல.

தீண்டாமை ஒழிப்பில் முதல் அடியை எடுத்து வைக்க வேண்டுமானால் ஐயங்காரை மலம் அள்ளவும் அருந்ததியரை அர்ச்சகராகவும் ஆக்குவதற்கான கோரிக்கை முதலில் வெற்றி பெற வேண்டும்.

சாதிப்படிநிலையில் அருந்ததியருக்கு மேலே உள்ள அனைவரும் மலம் அள்ள வேண்டும். அதேபோல ஐயங்காருக்குக் கீழே உள்ள அனைவரும் அர்ச்சகராக வேண்டும்.

எனது இந்த புத்தாண்டு கோரிக்கையை ஆதரிப்போர் மட்டும் வாழ்த்து கூறலாம்!

தொடர்புடைய பதிவுகள்:
மலத்தால் திருப்பி அடி! துடைப்பத்தைக் கைமாற்று!